Friday, 17 February 2017

எதனுடன் எதைச் சாப்பிடலாம்? ஃபுட் காம்பினேஷன் அறிவோம்!

ந்த உணவில் என்ன சத்து உள்ளது, எது நமக்கு தேவை என அறிந்து சாப்பிட ஆரம்பித்திருக்கிறோம். ஆனால், எதனுடன் எதைச் சேர்த்ச் சாப்பிடலாம், எதைச்  சேர்க்கக் கூடாது என்பது தெரிவதில்லை. உணவைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளும்போது, அது உணவுக்கும் நமக்கும் இடையே ஓர் உணர்வு பூர்வமான உறவை
ஏற்படுத்தி, அதன் பலன் முழுமையாக உடலில் சேர வழிவகுக்கிறது.  ஒவ்வோர் உணவுப் பொருளும் குறிப்பிட்ட இன்னோர் உணவுப் பொருளுடன் சேரும்போது அது தரும் பலன் இரட்டிப்பாகிறது. இப்படி, எந்தெந்த உணவை எதனெதனுடன் சேர்த்து உண்ணலாம் என அறிந்துகொள்வோம். இது நம்மை மேலும் வலுவானவர்களாக மாற்றி, ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரமிடும்.
அரிசியும் பருப்பும்
அரிசியில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. சிவப்பு, பிரவுன் அரிசியில் நார்ச்சத்தும் உண்டு. பருப்பு, புரதச்சத்து நிறைந்தது. மேலும் வைட்டமின்களும் நுண்ணூட்டச்சத்துகளும் உள்ளன. இவை இரண்டும் சேரும்போது உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகளில் பெரும்பகுதி கிடைத்துவிடுகிறது. பொதுவாக, மருந்து சாப்பிடும் காலங்களில் பச்சரிசியைத் தவிர்த்து, புழுங்கல் அரிசியை எடுத்துக்கொள்ளலாம். இதனால், செரிமானம் எளிதாகும்.
உணவுடன் பிரண்டை
பிரண்டையில் நார்ச்சத்து, கால்சியம் இரண்டும் நிறைந்துள்ளன. செரிமான மண்டலம் நன்கு செயல்படவும் பற்கள், எலும்புகள் உறுதியாகவும் வாரம் இருமுறை மதிய உணவோடு பிரண்டைத் துவையல் சேர்த்துச் சாப்பிடலாம். மெனோபாஸ் நிலையை அடைந்த பெண்கள் வாரம் இருமுறை, உணவோடு பிரண்டைத் துவையல் சாப்பிட்டால், எலும்பு அடர்த்திக் குறைதல் பிரச்னையில் இருந்து தப்பிக்கலாம்.
பிரண்டையும் மோரும்
உணவுடன் பிரண்டை சேர்த்து உண்டபின் மோர் குடிக்க வேண்டும். இவ்வாறு எடுத்துக்கொண்டால் இதன் பலன் இரட்டிப்பாகும். மோரில் கால்சியம், புரோபயாடிக் நிறைந்துள்ளதால், எலும்புகள், பற்கள் வலுப்படுவதோடு, செரிமான மண்டலம் சீராகிறது. உடல் குளிர்ச்சியடைகிறது. ரத்தம் ஓட்டம் சீராகி, நோய் எதிர்ப்புச் சக்தி மேம்படுகிறது. உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுகிறது. எனவே, அரிசிச் சாதத்துடன் பிரண்டையும் மோரும் முதுமைக்கு வரங்கள். 
உருளைக்கிழங்கும் துவரம்பருப்பும்
உருளைக்கிழங்கும் துவரம்பருப்பும் மிகச்சிறந்த கூட்டணி. உருளையில் மாவுச்சத்தும், துவரம் பருப்பில் புரதமும் நிறைந்துள்ளன. ஒரு வயதுக் குழந்தைகளுக்கும், சரியாக உடல் தேறாத குழந்தைகளுக்கும் ஒரு சிறிய உருளைக்கிழங்கையும் அதன் அளவுக்குச் சமமான துவரம்பருப்பையும் நன்கு வேகவைத்து, நன்றாகப் பிசைந்து, அதனுடன் ஒரு டீஸ்பூன் நெய்யையும் உருக்கிச் சேர்த்துப் பிசைந்து தினமும் காலை அல்லது மதியம் சாப்பிடக் கொடுத்தால் நன்கு உடல் தேறும். அந்த வயதுக்குத் தேவையான சத்தும் கிடைக்கும்.
உளுந்தும் தேனும்
உளுந்தில் புரதச்சத்தும் நுண்ணூட்டச் சத்துகளும் நிறைந்துள்ளன. கர்ப்பப்பையை வலுவாக்கும். பருவம் எய்திய பெண்களுக்கு உளுந்தங்களி கொடுத்தால், அவர்களின் ஆரோக்கியம் மேம்படும். ஆனால், சிலருக்கு இது அஜீரணத்தை உருவாக்கும். இவர்களுக்கு உளுந்துடன் தேன் கலந்து தரலாம். செரிமானம் மேம்படுவதோடு, தேனில் உள்ள நுண்ணூட்டச் சத்துகளும் கிடைக்கும்.
உளுந்தும் வாழைப்பழமும்
உளுந்தில் புரதச்சத்தும் வாழைப்பழத்தில் வைட்டமின்கள், நார்ச்சத்து, மாவுச்சத்து  ஆகியவையும் நிறைவாக உள்ளன. இதனால், செரிமானம் எளிதாகிறது. செரிமான மண்டலம் சீராகிறது. உளுந்து வடை தயாரிக்கும்போது, பேயன் வாழைப்பழத்தையும் சேர்த்துத் தயாரித்து, சிறிது நெய் விட்டுச் சாப்பிட்டால் புரதச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து ஆகியவை கிடைக்கும். இதை வளர் இளம் குழந்தைகளுக்குத் தரலாம்.
பஞ்சமுஷ்டி கஞ்சி
துவரை, உளுந்து, கடலை, சிறுபயறு, பச்சரிசி ஆகிய ஐந்து பொருட்களையும் சம அளவு எடுத்து, தனித்தனியே ஒரு மெல்லிய துணியில் முடிந்து, ஒரு பாத்திரத்திலிட்டு நீர் சேர்த்து, எட்டில் ஒரு பங்காகக் காய்ச்சி எடுப்பதே பஞ்சமுஷ்டிகஞ்சி. இதை, அனைத்து வயதினரும் சாப்பிடலாம். உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் கிடைக்கும். உடல் பலவீனமாக இருப்பவர்களுக்கும் ஏற்றது.

No comments: