Thursday, 16 February 2017

தந்தை, மகன் சந்திக்கும் கூடிப்பூஜை திருவிழா!



கேரளம்-வைக்கம்

ஆண்டுக்கு ஒரு முறை தந்தையும் மகனும் உற்சாகமாக சந்தித்துக் கொள்ளும் ‘கூடிப் பூஜை’ மிகவும் விமரிசையாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்படுகிறது. எங்கே தெரியுமா? கேரள மாநிலத்தில் புகழ்பெற்றதும், பிராதனமானதுமான மூன்று சிவத்தலங்கள் உண்டு. அவை: ஏற்றுமானூர், கடுதுருத்தி, வைக்கம். இம்மூன்று தலங்களும் ஒரே பாதையில் இருக்கின்றன. 

இவற்றில் வைக்கம் மகாதேவர் மிகவும் பிரசித்தம். அவரை தரிசிப்பவர்கள் அவசியம் அருகில் உள்ள உதயனாபுரம் சென்று அங்கு அருள்பாலிக்கும் திருமுருகப்பெருமானையும் தரிசிக்க வேண்டும். இந்த வைக்கம் திருத்தலத்திற்கும் உதயனாபுரத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. ஏனென்றால் இவர்களைப் பிரதிஷ்டை செய்யக் காரணமாக இருந்தவர் பரசுராமர். தந்தை-மகன் சந்திப்பு நடைபெறும் ‘கூடிப் பூஜை’ ஒவ்வொரு ஆண்டும் வைக்கம் கோயிலில் நடைபெறும். 

கார்த்திகை மாத பிரம்மோற்சவத்தின் பன்னிரண்டாம் நாள் அஷ்டமி தினத்தன்று, மாலை தீபாராதனைக்குப் பின்னர் சுவாமி வெளியே புறப்பட்டு, யானை மீது கம்பீரமாக அமர்ந்து பிராகாரத்தை வலம் வருகிறார். பின்னர் கிழக்குப்புற பிராகாரத்திலுள்ள யானைப்பந்தலுக்கு வந்து தம் மைந்தன் உதயனாபுரம் முருகனின் வரவை ஆவலுடன் எதிர்ப்பார்த்து அங்கேயே நிற்கிறார். அப்போது வாத்தியங்களின் முழக்கம் எல்லாம் ஓய்ந்து விடும். யானைகள் உறங்கிப் போய் விடாமலிருக்க ‘வீக்கன்’ என்ற வாத்தியம் மட்டும் ஒலித்துக் கொண்டிருக்கும். 

பக்தர்கள் கூட்டம் கலைந்து போய்விடாமல் இருக்க அப்போது வித விதமான கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இரவு சுமார் 10 மணிக்கு உதயனாபுரத்து சுப்பிரமணியர், தேவியருடன் புறப்பட்டு வைக்கம் ஆலயத்தின் வடபாகத்திலுள்ள அரசமர மேடைக்கு வந்து தங்கி, தந்தையார் வைக்கம் மகாதேவருக்கு செய்தி அனுப்புவார். உடனே தந்தையானவர் தங்கக் குடை, தங்க ஆபரணங்கள், வாத்தியங்கள், பரிவாரங்கள் முதலியவற்றை அனுப்பி திருக்குமரனை அழைத்துவரச் சொல்வார்.

திருமுருகன் யானையின் மீது அமர, அந்த வைபோக விமரிசைகளுடன் ‘ஜாம் ஜாம்’ என்று யானை புறப்பட்டுப் பல்வேறு மங்கல வாத்திய முழக்கங்களுடனும், விதவிதமான வாண வேடிக்கைகளுடனும், பரிவாரங்களும், பக்தர்களும் புடை சூழ, முந்நூறுக்கும் மேற்பட்ட தீவட்டிகள் ஒளியில் அந்த ஒரு கிலோமீட்டர் தூரத்தை நிதானமாகக் கடந்து வருவதற்குக் குறைந்தது மூன்று மணி நேரமாகும். நடு இரவு ஒன்றரை மணி சுமாருக்குக் கோயிலுக்குள் பிரவேசித்து, பிராகாரம் வந்து கிழக்குப்புறம் தன்னைப் பிரியமுடன் எதிர்பார்த்து எழுந்தருளியிருக்கும் தந்தை மகாதேவர் பக்கம் வந்து பெருமிதத்துடன் நிற்பார் முருகப்பெருமான். 

அதைக் கண்டு பெருமையில் பூரித்துப் போகும் தந்தை சற்று நகர்ந்து அவருக்கு இடமளிப்பார். ஆகா அந்த அற்புதக் காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும். தந்தை-மகன் சந்தித்துக் கொள்ளும் இந்த அற்புதக் காட்சியைக் கண்டு பக்தர்கள் மகிழ்ச்சிப் பெருக்கில் பெருத்த ஆரவாரம் செய்கிறார்கள். எங்கெனும் வாழ்த்தொலி முழங்கும். இப்படி அம்மையப்பனும் அருமை மகனும் பக்தர்களுக்கு தரிசனம் தந்து பூஜைகளையும் காணிக்கைகளையும் ஏற்றுக் கொள்ளும் ‘கூடிப்பூஜை’யைக் காண்பது கிடைத்தற்கரிய பேறாகும். இப்பூஜையைக் காண்பதற்காகவே எண்ணற்ற பக்தர்கள் இங்கு வருகை தருகிறார்கள்.

பின்னர் தந்தையும் மகனும் சேர்ந்து ஆலயத்தை மும்முறை வலம் வருவதும், ஒவ்வொரு சுற்று வரும்போது முருகப்பெருமான் அமர்ந்துள்ள யானை தன் தும்பிக்கையைத் தூக்கிச் சிறு முழக்கமிட்டு, பக்தர்களோடு சேர்ந்து தன் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறது! பூஜை, புனஸ்காரம் மற்றும் ஆராதனைகள் முடிந்த பின்னர் வைக்கம் மகாதேவரிடமிருந்து உதயனாபுரம் முருகப்பெருமான் விடைபெறும் காட்சிகளும் காண்பதற்கு குதூகலமாயிருக்கும்.

வடக்குப் பிராகாரத்தில், வடக்கு வாசலுக்கு எதிரில் இரு யானைகளும் எதிர் எதிரே நின்று, ஒருவரிடமிருந்து ஒருவர் விடைபெறும் உணர்ச்சிமயமான காட்சி காண்பவர் உள்ளங்களை உருக்கி, கண்களைக் கலங்கக் செய்யும். வடக்கு வாசல் வழியே மைந்தன் சென்ற பிறகு, அத்திசையையே சிறிது நேரம் உற்று நோக்கி விட்டு, மனக் கிலேசத்துடன் தந்தை மகாதேவர் மெல்லத் திரும்பி திருக்கோயிலுக்குச் செல்லும் காட்சியும், அச்சமயம் நாதஸ்வரம் இசைக்கும் சோக ராகங்களின் நாதமும், யானையின் கண்களிலிருந்து பெருகும் கண்ணீரும் காண்போரின் மனதைப் பிழிந்தெடுத்து விடும். 

என்ன யதார்த்தமான, உணர்ச்சிபூர்வமான காட்சி! தற்காலத்தில் மேல்படிப்புக்காகவோ, பணிநிமித்தமாகவோ தன் மகனை வெளியூருக்கு அல்லது வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்கும் தந்தையின் பாசமும், அவரைப் பிரிய மனமில்லாத மகனின் ஏக்கமும் அங்கே ஒருங்கே தெய்வீகக் காட்சியாகப் பரிமளிக்கும் பாங்கு அனைவரையும் நெகிழவைக்கும். ஸ்ரீ வைக்கம் மகாதேவர் தன் ஆறாட்டு தினத்தன்று உதயனாபுரம் சென்று அவ்விடத்தில் ‘கூடிப் பூஜை’யை ஏற்றுக் கொள்கிறார். அதே போல் உதயனாபுரம் ஆறாட்டு தினத்தன்று சுப்ரமணியர் வைக்கம் கோயிலுக்கு எழுந்தருளி பூஜையை ஏற்றுக் கொள்கிறார்.

உதயனாபுரம் ஆலயத்தில் உள்ள சுப்ரமணிய சுவாமி நான்கு அடி உயரத்தில் பீடுடையவராகக் காட்சியளிக்கிறார். கருவறை மண்டபம் இரு நிலைகளுடன் சதுர வடிவில் உள்ளது. சுற்றிலும் யானைகள் தாங்குவது போன்ற மரச்சிலைகளும், யானை, யாளிகளின் கற்சிற்பங்களும் உள்ளன. இங்குள்ள நமஸ்கார மண்டபத்தில் கல் தூண்களில் அருமையான சிற்ப வேலைப்பாடுகளைக் காணலாம். காளிங்கமர்த்தனன் கோலத்தில் கண்ணன் காட்சியளிப்பது கண்ணுக்கு விருந்தாக அமைந்துள்ள ஒரு கலைச்செல்வம் ஆகும். தந்தை வைக்கம் மகாதேவரும், தனயன் உதயனாபுரம் சுப்ரமண்யரும் சந்தித்துக் கொள்ளும் ‘கூடிப்பூஜை’யைக் கண்டு தரிசனம் செய்வது பெரும் பேறாகக் கருதப்படுகிறது.

No comments: