30 வகை சைட் டிஷ் ரெசிபி
கல்யாணத்துக்கு ஜோடிப் பொருத்தம் அமைவது போல, சாப்பாட்டுக்கு ‘சைட் டிஷ்
பொருத்தம்’ அமைவதும் ரொம்பவே அவசியம். காலையில் எழுந்த உடனேயே, ‘இன்னிக்கு என்ன சைட் டிஷ் பண்றது’ என்று கவலையோடு யோசிக்க ஆரம்பிப்பவர்கள் ஏராளம். இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவ… சமையல் கலை நிபுணர் உஷாதேவி, தனது சமையல் ஞானத்தை தீவிரமாக பயன்படுத்தி, அலசி ஆராய்ந்து ’30 வகை சைட் டிஷ்’ ரெசிபிகளை இங்கு வாரி வழங்கியிருக்கிறார்.

”சாதம், இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி, நாண் என்று எல்லாவற்றுடனும் சாப்பிடுவதற்கு விதம்விதமான சைட் டிஷ்களை கொடுத்திருக்கிறேன். இவற்றை செய்து பரிமாறினால், இந்தக் கோடையிலும் நீங்கள் பாராட்டு மழையில் நனையலாம்” என உற்சாகம் பூரிக்க சொல்கிறார் உஷாதேவி.

காரைக்குடி பேபிகார்ன் ஃப்ரை
தேவையானவை: பேபிகார்ன் – கால் கிலோ, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் – தேவைக்கேற்ப, இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன், கடலை மாவு, அரிசி மாவு – தலா ஒரு டீஸ்பூன், பெரிய வெங்காயம், பெரிய தக்காளி – தலா ஒன்று, பச்சை மிளகாய் – 2, மிளகாய்த்தூள், கரம்மசலாத்தூள் – தேவைக்கேற்ப, தனியாத்தூள் – ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், சோம்பு – ஒரு டீஸ்பூன், செட்டிநாடு பவுடர் (டிபர்ட்மென்ட் கடைகள் கிடைக்கும்) – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்த மல்லி – சிறிதளவு, எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு,
செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, கழுவிய பேபிகார்னை போட்டு 2 நிமிடம் வரை வைத்து பின் தண்ணீரை வடிகட்டி எடுத்து கார்னை நீளவாக்கில் ‘கட்’ செய்யவும். ஒரு தட்டில் குறிப்பிட்ட அளவு மிளகாய்த்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள்தூள், இஞ்சி – பூண்டு விழுது சிறிதளவு சேர்த்து, இதில் நறுக்கிய பேபி கார்னை சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசிறிக் கொள்ளவும். பேபி கார்னை வறுப்பதற்கு முன் கடலை மாவும், அரிசி மாவும் தூவி பிசிறி, நன்கு காய்ந்து கொண் டிருக்கும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித் தெடுத்து தனியே வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு சேர்த்து பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும். பிறகு இதில் மீதம் இருக்கும் இஞ்சி – பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி… மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், செட்டிநாடு பவுடர், நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கி, பின் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு இதனுடன் வறுத்த கார்னை சேர்த்து சிறிது நேரம் வதக்கி… இறக்கும்போது கொத்தமல்லி, வறுத்த கறிவேப்பிலை சேர்த்து இறக்கி பரிமாறவும்.
இது சப்பாத்தி, சாதத்துடன் சாப்பிடுவதற்கு ஏற்ற சைட் டிஷ்.
கோவைக்காய் வறுவல்
தேவையானவை: கோவைக்காய் – கால் கிலோ (நீளவாக்கில் நறுக்கவும்), மஞ்சள்தூள் – கால் ஸ்பூன், மிளகாய்த்தூள் – தேவைக்கேற்ப, சீரகக்தூள், தனியாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கோவைக்காயை நீளவாக்கில் நறுக்கி… மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், உப்பு, கறி வேப்பிலை சேர்த்துப் பிசிறி 5 நிமிடம் வைக்கவும். அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பிசிறி வைத்த கோவைக்காயை போட்டு சில நிமிடங்கள் அதிக தீயில் வைத்து மூடிவிடவும். பிறகு, தீயை மிதமான சூட்டில் வைத்து நன்கு வதக்கி, வெந்தவுடன் இறக்கவும்.
இதை தயிர்சாதம், சாம்பார்சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட… சுவை சூப்பராக இருக்கும்.
வெஜ் குருமா
தேவையானவை: கேரட் – 2, உருளைக்கிழங்கு, நூக்கல் - தலா ஒன்று, பீன்ஸ் – 10 பச்சைப் பட்டாணி – கால் கிலோ, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – ஒன்று, பச்சை மிளகாய் – தேவைக்கேற்ப, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பூண்டு – 5 பல், ஏலக்காய் – 3, பட்டை, பிரிஞ்சி இலை – தலா ஒன்று, லவங்கம் – 5, தேங்காய் – அரை மூடி, முந்திரி – 10, தனியா – ஒரு டேபிள்ஸ்பூன், கசகசா, பொட்டுக்கடலை - தலா 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், சோம்பு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கேரட், உருளைக்கிழங்கு, நூக்கல், பீன்ஸ் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மூன்றையும் சேர்த்து அரைக்கவும். ஏலக்காய், பட்டை, பிரிஞ்சி இலை, லவங்கம் ஆகியவற்றை லேசாக வறுத்துப் பொடி செய்யவும். தேங்காயுடன் முந்திரி, தனியா, கசகசா, பொட்டுக்கடலை சேர்த்து நைஸாக அரைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி, அடுப்பில் வைத்து, காய்ந்ததும் சோம்பு சேர்க்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறம் ஆகும் சமயம் பச்சை மிளகாய் – இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை சிறு தீயில் வதக்கவும். அதனுடன் நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை, பொடி செய்த மசாலா, உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பிறகு நறுக்கிய காய்கறி, பச்சைப் பட்டாணி சேர்த்து மறுபடியும் வதக்கவும். இப்போது அரைத்து வைத்திருக்கும் தேங்காய் மசாலா, மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் (உப்பு போதவில்லை என்றால் சிறிது போட்டுக் கொள்ளவும்). கொதி வந்தவுடன் குக்கரை மூடி வேக வைக்கவும். வெந்ததும் திறந்து நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
இட்லி, சப்பாத்தி, புரோட்டாவுக்கு சைட் டிஷ் ஆகவும், சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் சிறந்தது இந்த குருமா.
பீட்ரூட் பொரியல்
தேவையானவை: பெரிய சைஸ் பீட்ரூட், பெரிய வெங்காயம் – தலா ஒன்று, பச்சை மிளகாய் – 2 சர்க்கரை – 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பீட்ரூட், பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். பீட்ரூட், பச்சை மிளகாயுடன் உப்பு சேர்த்து குக்கரில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு, கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு சேர்த்து, வெடித்ததும் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் வேக வைத்த பீட்ரூட் கலவையை சேர்த்து, தண்ணீர் வற்றியதும் சர்க்கரை சேர்த்து வதக்கவும். பிறகு, சிறிதளவு தண்ணீர் விட்டு, மறுபடியும் கெட்டியாகும் வரை வதக்கி இறக்கவும்.
இந்தப் பொரியல்… சாதம், வெரைட்டி ரைஸ் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ்.
வாழைக்காய் சிப்ஸ்
தேவையானவை: வாழைக்காய் – 2 (தோல் சீவி வைக்கவும்), மஞ்சள்தூள் – சிறிதளவு, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தோல் சீவிய வாழைக்காயை நேரடியாக கடாயில் சிப்ஸ்களாக சீவவும். இவ்வாறு செய்வதால் சிப்ஸ் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் வெள்ளையாக… அதே சமயம், மொறுமொறுப்பாகவும் இருக்கும். வாழைக்காயை சீவும்போது அடுப்பை சிறு தீயிலும், பின்பு அதிகமாவும் வைத்து வறுத்தெடுக்க வேண்டும். ஒரு கப்பில் மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கலக்கி வைக்கவும் (விருப்பப்பட்டால் சிறிதளவு கறுப்பு உப்பு, சாட் மசாலாவை சேர்க்கலாம்). ஒவ்வொரு முறை சிப்ஸ் வறுத்தெடுக்கும்போதும் இந்தப் பொடியை தூவவும். கடைசியாக கறிவேப்பிலை வறுத்துப் போட்டு பரிமாறவும்.
இது வெரைட்டி ரைஸ்களுக்கு தொட்டுக்கொள்ள சிறந்தது.
குடமிளகாய் சட்னி
தேவையானவை: குடமிளகாய் பெரியது – ஒன்று, சின்ன வெங்காயம் – 100 கிராம், பச்சை மிளகாய் – 10 (அல்லது தேவைக்கேற்ப), தக்காளி சிறியது – ஒன்று, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு – தாளிக்க தேவையான அளவு, நல்லெண்ணெய் – ஒரு சிறிய குழிக்கரண்டி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: குடமிளகாயை சதுரமாக வெட்டிக் கொள்ளவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கவும். புளியை கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். அடுப்பில் அடி கனமான கடாயை வைத்து நல்லெண்ªணய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு சேர்த்து, வெடித்ததும் உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை போட்டு, அதன்பின் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதில் குடமிளகாய், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். சிறிது நேரம் வதக்கிய பின் தக்காளி சேர்த்து, மஞ்சள்தூள், உப்பு போட்டு வதக்கி, பின்னர் புளிக் கரைசலை சேர்த்து… எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு வதக்கி இறக்கவும்.
இதை உப்புமா, பொங்கல், தயிர் சாதம், வெறும் சாதத்துடன் சாப்பிடலாம்.
முட்டைகோஸ் சட்னி
தேவையானவை: முட்டைகோஸ் – கால் கிலோ, காய்ந்த மிளகாய் – 10 (அல்லது தேவைக்கேற்ப), புளி – சிறிய நெல்லிக்காய் அளவு அல்லது தக்காளி – 3, சின்ன வெங்காயம் – 10, உளுத்தம்பருப்பு – – 2 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்த மல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சின்ன வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, சூடாக்கி உளுத்தம்பருப்பை சேர்க்கவும். அது பொன்னிறம் ஆகும் சமயம் நறுக்கிய வெங்காயம், முட்டைகோஸ், காய்ந்த மிளகாய், சேர்த்து நன்கு வதக்கவும். முட்டைகோஸ் பச்சை வாசனை போனதும்… புளி,உப்பு, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும் (புளிக்கு பதில் தக்காளி விரும்புபவர்கள் இச்சமயத் தில் நறுக்கிய தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்). பிறகு அடுப்பிலிருந்து இறக்கி, ஆற விட்டு, மிக்ஸியில் அரைக்கவும். கடுகு, கறிவேப்பிலை தாளித்து, இதனு டன் சேர்த்துக் கலக்கவும்.
இந்த சட்னியை சப்பாத்தி, இட்லியுடன் பரிமாறலாம்.
வடைகறி
தேவையானவை: கடலைப்பருப்பு – 150 கிராம், பெரிய வெங்காயம் – 2 , பெரிய தக்காளி – ஒன்று, கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 5, லவங்கம், பட்டை, ஏலக்காய் – தலா 2, பிரிஞ்சி இலை – ஒன்று, சோம்பு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை – சிறிதளவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – விருப்பத்திற்கேற்ப, பொட்டுக்கடலை மாவு – 3 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: தக்காளியை நறுக்கி மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும். கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடிகட்டி உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். இட்லித் தட்டில் எண்ணெய் தடவி இந்தக் கலவையை வைத்து இட்லி போல் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு, ஏலக்காய், லவங்கம், பட்டை, பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கி, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து, சிறிது நேரம் வதக்கியவுடன், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து சிறிது நேரம் கிளறவும். பிறகு அரைத்த தக்காளி விழுது, உப்பு சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, நன்கு கொதி வந்தவுடன், வேக வைத்த கடலைப்பருப்பை ஒன்றிரண்டாக உதிர்த்து, கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி சிறிது நேரம் கொதிக்கவிடவும். கடைசியில் பொட்டுக்கடலை மாவை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.
இதை இட்லி, தோசை, ஆப்பத்துடன் பரிமாறலாம்.
வாழைப்பூ கோலா உருண்டை
தேவையானவை: வாழைப்பூ – ஒன்று, சின்ன வெங்காயம் – 100 கிராம், பச்சை மிளகாய் – தேவைக்கேற்ப, இஞ்சி - பூண்டு விழுது – 2 டீஸ்பூன், பொட்டுகடலை மாவு – 250 கிராம், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, வெள்ளை எள் அல்லது கசகசா – 100 கிராம், முந்திரி – 10, புளித்த மோர் – ஒரு கப், எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாழைப்பூவை ஆய்ந்து, நடுவில் உள்ள நரம்பு நீக்கவும். கொஞ்சம் தண்ணீரில் புளித்த மோரை ஊற்றி கலக்கி அதில் ஆய்ந்த எல்லா வாழைப்பூவையும் போடவும். பிறகு வடிகட்டி உப்பு சேர்த்து குக்கரில் போட்டு வேக வைத்து, நீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். பிறகு இதை மிக்ஸியில் ஒன்றிண்டாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மிகவும் பொடி யாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி – பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, பொடியாக நறுக்கிய முந்திரிப் பருப்பு, ஒன்றிரண்டாக அரைத்த வாழைப்பூ சேர்த்துப் பிசையவும். இதில் பொட்டுக்கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். உருட்டும் பதத்தில் வந்ததும் பொட்டுக் கடலை மாவு சேர்ப்பதை நிறுத்திவிட வேண்டும். பின்னர் இதனை எள்ளிலோ அல்லது கசகசாவிலோ உருட்டி சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். தேவைபடும்போது எண்ணெயை நன்கு காயவைத்து அதில் இந்த உருண்டைகளை போட்டு சிறிது நேரம் கிளறாமல் விட்டு, நன்கு வெந்தவுடன் இறக்கவும்.
இது, காய்கறி பிரியாணி மற்றும் சாம்பார் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
ஆலு புக்காரா
தேவையானவை: பேபி உருளைக்கிழங்கு – ஒரு பாக்கெட், இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, பெரிய வெங்காயம் – 150 கிராம், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், முந்திரிப் பருப்பு விழுது – 3 டேபிள்ஸ்பூன், வெண்ணெய், கிரீம் (விருப்பப்பட்டால்) – தலா 2 டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பேபி உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து எண்ணெயில் பொரித்தெடுத்து தனியே வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி எண்ணெயில் பொரித்தெடுத்து ஆற வைத்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இஞ்சி – பூண்டு விழுது, கீறிய பச்சை மிளகாயை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு அதில் அரைத்த வெங்காய விழுது, முந்திரி விழுதை சேர்த்து வதக்கவும். பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து… அதனுடன் சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், வறுத்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்க்கவும். குழம்பு பதம் வந்தவுடன், விருப்பப்பட்டால் வெண்ணெயும், கிரீமும் சேர்த்து, சிறிது நேரம் கொதிக்க வைத்து, கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சப்பாத்தி, நாண் ஆகியவற்றுக்கு இது சூப்பர் சைட் டிஷ்.
மூலிகை சட்னி
தேவையானவை: வல்லாரைக் கீரை – (ஆய்ந்தது), புதினா இலை – தலா ஒரு கப், கொத்தமல்லி இலை – அரை கப், கறிவேப்பிலை – சிறிதளவு, இஞ்சி – சிறிய துண்டு, பச்சை மிளகாய் – தேவைக்கேற்ப, சின்ன வெங்காயம் – 10, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 3 டீஸ்பூன், எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தோல் சீவிய இஞ்சி, கொத்தமல்லி, புதினா, கறிவேப் பிலை, வல்லாரைக் கீரை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, ஆறிய வுடன் உப்பு சேர்த்து அரைத்து எடுத்து, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக் கவும்.
சப்பாத்தி, சமோசாவுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும் இந்த சட்னி.
பகரா பேங்கன்
தேவையானவை: கத்திரிக்காய் – கால் கிலோ, தேங்காய் துருவல் – 3 டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, வெங்காயம் – 100 கிராம், தனியா – 3 டீஸ்பூன், எள், சீரகம் - தலா 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் ஸ்பூன், மிளகாய்த்தூள் – தேவைக்கேற்ப, வேர்க்கடலை – 3 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – 5 பல், எண்ணெய், சீரகம் – தாளிக்க தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் தனியா, எள், வேர்க்கடலை, சீரகம், மிளகு, முந்திரியை தனித்தனியாக வறுத்து மிக்ஸியில் சேர்த்து நைஸாக பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். இதில் நறுக்கிய இஞ்சி, பூண்டு, நறுக்கிய தக்காளி போட்டு வதக்கி… தேங்காய் துருவல் சேர்த்து மேலும் வதக்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து வதக்கி… உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு புளிக்கரைசல், அரைத்த மசாலா பொடி, மசாலா விழுது சேர்த்து வதக்கவும். மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை தாளித்து, கத்திரிக் காயுடன் சேர்த்து, எண்ணெய் தெளிந்தவுடன் இறக்கவும்.
இது… சப்பாத்தி, இட்லியுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.
ஸ்வீட் கார்ன் பனீர் கோஃப்தா
தேவையானவை: ஸ்வீட் கார்ன் – 100 கிராம், பனீர் – 50 கிராம், உருளைக்கிழங்கு – 2, முந்திரிப் பருப்பு – 10, முந்திரி விழுது – சிறிதளவு, தக்காளி விழுது – 100 கிராம், மிளகாய்த்தூள் – தேவைக்கேற்ப, வெங்காயம் – 2, சோம்பு – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், மைதா - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கொத்தமல்லி இலை – சிறிதளவு, இஞ்சி – பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் ஸ்வீட் கார்னை போட்டு ஐந்து நிமிடத்துக்குப் பிறகு எடுத்து, தண்ணீரை வடிகட்டி மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து வைக்கவும். பனீரை உதிர்த்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து மசித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மூன்றையும் ஒன்றாக சேர்த்து… அதனுடன் உப்பு, சோம்பு, நறுக்கிய பச்சை மிளகாய் சிறிதளவு, உடைத்த முந்திரி, கொத்தமல்லி இலை, மைதா, கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து தனியே வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக ஆகும் வரை வதக்கி… இஞ்சி – பூண்டு விழுது, மீதமுள்ள பச்சை மிளகாய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தக்காளி விழுது, உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பிறகு, முந்திரி விழுதையும் சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு கொதித்ததும் பொரித்து வைத்திருக்கும் உருண்டைகளை சேர்க்கவும். கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
இதை புலாவ், சாதம், சப்பாத்தி, நாண் ஆகியவற்றுக்கு சைட் டிஷ்ஷாக பரிமாறலாம்.
வாழைக்காய் சட்னி
தேவையானவை: வாழைக்காய் – ஒன்று, காய்ந்த மிளகாய் – 8, பெரிய வெங்காயம் – ஒன்று, சின்ன வெங்காயம் – 10, பூண்டு – ஒரு பல், தக்காளி – 2, புளி – சிறிதளவு, சோம்பு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை – சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாழைக்காயை வேக வைத்து, தோலுரித்து, கட்டியில்லாமல் பிசைந்து வைத்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாய், பூண்டு, புளி, சோம்பு ஆகியவற்றை ஒன்றுசேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து… நறுக்கிய பெரிய வெங்காயம், சின்ன வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். பின்னர் இதில் நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அரைத்த மசாலா விழுது, மசித்த வாழைக்காய் போட்டு வதக்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வதக்கி, எண்ணெய் தெளிந்தவுடன் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்
இதை… இட்லி, தோசையுடன் பரிமாறலாம்.
உருளைக்கிழங்கு மசாலா
தேவையானவை: உருளைக்கிழங்கு – கால் கிலோ, தேங்காய் துருவல் – ஒரு கப் (பால் எடுக்கவும்), காய்ந்த மிளகாய் – 5, தனியா – 2 டீஸ்பூன், முந்திரி – 10, வெங்காயம் – ஒன்று, கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை கழுவி, குக்கரில் வேக வைத்து, தோலுரித்து நறுக்கி கொள்ளவும். காய்ந்த மிளகாய், தனியா, முந்திரியுடன் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு போட்டு, வெடித்ததும் உளுத்தம்பருப்பு, இஞ்சி – பூண்டு விழுது, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, வதங்கியவுடன் அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கவும். பிறகு தேங்காய்ப் பால், வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து… கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு போட்டு எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.
கடாய் பனீர்
தேவையானவை: பனீர் – கால் கிலோ, குடமிளகாய், வெங்காயம், தக்காளி – தலா 2, சோம்பு – ஒரு டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
மசாலா பொடி தயாரிக்க: காய்ந்த மிளகாய் – 5, தனியா – 2 டீஸ்பூன், லவங்கம், பட்டை, ஏலக்காய் – தலா 2, சோம்பு – ஒரு டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: மசாலா பொடி தயாரிக்க கொடுத்துள்ளவற்றை வறுத்து ஒன்றிரண்டாக பொடி செய்து கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய ஒரு வெங்காயம், நறுக்கிய 2 குடமிளகாய், பனீரை தனித்தனியே வதக்கி எடுத்து கொள்ளவும். பிறகு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சோம்பு போட்டு தாளித்து… பொடியாக நறுக்கிய மற்றொரு வெங்காயத்தை நன்கு வதக்கி, இஞ்சி – பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். பிறகு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு, நறுக்கிய தக்காளி, மசாலா பொடியை போட்டு வதக்கி, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து, அதனுடன் வதக்கி வைத்திருக்கும் பனீர், வெங்காயம், குடமிளகாய் சேர்த்து மேலும் வதக்கி… எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.
இது… சப்பாத்தி, நாண் ஆகியவற்றுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
பப்பாளி சாலட்
தேவையானவை: பப்பாளி – ஒன்று (செங்காய் பதத்தில் தேர்வு செய்யவும்), முளைகட்டிய பச்சைப் பயறு – 50 கிராம், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, இஞ்சி – சிறிய துண்டு, கொத்தமல்லி – சிறிதளவு, தேன் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பப்பாளியை ‘கட்’ செய்து இட்லி குக்கரில் வேக வைத்து எடுக்கவும். பின்னர் முளைகட் டிய பச்சைப் பயறையும் வேக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தேன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, சுத்தம் செய்து நீளமாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக் கிய கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்துக் கலக்கவும். இதனுடன் வேக வைத்த பப்பாளி மற்றும் பச்சைப் பயறு சேர்த்துக் கிளறி, அப்படியே பரிமாறவும்.
சேப்பங்கிழங்கு சாப்ஸ்
தேவையானவை: சேப்பங்கிழங்கு – அரை கிலோ, வெங்காயம், பச்சை மிளகாய் – தலா 2, கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி அளவு, கசகசா – 3 டீஸ்பூன், சோம்பு – ஒரு டீஸ்பூன், முந்திரி – 10, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் அல்லது கறி பவுடர் – ஒரு டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சேப்பங்கிழங்கை கழுவி குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைத்து, தோலுரித்து நீளமாக நறுக்கி கொள்ளவும். அடுப்பில் எண்ணெயை காய வைத்து நறுக்கிய கிழங்கை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு சிவக்க வறுத்து எடுத்து, அதில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்க்கவும். கடாயில் கசகசா, சோம்பு, முந்திரி போட்டு வறுத்து, மிக்ஸியில் பொடியாக்கிக் கொள்ளவும். பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
கடாயில் கொஞ்சம் அதிகமாக எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காய விழுதைப் போட்டு நன்கு வதக்கி, அதனுடன் ஒன்றன் பின் ஒன்றாக இஞ்சி – பூண்டு விழுது, கசகசா பொடி, கரம் மசாலாத்தூள் அல்லது கறி பவுடர் சேர்த்து நன்கு வதக்கி (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளவும்), வறுத்த சேப்பங்கிழங்கை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
இதனை புலாவ், சாம்பார் சாதத்துடன் சாப்பிட… சுவை அசத்தலோ அசத்தல்!
தயிர் வெண்டைக்காய்
தேவையானவை: வெண்டைக்காய் – கால் கிலோ, தக்காளி – ஒன்று, மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, வெங்காயம் – 2, சீரகம் – ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், தயிர் – ஒரு கப், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், நெய் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு,

செய்முறை: வெண்டைக்காயை கழுவி துடைக் கவும். பின்னர் நடுவில் கீறி விதையை எடுத்து விடவும். தட்டில் சிறிதளவு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். இந்த கலவையை கீறிய வெண்டைக் காயில் தடவவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மசாலா தடவிய வெண்டைக்காயை போட்டு, சிறு தீயில் வதக்கி, வெந்தவுடன் எடுத்து தனியே வைக்கவும். கடாயில் நெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், இஞ்சி – பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். பின் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி, மீதமுள்ள கரம்மசாலா, மஞ்சள்தூள், சீரகத்தூள், மிளகாய்த் தூள், மிளகுத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். பிறகு, வதக்கி வைத்திருக்கும் வெண்டைக்காய் சேர்த்து… தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்து, நன்கு கிளறி, தீயை அணைத்து, தயிரை நன்கு அடித்து இதில் சேர்த்து கலந்து, மறுபடியும் அடுப்பில் வைத்து சிறுதீயில் கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்தவுடன் இறக்கி, கொத்தமல்லி தூவவும்.
இதை சப்பாத்தியுடன் பரிமாறலாம்.
பீர்க்கங்காய் கொத்சு
தேவையானவை: பீர்க்கங்காய் – அரை கிலோ, புளி – நெல்லிக்காய் அளவு, பச்சை மிளகாய் – 3, சின்ன வெங்காயம் – 10, கடுகு – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பீர்க்கங்காயை தோல் சீவி நறுக்கி உப்பு, மஞ்சள்தூள், பச்சை மிளகாய் சேர்த்து, ஒரு பாத்திரத்தில் வேக வைத்து, மசித்துக் கொள்ளவும். பிறகு கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு தாளித்து, புளிக்கரைசலை சேர்க்கவும். அதில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மிளகுதூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கி…. சாதத்துடன் பரிமாறவும்.
உருளைக்கிழங்கு ஸ்டூ
தேவையானவை: உருளைக்கிழங்கு – கால் கிலோ, பச்சை மிளகாய் – 3, தேங்காய் – அரை மூடி, இஞ்சி – சிறிதளவு, மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை கழுவி, தோல் சீவி நறுக்கவும். தேங்காயை துருவி கொஞ்ச மாக தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்து பால் எடுத்து தனியே வைக்கவும். மறுபடியும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்தால் இரண்டாவது பால் கிடைக் கும். இந்த தேங்காய்ப் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, நறுக்கிய உருளைக்கிழங்கு, உப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி போட்டு வேக வைக்கவும். வெந்த உருளைக்கிழங்கை மசித்து… கீறிய பச்சை மிளகாய், மிளகுத்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். இறக்கு வதற்கு முன் முதல் தேங்காய்ப் பாலை ஊற்றி, கொதி வரும் போது இறக்கிவிடவும்.
இதனை இட்லி, இடியாப்பத்துடன் சாப்பிடலாம்.
மாங்காய் பச்சடி
தேவையானவை: மாங்காய் – அரை கிலோ, பச்சை மிளகாய் – 6 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), வெங்காயம் – ஒன்று, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, சர்க்கரை – 50 கிராம், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: குக்கரில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் உளுத்தம்பருப்பு சேர்த்து, சிவந்தவுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். அதில் நறுக்கிய மாங்காய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின்னர் தண்ணீர் சேர்த்து மூடி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும். ஆறியவுடன் மசித்து, சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும். கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.
பூண்டு சட்னி
தேவையானவை: பூண்டுப் பல் – ஒரு கப், காய்ந்த மிளகாய் – தேவைக்கேற்ப, புளி – எலுமிச்சை அளவு, கடுகு – ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – இரண்டு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் கொஞ்சம் எண்ணெயை விட்டு, காய்ந்ததும் பூண்டு சேர்த்து வதக்கி, அதனுடன் புளி, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து நன்கு வதக்கி ஆற வைத்து, மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். பின்னர் மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையை தாளித்து, அரைத்து வைத்திருக்கும் சட்னியில் சேர்க்கவும்.
இதை இட்லி, தோசை, தயிர் சாதத்துக்கு தொட்டு சாப்பிடலாம்.
அவியல்
தேவையானவை: முருங்கைக்காய், கேரட், வாழைக்காய் – தலா ஒன்று, பீன்ஸ் – 5, சேனைக்கிழங்கு – 100 கிராம், பச்சை மிளகாய் – 5, சீரகம் – இரண்டு டீஸ்பூன், தேங்காய் – அரை மூடி (துருவிக் கொள்ளவும்), தயிர் – ஒரு கப், பூண்டு – 3 பல், கடுகு அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை – சிறிதளவு, தேங்காய் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முதலில் காய்கறிகளைக் கழுவி, ஒன்று போல் நறுக்கி, பாத்திரத்தில் போட்டு, அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, மூடி போட்டு வேக வைத்து எடுக்கவும். தேங்காய் துருவலுடன், பூண்டு, பச்சை மிளகாய், சீரகம், சேர்த்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்தெடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து, அரைத்த விழுதைப் போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு வெந்த காய்கறிகளையும் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி, தயிர் சேர்த்துக் கிளறவும்.
இதனை ஆப்பம், தோசை, சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.
மஷ்ரூம் ரெட் கறி
தேவையானவை: மஷ்ரூம் – 100 கிராம், பேபிகார்ன் அல்லது பனீர் – 50 கிராம், காய்ந்த மிளகாய் – 10, வெங்காயம் – 2, இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – 10 பல், தேங்காய்ப் பால் – 2 கப், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் தண்ணீர் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு, ஒரு கொதி வந்தவுடன் வெங்காயத்தை எடுத்து, இஞ்சி – பூண்டுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் சிறிது தண்ணீர் ஊற்றி அதில் காய்ந்த மிளகாய் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி மிளகாயை ஆற வைத்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அரைத்த வெங்காயத்தை போட்டு வதக்கவும். பின்னர் அதனுடன் அரைத்த மிளகாயை சேர்த்து நன்கு வதக்கி, மஷ்ரூம் சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு, தேங்காய்ப் பால், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். அதனுடன் நறுக்கிய பேபிகார்ன் அல்லது வறுத்த பனீரை சேர்த்து எல்லாம் வெந்தவுடன் இறக்கவும்.
இதை… சாதம், புலாவ் ஆகியவற்றுடன் பரிமாறலாம்.
பருப்பு தண்ணி மசாலா
தேவையானவை: கடலைப்பருப்பு – 100 கிராம், வெங்காயம் – 2, இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், தக்காளி, பச்சை மிளகாய் – தலா 2, சோம்பு, சீரகம் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 3 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் – 2 டீஸ்பூன், கறி பவுடர் – 3 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடலைப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து…. பருப்பு தண்ணீரை தனித்தனியாக எடுத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், நீளமாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, மிக்ஸியில் போட்டு, தண்ணீர் விட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும். தக்காளியை நெருப்பில் சுட்டு தோலுரித்து அதையும் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், சோம்பு, கறிவேப்பிலை, இஞ்சி – பூண்டு விழுது, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதில் மிளகாய்தூள், தனியாத்தூள், கறி பவுடர் சேர்த்து வதக்கி, அரைத்த தக்காளி விழுதைப் போட்டு நன்கு எண்ணெய் தெளிய வதக்கவும். பிறகு உப்பு சேர்த்து, பருப்பு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிட்டு, வெந்த முழு பருப்பு கொஞ்சம் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கி, எலுமிச்சைச் சாறு பிழிந்து கிளறி இறக்கவும்.
இதை சப்பாத்தி, இட்லிக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.
பட்டர்பீன்ஸ் பொரியல்
தேவையானவை: பட்டர் பீன்ஸ் – கால் கிலோ, வெங்காயம் – ஒன்று, முந்திரி – 5, கசகசா, சோம்பு – தலா ஒரு டீஸ்பூன், பட்டை, லவங்கம் – தலா ஒன்று, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பட்டர் பீன்ஸை கழுவி குக்கரில் போட்டு, தேவையான தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள் தூவி மூடி இரண்டு விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும். தேங்காய் துருவலுடன் முந்திரி, கசகசா, சோம்பு, லவங்கம், பட்டை, தண்ணீர் சேர்த்து மையாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி, அரைத்த தேங்காய் மசாலா, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கி, வேக வைத்த பட்டர் பீன்ஸை தண்ணீருடன் சேர்த்துக் கிளறி, எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
இது… சாதம், சப்பாத்திக்கு ஏற்ற சை டிஷ்.
கீரை கூட்டு
தேவையானவை: சிறுகீரை – ஒரு கட்டு, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, வறுத்த பயத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: குக்கரில் பயத்தம்பருப்புடன் மஞ்சள்தூள், ஆய்ந்தெடுத்து கழுவிய கீரையை போட்டு, கீறிய பச்சை மிளகாயையும் சேர்த்து வேக வைத்து எடுத்து கொள்ளவும். தேங்காய், சீரகத்தை சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, பின்னர் தேங்காய் – சீரக விழுது சேர்த்து சிறிது நேரம் வதக்கி, வெந்த பருப்பு – கீரையை சேர்த்து, உப்பு போட்டு, கெட்டியானதும் இறக்கவும்.
இது, சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
காளான் வதக்கல்
தேவையானவை: காளான் – ஒரு பாக்கெட், வெங்காயம் – ஒன்று, மிளகு – 2 டீஸ்பூன் (பொடித்துக் கொள்ளவும்), மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், கரம் மசலாத்தூள் – ஒரு டீஸ்பூன், பூண்டு – 2 பல், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: காளானை கழுவி நறுக்கி அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து சிறிது நேரம் வைக்கவும். தேங்காயை கொரகொரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தட்டிய பூண்டு போட்டு, பின்னர் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி, கலந்து வைத்துள்ள காளானை சேர்த்து நன்கு வதக்கவும். காளான் பாதி வெந்த வுடன் அரைத்த தேங்காயை சேர்த்து, உப்பு போட்டு வதக்கவும். சுருள வதங்கியவுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கவும்.
இதை சாப்பாத்திக்கு தொட்டு சாப்பிடலாம்.
கொத்தமல்லி துவையல்
தேவையானவை: கொத்தமல்லி – ஒரு கட்டு, காய்ந்த மிளகாய் – 10 (அல்லது தேவைக்கேற்ப), புளி – நெல்லிக்காய் அளவு, கடுகு – ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – இரண்டு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் சிறிது எண்ணெயை காய வைத்து, உளுத்தம்பருப்பு சேர்த்து வறுபட்டவுடன், காய்ந்த மிளகாய், புளி, உப்பு, கழுவிய கொத்தமல்லி இலையை போட்டு வதக்கி, பிறகு மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். மீதமுள்ள எண்ணெயை கடாயில் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டு, வெடித்ததும் கறிவேப்பிலை சேர்த்து, அரைத்து வைத்திருக்கும் விழுதைப் போட்டு நன்கு சுருள வதக்கி இறக்கவும்.
இது… இட்லி, தயிர் சாதம், பிரியாணிக்கு ஏற்ற சைட் டிஷ்.
தொகுப்பு: பத்மினி, படங்கள்: எம்.உசேன்
ஃபுட் டெகரேஷன்: ‘செஃப்’ ரஜினி
நன்றி – விகடன்
மின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்
வேலைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி… காலையில் கண்
விழித்த உடனேயே, ‘சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வதற்கும் என்ன சமையல் செய்வது’ என்ற பரபரப்புடன் ஆரம்பித்துவிடுகிறது… கடிகாரத்துடனான ஓட்டப் பந்தயம்! இந்தப் பந்தயத்தில் நீங்கள் வெற்றிக் கோட்டை தொடுவதற்கு உதவும் வகையில், மிகவும் குறைந்த நேரத்தில் தயாரிக்கக்கூடிய ’30 வகை திடீர் சமையல்’ .ரெசிபிகளுடன் வந்து உதவிக்கரம் நீட்டுகிறார் சமையல் கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.
”உடனடியாக செய்யக்கூடிய இந்த ரெசிபிகளை, முடிந்த அளவு உடலுக்கு ஊட்டச் சத்து தரும் பொருட்களை கொண்டு தயாரித்து அளித்திருக்கிறேன். இவற்றை செய்து பரிமாறுங்க… நீங்களும் தேவையான அளவு சாப்பிட மறந்துடாதீங்க” என்று பரிவுடன் கூறும் ஆதிரையின் ரெசிபிகளை, பிரமாதமாக அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி.
மீல்மேக்கர் டிக்கிஸ்
தேவையானவை: மீல்மேக்கர் – 20, இஞ்சி – சிறு துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), பூண்டு – 6 பல், பச்சை மிளகாய் – 3, வெங்காயம் – ஒன்று, மைதா மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், பிரெட் தூள், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும். மீல்மேக்கரை கொதி நீரில் 2 நிமிடம் போட்டு எடுத்து, பச்சைத் தண்ணீரில் இருமுறை நன்கு அலசி தண்ணீரை நன்றாகப் பிழிந்து எடுக்கவும். இதனுடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ளவும். பிறகு, பொடியாக நறுக்கிய வெங்காயம், மைதா சேர்த்து நன்கு பிசைந்து, விரும்பிய வடிவத்தில் தட்டி, பிரெட் தூளில் புரட்டிக் கொள்ளவும். தவாவில் சிறிதளவு எண்ணெய் விட்டு, புரட்டி எடுத்த டிக்கிஸை போட்டு இருபுறமும் பொன்னிறமானதும் எடுக்கவும்.
கீரை தால் கிரிஸ்பி
தேவையானவை: கடலைப்பருப்பு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 2, பெருஞ்சீரகம் – ஒரு டீஸ்பூன், பூண்டு – 2 பல், முருங்கைக்கீரை – ஒரு கப் (ஆய்ந்தது), பொட்டுக்கடலைப் பொடி – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், வெங்காயம் – ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்), நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து… காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம், பூண்டு, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து… வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி, அரைத்த கடலைப்பருப்பு விழுது, பொட்டுக்கடலைப் பொடி சேர்த்து நன்கு கிளறி, ஆய்ந்த கீரையை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு புரட்டி… பிறகு இறக்கி, சுடச்சுட பரிமாறவும்.
மூங்தால் பனீர் சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், பாசிப்பருப்பு – முக்கால் கப், பனீர் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய், பூண்டு – தலா 2 (மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும்), எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை குக்கரில் 2 விசில் வரும் வரை வேக விட்டு எடுத்து, ஆறியதும் மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு… பூண்டு – பச்சை மிளகாய் விழுதை நன்கு வதக்கவும். பிறகு, அரைத்த பாசிப்பருப்பு விழுது, பனீர் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

கோதுமை மாவில் நெய் மற்றும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து மெல்லிய சப்பாத்திகளாக திரட்டவும். ஒரு சப்பாத்தியின் நடுவே பாசிப்பருப்பு – பனீர் கலவையை வைத்து அதன் மேலே இன்னொரு சப்பாத்தி வைத்து ஓரங்களை நன்கு ஒட்டி, தவாவில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
ஆலு ஸ்டஃப்டு சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், நெய் – ஒரு டேபிள் ஸ்பூன், உருளைக்கிழங்கு – 2, சீரகம், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய், வெங்காயம் – தலா ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வேக வைத்து, நன்கு மசித்த உருளைக்கிழங்கு, சீரகம், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பச்சை மிளகாய், வெங்காயம், சிறிதளவு உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். கோதுமை மாவில் நெய், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கிண்ணங்களாக செய்து, நடுவே உருளைக்கிழங்கு கலவையை வைத்து மூடி, சப்பாத்திகளாக திரட்டி, தவாவில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
ஓட்ஸ் அடை
தேவையானவை: புழுங்கல் அரிசி, ஓட்ஸ், துவரம்பருப்பு, பாசிப்பருப்பு – தலா அரை கப், வெங்காயம் – 3 (மிகவும் பொடியாக நறுக்கவும்), காய்ந்த மிளகாய் – 4, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை தனியாகவும், பருப்புகளை ஒன்று சேர்த்தும் 2 மணி நேரம் ஊற வைத்து… காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும். ஓட்ஸை அரை மணி நேரம் ஊற வைத்து இதனுடன் சேர்க்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், கறிவேப்பிலையை வதக்கி மாவில் சேர்க்கவும். தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, மாவை அடைகளாக வார்த்து, இருபுறமும் சிவந்த பின் எடுக்கவும்.
ஸ்வீட் சோயா
தேவையானவை: சோயா உருண்டைகள் – 20 (வேக வைத்து, நீரைப் பிழிந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்), பொடித்த பனங்கற்கண்டு – 100 கிராம், மைதா – கால் கப், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ் பூன், நெய், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: மைதாவை தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் சேர்த்து, சோயாவை போட்டு லேசாக வதக்கி, பொடித்த பனங்கற்கண்டை சேர்த்து நன்கு சுருள கிளறவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி… ஆறியதும் உருண்டைகளாக பிடிக்கவும். மைதா கரைசலில் உருண்டகளைத் தோய்த்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
புதினா மசாலா சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், பொடியாக நறுக்கிய புதினா, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – தலா ஒரு கைப்பிடி, இஞ்சி – சிறு துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), பூண்டு – 3 பல், பச்சை மிளகாய் – 2, நெய் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: புதினா, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கோதுமை மாவுடன் அரைத்த விழுது, நெய், கொஞ்சம் உப்பு மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு தளர பிசையவும். மாவை சின்னச் சின்ன சப்பாத்திகளாக திரட்டி, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.
வாழைப்பூ வெங்காய அடை
தேவையானவை: புழுங்கல் அரிசி – ஒரு கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா அரை கப், இஞ்சி – சிறு துண்டு (சுத்தம் செய்யவும்), பூண்டு – 4 பல், காய்ந்த மிளகாய் – 6, பெருஞ்சீரகம் – ஒரு டீஸ்பூன், சிறிய வாழைப்பூ - ஒன்று (நரம்புகளை எடுத்துவிட்டு, சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), துருவிய சீஸ் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை தனியாகவும், பருப்புகளை ஒன்று சேர்த்தும் 2 மணி நேரம் ஊறவிடவும். முதலில் அரிசியை மிக்ஸியில் போட்டு சிறிது நேரம் ஓடவிட்டு, பிறகு பருப்புகள், இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம், உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கி, பிறகு வாழைப்பூ சேர்த்து வதக்கி… இதை மாவில் கொட்டி கலந்து கொள்ளவும்.
தோசைக்கல்லில் மாவை அடைகளாக ஊற்றி, மேலே சிறிது சீஸ் சேர்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.
பிரெட் வித் ஸ்வீட் கார்ன் கிரேவி
தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் – 10, ஸ்வீட் கார்ன் – 2, பெரிய வெங்காயம் – 2 (மிகவும் பொடியாக நறுக்கவும்), இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், தக்காளி சாஸ் – அரை கப், வெண்ணெய், ஃப்ரெஷ் க்ரீம் – தலா 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை, உப்பு – சிறிதளவு.

செய்முறை: ஸ்வீட் கார்னுடன் சிறிது உப்பு சேர்த்து வேகவிடவும். முத்துக்களை உதிர்த்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு வெண்ணெய் விட்டு, உருகியதும் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், தக்காளி சாஸ், சர்க்கரை, உப்பு, உதிர்த்த கார்ன் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கி (தேவைப்பட்டால் சிறிது நீர் சேர்த்துக் கொள்ளலாம்), ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்கவும்.
பிரெட் ஸ்லைஸில் வெண்ணெய் தடவி தவாவில் டோஸ்ட் செய்து, அதன்மேல் கார்ன் கிரேவியை பரவலாக சேர்த்துப் பரிமாறவும்.
மேத்தி சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கடலை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயக் கீரை – 2 சிறிய கட்டு (இலைகளை மட்டும் ஆய்ந்து, சுத்தம் செய்யவும்), மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், அம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) – 2 டீஸ்பூன், நெய் சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் (எண்ணெய் நீங்கலாக) ஒன்று சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சின்னச் சின்ன சப்பாத்திகளாக திரட்டி, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
இதற்கு ஆனியன் ராய்தா சிறந்த காம்பினேஷன்.
காரசார வேர்க்கடலை பொடி
தேவையானவை: வறுத்து, தோல் நீக்கிய வேர்க்கடலை – 2 கப், வறுத்த வெள்ளை எள் – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6 (வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும்), பூண்டு – 6 பல், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்தெடுக்கவும். சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு வேர்க்கடலைப் பொடியைப் போட்டு பிசைந்து சாப்பிட… சுவை அள்ளும்!
ஆந்திரா பருப்பு பொடி
தேவையானவை: பொட்டுக்கடலை – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 6, சீரகம் – அரை டேபிள்ஸ்பூன், பூண்டு – 4 பல், உப்பு – சிறிதளவு.

செய்முறை: வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், சீரகத்தை வறுத்தெடுக்கவும். முதலில் மிக்ஸியில் மிளகாயை பொடித்து, பிறகு அதனுடன் சீரகம், பூண்டு, பொட்டுக்கடலை, உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். சூடான சாதத்தில் இந்த பொடியைப் போட்டு சிறிது நெய் சேர்த்து சாப்பிட்டால்… சூப்பர் சுவையில் இருக்கும்.
மசாலா இட்லி
தேவையானவை: இட்லி – 10, வெங்காயம், தக்காளி – தலா 2, கேரட் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய்ப் பொடி, சாம்பார் பொடி, கரம்மசாலா பொடி – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும், இட்லிகளை ஓர் அங்குல சதுர துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்து தனியே எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, கேரட் துருவல், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மிளகாய்ப் பொடி, சாம்பார் பொடி, கரம்மசாலா பொடி, உப்பை சேர்த்து வதக்கவும் (கொஞ்சம் நீர் தெளித்துக் கொள்ளலாம்). இதனுடன் பொரித்த இட்லி துண்டுகளை சேர்த்து ஒரு புரட்டு புரட்டி… சுடச்சுட பரிமாறவும்.
மல்ட்டி கிரெய்ன்ஸ் பொடி
தேவையானவை: பச்சைப்பயறு, வேர்க்கடலை, கறுப்பு உளுந்து, வெள்ளை சோளம், கடலைப்பருப்பு, பச்சரிசி, புழுங்கல் அரிசி – தலா கால் கப், காய்ந்த மிளகாய் – 8, பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு,

செய்முறை: தானிய வகைகளை வெறும் வாணலியில் தனித்தனியே நன்கு வறுத்தெடுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும்… காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து, அனைத்து தானியங்கள் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் நைஸாக பொடிக்கவும்.
இந்தப் பொடியை சூடான சாதத்துடன் சேர்த்து, சிறிது நெய் விட்டு கலந்து சாப்பிடலாம்.
ஹனி சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், தேன் – ஒரு கப், வெள்ளை எள் – ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெள்ளை எள்ளை வெறும் வாணலியில் லேசாக வறுத்தெடுக்கவும். கோதுமை மாவுடன் தேன், நெய், வறுத்த எள், தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும். பிசைந்த மாவை சின்னச் சின்ன சப்பாத்திகளாக திரட்டி, தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.
கிரீன் ரெட் சாண்ட்விச்
தேவையானவை: பிரெட் ஸ்லைஸ்கள் – 10, புதினா சட்னி – 2 டேபிள்ஸ்பூன், டொமெட்டோ சாஸ் – 2 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: பிரெட்டின் இருபக்கமும் நன்கு பரவலாக வெண்ணெய் தடவவும். ஒரு பக்கம் புதினா சட்னி தடவி, இன்னொரு பிரெட் ஸ்லைஸால் மூடி, அந்த பிரெட் ஸ்லைஸின் மேல் வெண்ணெய் தடவி அதன் மறுபக்கத்தில் டொமெட்டோ சாஸ் தடவி இன்னொரு பிரெட் ஸ்லைஸால் மூடி விரும்பிய வடிவத்தில் கட் செய்து பரிமாறவும்.
கேழ்வரகு முருங்கைக்கீரை அடை
தேவையானவை: கேழ்வரகு மாவு – ஒரு கப், ஆய்ந்த முருங்கைக்கீரை (ஃப்ரெஷ்) – அரை கப், வெங்காயம், பச்சை மிளகாய் – தலா ஒன்று, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும், வாணலியில் எண்ணெய் விட்டு… வெங்காயம், பச்சை மிளகாயை நன்கு வதக்கி, கேழ்வரகு மாவுடன் சேர்க்கவும். அடுப்பை அணைத்த பிறகு வாணலியின் அந்த சூட்டிலேயே முருங்கைக் கீரையைப் போட்டு, அதையும் ஒரு புரட்டு புரட்டி மாவில் சேர்க்கவும். பிறகு, உப்பு சேர்க்கவும். மாவில் கொஞ்சம் தண்ணீர் விட்டு சற்று தளர பிசைந்து, தவாவில் மெல்லிய அடைகளாகத் தட்டி, இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவிடவும். வெந்த பின் சுடச்சுட பரிமாறவும்.
நியூட்ரிஷியஸ் நூடுல்ஸ்
தேவையானவை: நூடுல்ஸ் – ஒரு பாக்கெட், வெங்காயம், கேரட் – தலா ஒன்று, பீன்ஸ் – 6, வேக வைத்த பச்சைப் பட்டாணி – ஒரு கைப்பிடி, சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன், டொமெட்டோ சாஸ் – 2 டீஸ்பூன், பூண்டு – 2 பல் (நன்கு தட்டி கொள்ளவும்), காய்ந்த மிளகாய் – ஒன்று (ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும்), எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், கேரட், பீன்ஸை மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும். காய்ந்த மிளகாயை ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும். கொதிக்கும் நீரில் நூடுல்ஸைப் போட்டு வேக வைத்து நீரை நன்கு வடித்து விடவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் சோயா சாஸ்,
டொமெட்டோ சாஸ், பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மேலும் வதக்கி… கடைசியாக நூடுல்ஸை சேர்த்து நன்கு கிளறி, சுடச்சுட பரிமாறவும்.
முந்திரி பொடி
தேவையானவை: முந்திரி – 20, பாதாம் – 10, வெள்ளரி விதை, பொட்டுக்கடலை, கொப்பரைத் துருவல் – தலா கால் கப், காய்ந்த மிளகாய் – 6, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – 2 ஆர்க்கு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் வெள்ளரி விதை, கொப்பரைத் துருவல் இரண்டையும் தனித்தனியே வறுத்தெடுக்கவும் பொட்டுக்கடலையை வாணலியில் லேசாக ஒரு புரட்டு புரட்டி எடுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பெருங்காயம், காய்ந்த மிளகாயை நன்கு வறுக்கவும். பிறகு முந்திரி, பாதாமை வறுத்தெடுக்கவும். அதன்பின் கறிவேப்பிலையையும் வறுத்து எடுக்கவும். அனைத்துப் பொருட்களையும் ஒன்று சேர்த்து, உப்பு போட்டு, மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக பொடிக்கவும்.
இந்தப் பொடியை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால்… அசத்தலான டேஸ்ட்டில் இருக்கும்.
பட்டாணி ஊத்தப்பம்
தேவையானவை: தோசை மாவு – 4 கப், துருவிய கேரட், வேக வைத்த பச்சைப் பட்டாணி – தலா அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – தலா ஒன்று, கடுகு – அரை டீஸ்பூன், கொத்தமல்லி, எண்ணெய், உப்பு – சிறிதளவு.

செய்முறை: வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து… வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறி, தோசை மாவில் கொட்டி, சிறிது உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். தவாவில் மாவை சற்று தடிமனாக வார்த்து… மேலே கேரட் துருவல், வெந்த பட்டாணி, கொத்தமல்லி தூவவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் வெந்த பின் எடுத்து, சூடாக பரிமாறவும்.
மூங்தால் பெசரட்
தேவையானவை: பாசிப்பருப்பு – ஒரு கப், இஞ்சி – சிறிய துண்டு (சுத்தம் செய்யவும்), பச்சை மிளகாய் – 2, கொத்தமல்லி – சிறு கட்டு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: இஞ்சி, கொத்தமல்லியை சுத்தம் செய்யவும். பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் மிக்ஸியில் சேர்த்து, தோசை மாவு பதத்தில் அரைக்கவும். மாவை தோசைக்கல்லில் சற்று தடிமனான அடைகளாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, சுட்டு எடுத்து பரிமாறவும்.
ஸ்வீட் கார்ன் சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் முத்துக்கள் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) – ஒரு கப், இஞ்சி (சுத்தம் செய்யவும்) – சிறு துண்டு, பச்சை மிளகாய் – 3, எலுமிச்சை சாறு – 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி அளவு, நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஸ்வீட் கார்னை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி… பிறகு இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து, எலுமிச்சை சாறு சேர்க்கவும். அதனுடன் கோதுமை மாவு, உப்பு, நெய், மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து, சின்னச் சின்ன சப்பாத்திகளாகத் திரட்டவும். தவாவை சூடாக்கி, சப்பாத்தியை போட்டு, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
ஸ்பைஸி ரவா கிச்சடி
தேவையானவை: வறுத்த ரவை – ஒரு கப், பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 2, பச்சைப் பட்டாணி – அரை கப், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், புதினா, கொத்தமல்லி – சிறிதளவு, தேங்காய்ப் பால் – ஒன்றரை கப், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், பட்டை – சிறு துண்டு, கிராம்பு, ஏலக்காய் – தலா ஒன்று, நெய், எண்ணெய், உப்பு – சிறிதளவு.

செய்முறை: பெரிய வெங்காயத்தை நீளநீளமாக மெல்லிதாக நறுக்கவும். புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். அடி கனமான வாணலியில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும். வெங்காயம் சிறிது வதங்கியதும் இஞ்சி – பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தேங்காய்ப் பால், ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதி வந்ததும் வறுத்த ரவை, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கிளறி, அடுப்பை ‘சிம்’மில் வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கிப் பறிமாறவும்.
ஆலு பாலக் கட்லெட்
தேவையானவை: பசலைக்கீரை – ஒரு சிறு கட்டு, உருளைக்கிழங்கு – 2 (வேக வைத்து மசித்துக் கொள்ளவும்), பிரெட் ஸ்லைஸ்கள் – 4, பச்சை மிளகாய் – இஞ்சி அரைத்த விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், பிரெட் தூள் – சிறிதளவு, மைதா மாவு – அரை கப், சீஸ் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கீரையை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி 2 கப் கொதி நீரில் 2 நிமிடம் போட்டு மூடி வைக்கவும். பிறகு நீரை வடிகட்டி, ஆறியதும் மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். மைதா மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைக்கவும். வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, நீரில் நனைத்து பிழிந்தெடுத்த பிரெட் ஸ்லைஸ்கள், கீரை விழுது, பச்சை மிளகாய் – இஞ்சி விழுது, சீஸ் துருவல், உப்பு ஆகியவற்ரை அகலமான பாத்திரத்தில் சேர்த்து நன்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டிக் கொள்ளவும். தட்டிய கட்லெட்களை மைதா கரைசலில் தோய்த்து, பிரெட் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து… டொமெட்டோ சாஸுடன் பரிமாறவும்.
ஓட்ஸ் காலிஃப்ளவர் உப்புமா
தேவையானவை: ஓட்ஸ் – ஒரு கப், பெரிய வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 2, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பெரிய வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் மிகவும் பொடியாக நறுக்கவும். அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து… வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் ஒன்றரை கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்க்கவும். தண்ணீர் கொதித்ததும், ஓட்ஸை சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி (அடுப்பை ‘சிம்’மில் வைக்கவும்) மூடி, 5 நிமிடத்துக்குப் பிறகு இறக்கிப் பரிமாறவும்.
சோயா ஆனியன் பெசரெட்
தேவையானவை: சோயா உருண்டைகள் – 10 (வேக வைத்து நீரைப் பிழிந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்), பச்சைப்பயறு – ஒன்றரை கப், வெங்காயம் – 2, இஞ்சி – சிறு துண்டு (சுத்தம் செய்யவும்), மிளகு, சோம்பு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – 2 ஆர்க்கு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பச்சைப்பயறை 3 மணி நேரம் ஊறவிடவும். பிறகு அதனுடன் மிளகு, சோம்பு, சீரகம், உப்பு, இஞ்சி சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும். மாவை எடுக்கும் சமயம் சோயாவை சேர்த்து மேலும் சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும், வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கறிவேப்பிலையை வதக்கி, மாவில் கலந்து கொள்ளவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை விட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
பூண்டு துவையல்
தேவையானவை: உரித்த பூண்டு – 20 பல், காய்ந்த மிளகாய் – 2, புளி – சிறிதளவு, கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் – தலா கால் டீஸ்பூன், உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு வதக்கி மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இன்னொரு வாணலியில் கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளிக்கவும். அரைத்த துவையலில் தாளித்தவற்றை சேர்த்து ஒரு கிளறு கிளறி பரிமாறவும்.
பிரெட் வெஜ் புலாவ்
தேவையானவை: சாண்ட்விச் பிரெட் ஸ்லைஸ் – 6, வெங்காயம், கேரட் – தலா ஒன்று, பீன்ஸ் – 6, பச்சைப் பட்டாணி – ஒரு கைப்பிடி அளவு, குடமிளகாய் – ஒன்று (நீளநீளமாக நறுக்கவும்), இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், கரம்மசாலாத் தூள் – கால் டீஸ்பூன், டொமெட்டோ சாஸ் – 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பிரெட் ஸ்லைஸ்களை நீளநீளமாக ‘கட்’ செய்து கொள்ளவும். வெங்காயம், கேரட், பீன்ஸை நீளநீளமாக ஒரு இன்ச் அளவுக்கு ‘கட்’ செய்து கொள்ளவும். பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி… மிளகாய்த்தூள், கரம்மசாலாத் தூள் சேர்க்கவும். அதன் பின் டொமெட்டோ சாஸ், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அதில் பிரெட் துண்டுகளைச் சேர்த்து ஒரு புரட்டு புரட்டி, சூடாக பரிமாறவும்.
வெஜ் சாண்ட்விச்
தேவையானவை: சாண்ட்விச் பிரெட் ஸ்லைஸ் – 10, புதினா – கொத்தமல்லி சட்னி – அரை கப், துருவிய பனீர், துருவிய கேரட், துருவிய கோஸ் – தலா கால் கப், சில்லி சாஸ், தக்காளி சாஸ் – தலா 2 டேபிள் ஸ்பூன், வெண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: துருவிய கேரட், துருவிய கோஸ், துருவிய பனீர், சில்லி சாஸ், தக்காளி சாஸ் ஆகியவற்றை ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். பிரெட் ஸ்லைஸின் இருபுறமும் வெண்ணெயை தடவவும். அதன்மேல் புதினா – கொத்தமல்லி சட்னியை தடவவும். இதற்கு மேல் வெஜ் கலவையை வைத்து, நன்கு பரத்தி அதன்மேல் மற்றொரு வெண்ணெய் தடவிய பிரெட் ஸ்லைஸை வைத்து மூடி, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுத்துப் பரிமாறவும்.
பட்டாணி சீஸ் பன்
தேவையானவை: பன் – 4, சீஸ் துருவல் – அரை கப், வேக வைத்து மசித்த பச்சைப் பட்டாணி – கால் கப், கேரட் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்), வெண்ணெய் – தேவையான அளவு, உப்பு – சிறிதளவு.

செய்முறை: சீஸ் துருவல், வேக வைத்து மசித்த பச்சைப் பட்டாணி, கேரட் துருவல், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். பன்னின் மேல் பகுதியை மெதுவாக வெட்டி எடுத்துவிட்டு, கீழ்ப்பகுதியின் நடுவில் உள்ள பாகத்தை கத்தியால் கீறி எடுத்து குழி செய்து கொள்ளவும். அதனுள் சீஸ் கலவையை ஸ்டஃப் செய்து கொள்ளவும். எல்லா பன்னிலும் இதே முறையில் ஸ்டப் செய்து வைத்து… மேல் பக்க பன்னால் மூடிக் கொள்ளவும். தோசைக் கல்லை காய வைத்து பன்னை அதன்மேல் வைத்து சுற்றிலும் சிறிது வெண்ணெய் சேர்க்கவும். லேசாக பொன்னிறமானதும் மறுபுறமும் திருப்பி போட்டு சூடானதும் எடுத்து பரிமாறவும்.
நன்றி – அவள் விகடன்
பாலக் சிக்கன் மசாலா
சிக்கன் உணவு என்றாலே ஒரு கட்டு கட்டும் நம்மவர்கள், பாலக்கீரையுடன் இணைந்த சிக்கன் மசாலாவை மட்டும் விட்டு வைப்பார்களா? செய்து பார்த்து சாப்பிட்டு அதன் சுவைக்கு பெருமை சேருங்கள்.
தேவையான பொருட்கள்
பாலக்கீரை -1 கட்டு
சிக்கன் -1/2 கிலோ
வெங்காயம் -300 கிராம் (நறுக்கியது)
தக்காளி -200 கிராம் (நறுக்கியது)
மிளகாய்த்தூள் -2 டீஸ்பூன்
தனியாத்தூள் – 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்
பட்டை, லவங்கம்,
ஏலக்காய் – தலா 2
இஞ்சி, பூண்டு
விழுது – 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் -தேவைக்கேற்ப
செய்முறை:
வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய், லவங்கம் சேர்த்து தாளிக்கவும். வெங்காயம், தக்காளி, இஞ்சி, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பூண்டு விழுது ஆகியவற்றை வதக்கவும். மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூளுடள் சிறிது தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
சுத்தம் செய்து நறுக்கிய பாலக்கீரையை சேர்த்து வதக்கவும். இத்துடன் சுத்தம் செய்து நறுக்கிய சிக்கனையும் சேர்த்து வதக்கவும். தேவையான உப்பு சேர்க்கவும். தேவையானால் சிறிது தேங்காய்ப்பால் சேர்த்துக் கொள்ளலாம்.
சிக்கன், கீரை மசாலாவுடன் சேர்ந்து வெந்து தொக்கு பதத்தில் வந்ததும் இறக்கி, கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். இது டிபன் மற்றும் சாத வகைகளுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.
வெஜிடபிள் மசால்
சப்பாத்தி, பூரி, தோசை போன்றவைகளுக்கு தொட்டுக் கொள்ள இந்த வெஜிடபிள் மசாலா செய்து பாருங்கள். தேங்காய் சேர்க்காமல் செய்வதால், டயட்டில் இருப்பவர்களுக்குக் கூட இந்த மசால் ஏற்றது. சத்தானதும் கூட. செய்து பார்த்து சுவைப்போமா!
தேவையான பொருட்கள்:
கேரட் – 2 பெரியது
உருளைக்கிழங்கு -2 பெரியது
சவ்சவ் -பாதி
பச்சைப்பட்டாணி – 2 கைப்பிடியளவு
நறுக்கிய பீன்ஸ் -1/2 கப்
நறுக்கிய முட்டைக்கோஸ் -1 கப்
காலிப்ளவர் -1/2 கப்
பெரிய வெங்காயம் -1
இஞ்சி, பூண்டு விழுது -1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
தனியாத்தூள் -3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் -2 டீஸ்பூன்
சோம்பு, பட்டைகிராம்பு, ஏலக்காய் -தாளிக்கத் தேவையான அளவு
செய்முறை:
பெரிய வெங்காயத்தையும் காய்கறிகளையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு, ஏலக்காய், சோம்பு தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து சிறிது பச்சை வாசனை போக வதக்கவும். அத்துடன் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வதக்கி மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறி தண்ணீர் அதிகம் சேர்க்காமல் திட்டமாக விட்டு மூடி வைக்கவும். வெயிட் போட்டு காய்கறிகள் குழைந்து விடாமல் வேகவைத்து மசாலா பதத்தில் எடுத்து கொத்தமல்லி தூவி அலங்கரித்து பரிமாறலாம்.
கார போண்டா, பிரட் சாண்ட்விச் செய்யவும் இந்த மசால் ஏற்றது.
கோதுமை ராகி அப்பம்
இந்த கோதுமை ராகி அப்பத்தை வெல்லம் கலந்து தயாரிப்பதால் எளிதில் ஜீரணமாகும். சத்தானதும் கூட. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவு வகை இது. செய்முறையை பார்ப்போமா!
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – 1 கப்
ராகி மாவு – 1 கப்
வெல்லம் – 1 கப்
கனிந்த வாழைப்பழம் – 2
தேங்காய்த்துருவல் – 1 மூடி
ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன்
நெய் – தேவையான அளவு
ரீபைன்ட் எண்ணெய் – தேவையான அளவு
ராகி மாவு – 1 கப்
வெல்லம் – 1 கப்
கனிந்த வாழைப்பழம் – 2
தேங்காய்த்துருவல் – 1 மூடி
ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன்
நெய் – தேவையான அளவு
ரீபைன்ட் எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
கோதுமை மாவு, ராகி மாவு இரண்டையும் ஒன்றாக கலந்து எடுத்துக் கொள்ளவும். வெல்லத்தை தூளாக்கிக் கொள்ளவும். மாவுடன் வெல்லம், தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து வாழைப்பழத்தை பிசைந்து போட்டு தண்ணீர் விட்டு தோசை மாவு போல கரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் லேசாக நெய் தடவி ஊத்தப்பம் போல் சிறிது சிறிதாக வட்ட வட்டமாக ஊற்றி திருப்பிப் போட்டு எடுக்கவும். நெய்யும், ரீபைன்ட் எண்ணையுமாக கலந்து தோசையை சுற்றி ஊற்றலாம். இதில் நெய்யானது அப்பத்திற்கு மணத்தையும் சுவையையும் கொடுக்கும்.
தம் சிக்கன்
சிக்கன் வகைகளில் அலாதியானது இந்த தம் சிக்கன். இதன் ருசிக்காக இதை விரும்பி சாப்பிடுகிறவர்கள் அதிகம். செய்து பார்த்து சுவைப்போமா?
தேவையான பொருட்கள்
சிக்கன் – 1/4 கிலோ
முந்திரிப்பருப்பு – 1/4 கிலோ
வெங்காயம் – 1/4 கிலோ(நறுக்கியது)
தக்காளி – 200 கிராம் (நறுக்கியது)
கசகசா – 150 கிராம்
இஞ்சி பூண்டு விழுது – 20 கிராம்
சிவப்பு காய்ந்த மிளகாய் விழுது-20 கிராம்
கொத்தமல்லி இலை-சிறிதளவு (நறுக்கியது)
பால் – 100 மில்லி
கரம் மசாலா தூள் – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
முந்திரிப்பருப்பு – 1/4 கிலோ
வெங்காயம் – 1/4 கிலோ(நறுக்கியது)
தக்காளி – 200 கிராம் (நறுக்கியது)
கசகசா – 150 கிராம்
இஞ்சி பூண்டு விழுது – 20 கிராம்
சிவப்பு காய்ந்த மிளகாய் விழுது-20 கிராம்
கொத்தமல்லி இலை-சிறிதளவு (நறுக்கியது)
பால் – 100 மில்லி
கரம் மசாலா தூள் – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை:
பாலில் முந்திரிப்பருப்பு, கசகசா சேர்த்து விழுதாக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். இஞ்சி, பூண்டு விழுதை சேர்க்கவும். நறுக்கிய தக்காளியையும், மிளகாய் விழுதையும் சேர்த்து வதக்கவும்.
இப்போது அரைத்த முந்திரி, கசகசா விழுதை சேர்த்து நன்கு கிளறி வதக்கவும். சிக்கனில் தேவையான உப்பு சேர்த்து சிக்கன் வேகும்வரை அடுப்பில் வைக்கவும். சிக்கன் நன்கு வெந்ததும் கரம்மசாலா தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். பரிமாறும் முன்பாக கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.
இப்போது மணக்கும் தம் சிக்கன் ரெடி.
பர்மா சட்னி
தினமும் தேங்காய் சட்னி, வெங்காய சட்னி தானா என்று அலுத்துக் கொள்பவர்களுக்காக இதோ பர்மா சட்னி. டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்றது. இதோ செய்முறை:
தேவையானவை:
பெரிய வெங்காயம் – 3
பச்சை மிளகாய் – 4
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தாளிக்கத் தேவையான அளவு
கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சம்பழச்சாறு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
ரீபைன்ட் எண்ணெய் – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 4
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தாளிக்கத் தேவையான அளவு
கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சம்பழச்சாறு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
ரீபைன்ட் எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் கடலைமாவை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், கடலை மாவை தண்ணீர் விட்டு நீர்க்கக் கரைத்து வதங்கிய வெங்காயத்துடன் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க விடவும். சிறிது கெட்டியானதும் இறக்கி வைத்து எலுமிச்சம்பழ சாறு சேர்க்கவும்.
கடலை மாவில் தண்ணீர் குறைவாக ஊற்றி கரைத்து ஊற்றினால் சட்னி ரொம்பவே கெட்டியாக இருக்கும். நீர்க்க கரைத்தால் தான் கடலைமாவு வெந்ததும் சட்னி சரியான பதத்தில் இருக்கும். சிறிது கொத்தமல்லி தூவி பரிமாறலாம்.
சப்பாத்தி, பூரி போன்றவைகளுக்கு மட்டுமின்றி இட்லி தோசைக்குக் கூட தொட்டுக் கொள்வதற்கு ஏற்றது, இந்த பர்மா சட்னி.
No comments:
Post a Comment