வடைகறி
தேவையானவை: கடலைப்பருப்பு – 150 கிராம், பெரிய வெங்காயம் – 2 , பெரிய தக்காளி – ஒன்று, கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 5, லவங்கம், பட்டை, ஏலக்காய் – தலா 2, பிரிஞ்சி இலை – ஒன்று, சோம்பு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை – சிறிதளவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – விருப்பத்திற்கேற்ப, பொட்டுக்கடலை மாவு – 3 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: தக்காளியை நறுக்கி மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும். கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடிகட்டி உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். இட்லித் தட்டில் எண்ணெய் தடவி இந்தக் கலவையை வைத்து இட்லி போல் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு, ஏலக்காய், லவங்கம், பட்டை, பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கி, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து, சிறிது நேரம் வதக்கியவுடன், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து சிறிது நேரம் கிளறவும். பிறகு அரைத்த தக்காளி விழுது, உப்பு சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, நன்கு கொதி வந்தவுடன், வேக வைத்த கடலைப்பருப்பை ஒன்றிரண்டாக உதிர்த்து, கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி சிறிது நேரம் கொதிக்கவிடவும். கடைசியில் பொட்டுக்கடலை மாவை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.
இதை இட்லி, தோசை, ஆப்பத்துடன் பரிமாறலாம்.
வாழைப்பூ கோலா உருண்டை
தேவையானவை: வாழைப்பூ – ஒன்று, சின்ன வெங்காயம் – 100 கிராம், பச்சை மிளகாய் – தேவைக்கேற்ப, இஞ்சி - பூண்டு விழுது – 2 டீஸ்பூன், பொட்டுகடலை மாவு – 250 கிராம், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, வெள்ளை எள் அல்லது கசகசா – 100 கிராம், முந்திரி – 10, புளித்த மோர் – ஒரு கப், எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாழைப்பூவை ஆய்ந்து, நடுவில் உள்ள நரம்பு நீக்கவும். கொஞ்சம் தண்ணீரில் புளித்த மோரை ஊற்றி கலக்கி அதில் ஆய்ந்த எல்லா வாழைப்பூவையும் போடவும். பிறகு வடிகட்டி உப்பு சேர்த்து குக்கரில் போட்டு வேக வைத்து, நீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். பிறகு இதை மிக்ஸியில் ஒன்றிண்டாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மிகவும் பொடி யாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி – பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, பொடியாக நறுக்கிய முந்திரிப் பருப்பு, ஒன்றிரண்டாக அரைத்த வாழைப்பூ சேர்த்துப் பிசையவும். இதில் பொட்டுக்கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். உருட்டும் பதத்தில் வந்ததும் பொட்டுக் கடலை மாவு சேர்ப்பதை நிறுத்திவிட வேண்டும். பின்னர் இதனை எள்ளிலோ அல்லது கசகசாவிலோ உருட்டி சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். தேவைபடும்போது எண்ணெயை நன்கு காயவைத்து அதில் இந்த உருண்டைகளை போட்டு சிறிது நேரம் கிளறாமல் விட்டு, நன்கு வெந்தவுடன் இறக்கவும்.
இது, காய்கறி பிரியாணி மற்றும் சாம்பார் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
ஆலு புக்காரா
தேவையானவை: பேபி உருளைக்கிழங்கு – ஒரு பாக்கெட், இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, பெரிய வெங்காயம் – 150 கிராம், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், முந்திரிப் பருப்பு விழுது – 3 டேபிள்ஸ்பூன், வெண்ணெய், கிரீம் (விருப்பப்பட்டால்) – தலா 2 டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பேபி உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து எண்ணெயில் பொரித்தெடுத்து தனியே வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி எண்ணெயில் பொரித்தெடுத்து ஆற வைத்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இஞ்சி – பூண்டு விழுது, கீறிய பச்சை மிளகாயை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு அதில் அரைத்த வெங்காய விழுது, முந்திரி விழுதை சேர்த்து வதக்கவும். பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து… அதனுடன் சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், வறுத்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்க்கவும். குழம்பு பதம் வந்தவுடன், விருப்பப்பட்டால் வெண்ணெயும், கிரீமும் சேர்த்து, சிறிது நேரம் கொதிக்க வைத்து, கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சப்பாத்தி, நாண் ஆகியவற்றுக்கு இது சூப்பர் சைட் டிஷ்.
மூலிகை சட்னி
தேவையானவை: வல்லாரைக் கீரை – (ஆய்ந்தது), புதினா இலை – தலா ஒரு கப், கொத்தமல்லி இலை – அரை கப், கறிவேப்பிலை – சிறிதளவு, இஞ்சி – சிறிய துண்டு, பச்சை மிளகாய் – தேவைக்கேற்ப, சின்ன வெங்காயம் – 10, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 3 டீஸ்பூன், எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தோல் சீவிய இஞ்சி, கொத்தமல்லி, புதினா, கறிவேப் பிலை, வல்லாரைக் கீரை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, ஆறிய வுடன் உப்பு சேர்த்து அரைத்து எடுத்து, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக் கவும்.
சப்பாத்தி, சமோசாவுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும் இந்த சட்னி.
பகரா பேங்கன்
தேவையானவை: கத்திரிக்காய் – கால் கிலோ, தேங்காய் துருவல் – 3 டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, வெங்காயம் – 100 கிராம், தனியா – 3 டீஸ்பூன், எள், சீரகம் - தலா 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் ஸ்பூன், மிளகாய்த்தூள் – தேவைக்கேற்ப, வேர்க்கடலை – 3 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – 5 பல், எண்ணெய், சீரகம் – தாளிக்க தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் தனியா, எள், வேர்க்கடலை, சீரகம், மிளகு, முந்திரியை தனித்தனியாக வறுத்து மிக்ஸியில் சேர்த்து நைஸாக பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். இதில் நறுக்கிய இஞ்சி, பூண்டு, நறுக்கிய தக்காளி போட்டு வதக்கி… தேங்காய் துருவல் சேர்த்து மேலும் வதக்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து வதக்கி… உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு புளிக்கரைசல், அரைத்த மசாலா பொடி, மசாலா விழுது சேர்த்து வதக்கவும். மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை தாளித்து, கத்திரிக் காயுடன் சேர்த்து, எண்ணெய் தெளிந்தவுடன் இறக்கவும்.
இது… சப்பாத்தி, இட்லியுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.
ஸ்வீட் கார்ன் பனீர் கோஃப்தா
தேவையானவை: ஸ்வீட் கார்ன் – 100 கிராம், பனீர் – 50 கிராம், உருளைக்கிழங்கு – 2, முந்திரிப் பருப்பு – 10, முந்திரி விழுது – சிறிதளவு, தக்காளி விழுது – 100 கிராம், மிளகாய்த்தூள் – தேவைக்கேற்ப, வெங்காயம் – 2, சோம்பு – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், மைதா - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கொத்தமல்லி இலை – சிறிதளவு, இஞ்சி – பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் ஸ்வீட் கார்னை போட்டு ஐந்து நிமிடத்துக்குப் பிறகு எடுத்து, தண்ணீரை வடிகட்டி மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து வைக்கவும். பனீரை உதிர்த்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து மசித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மூன்றையும் ஒன்றாக சேர்த்து… அதனுடன் உப்பு, சோம்பு, நறுக்கிய பச்சை மிளகாய் சிறிதளவு, உடைத்த முந்திரி, கொத்தமல்லி இலை, மைதா, கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து தனியே வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக ஆகும் வரை வதக்கி… இஞ்சி – பூண்டு விழுது, மீதமுள்ள பச்சை மிளகாய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தக்காளி விழுது, உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பிறகு, முந்திரி விழுதையும் சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு கொதித்ததும் பொரித்து வைத்திருக்கும் உருண்டைகளை சேர்க்கவும். கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
இதை புலாவ், சாதம், சப்பாத்தி, நாண் ஆகியவற்றுக்கு சைட் டிஷ்ஷாக பரிமாறலாம்.
No comments:
Post a Comment