Wednesday 22 February 2017

நிம்மதியாக இருங்கள்.. இனிமேல் ‘போலி செய்தி’களை பரப்ப முடியாது.!

ஏற்கனவே பல பரபரப்புகளுக்குள் சிக்கி தவிக்கும் தமிழக மக்களின் இரத்த கொதிப்பை இன்னும் அதிகரிக்கும் வண்ணம் அவ்வப்போது பல போலியான தகவல்கள் மற்றும் செய்திகள் வெளியாவதுண்டு. யாரோ சில விஷமிகள், எங்கோ உட்காந்துகொண்டு பரப்பி விடும் போலி தகவல்கள் சில மணி நேரத்திற்குள் நாடு முழுவதும் காட்டுத்தீ போல பரவி விடும் வல்லமை பெற்று விடுகிறது.
இம்மாதிரியான வல்லமையை போலி செய்திகள் பெற, பக்க பலமாக இருப்பது இரண்டு காரணிகள். ஒன்று வாட்ஸ்ஆப், பேஸ்புக், ட்வீட்டர், போன்ற சமூக வலைபின்னல்கள், இரண்டாவது கொஞ்சம் கூட சிந்திக்கமால் கிடைத்த போலியான தகவலை அல்லது செய்திகளை அப்படி உண்மையென நம்பி அதை பரப்பும் கூட்டம்.!
மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் மருத்துவமனை நாட்களில் வெளியான போலி செய்திகளை எண்ணி மாள முடியாது. அதேப்போல் ஜல்லிக்கட்டு தடையால் தமிழ்நாட்டில் விளைந்த இளைஞர்கள் புரட்சியில் சமூக விரோத பின்னணி உள்ளதென்று போலி தகவல்கள் திணிக்கப்பட்டு இறுதியில் எப்படி அந்த புரட்சிமிக்க போராட்டம் முடித்து வைக்கப்பது என்பதை நான் கூற வேண்டிய அவசியமில்லை.!
இது நம் தமிழ்நாடு மட்டுமே சார்ந்த ஒரு பிரச்சனை கிடையாது, போலிச்செய்திகள் என்பது ஒரு சர்வதேச பிரச்சனையாகும். குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் சமீபத்தில் நிகழ்ந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் பெரும்பான்மை பெற்றுவிட்டார் என்று முன்னரே வெளியான போலி செய்தியால் தான் ட்ரம்ப்பின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.
இதுபோன்ற எல்லா வகையான போலி செய்திகள் சார்ந்த பழியும் கடைசியில் வந்து விழுவது கூகுள் செய்திகள் மீதுதான். இதனையெல்லாம் மனதிற்க்கொண்டு கூகுள் நிறுவனம் அதன் போலி செய்திகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒன்றாக பேக்ட்-செக் டூல் தனை (fact-check tool) விரிவு படுத்துகிறது. போலி செய்திகளுக்கான எதிரான இந்த முயற்சியை மேலும் மூன்று நாடுகளில் கூகுள் முன்னெடுத்துள்ளது. இந்த அம்சம் முதலில் அமெரிக்கவில் கடந்த அக்டோபர் ஜனாதிபதி தேர்தலின் போது தொடங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த லேபில் ஆனது இப்போது அர்ஜென்டீனா, பிரேசில் மற்றும் மெக்ஸிக்கோ நாடுகளின் கூகுள் செய்திகள் மற்றும் தேடல் முடிவுககளில், மற்றும் வானிலை பயன்பாட்டில் தோன்றும். இதன் மூலம் கூகுள் நிறுவனத்தின் மூலம் மிக, மிக தீவிரமாக போலி செய்தி பிரச்சனைக்கு எதிராக என்னென்ன செய்ய முடியும் என்பது நடைமுறைப்படுத்தபட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த அம்சம் இந்தியா உட்பட உலகம் முழுவதும் விரிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
‘பொதுவாக போலி செய்திகள் என்பது வெவ்வேறு மக்களுக்கு வெவ்வேறு விடயங்களை அர்த்தப்படுத்தும் வெளிப்படையாக அதனை ஒரு போலி செய்தியா அல்லது மோசமான ஊடகமா என்பதை கண்டுபிடிக்கவே முடியாது’ என்று கூகுள் நிறுவனம் கருத்து கூறியுள்ளதும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதுதான் உண்மையும் கூட என்பதை ஒரு ஊடகவாதியாக நானும் ஏற்றுக் கொள்கிறேன்.!
யார் என்ன கூறினாலும் சட்டென்று நம்பி விடுவதொன்றும் மாபெரும் தேசக்குற்றமல்ல ஆனால் வீட்டில் சோஃபாவில் அமர்ந்துகொண்டு அதிவேக இண்டர்நெட் உங்களிடம் உள்ளது என்ற ஒரே காரணத்திற்காக உங்களுக்கு கிடைக்கும் போலி செய்திகளை கண்மூடித்தனமாக பரப்பி விடுவதால் ரோட்டில் நடமாடும் மக்களுக்கு என்னென்ன சிக்கல்கள் விளைகின்றது என்பதை சற்று யோசிக்க வேண்டும். பேஸ்புக்கில் கிடைக்கும் ஒரு போலி செய்தியை வெறுமனே நீங்கள் லைக் செய்தால் கூட அது பரவும் என்பதை மறக்க வேண்டாம். செய்யும் செயலை சிந்தனை முந்தட்டும்.!

No comments: