Thursday, 2 February 2017

புத்துணர்வு தரும் புதினா!

உணவுக்கு மணமூட்டும் கீரைகளில் கறிவேற்பில்லை, கொத்தமல்லி போல் புதினாவும் முக்கியமானது. மேலும் மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்டது. புதினாக்கீரை பசியைத் தூண்டும். மணமும் காரச் சுவையும் கொண்டது. அதற்காகவே, பல்வேறு நாடுகளிலும் புதினாக் கீரையை மக்கள் விரும்பி வளர்க்கின்றனர்.
புதினா கீரையில், உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன. துவையல், சட்னி, பொடி போன்றவை தயாரித்தும் மசால் வடையில் சேர்த்தும், பிரியாணி மற்றும் இறைச்சி வகைகளில் சேர்த்தும் புதினா கீரை பயன்படுத்தப்படுகிறது.
புதினா கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் ரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். ஜீரண சக்தி அதிகரித்து, பசி தூண்டப்படும்; மலச்சிக்கலும் நீங்கும். பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகிறது. ஊளைச் சதையைக் குறைப்பதற்குப் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகிறது.
வாய்வுத் தொல்லையை அகற்றுகிறது. புதினா இலையின் சாற்றை தலைவலிக்குப் பூசலாம். இளைப்பு நோயையும், ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகிறது. மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களையும், புதினாக் கீரை குணப்படுத்துகிறது.
புதினாக் கீரையை வீட்டுத் தோட்டத்திலும், தொட்டிகளிலும் எளிதாக வளர்க்கலாம். கீரை வாங்கும்போது இலைகளைப் பயன்படுத்தி விட்டுத் தூர எறியும் தண்டுகளை மண்ணில் ஊன்றி வைத்தால், அவை தளிர்த்துப் புதிய இலைகளைக் கொடுக்கும். புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், வயிற்றுப்போக்கு நிற்கும்.
கர்ப்பிணிகளின் வாந்தியை நிறுத்த ஒரு கைகண்ட மருந்தாக, புதினா இருந்து வருகிறது. புதினாக்கீரை பற்களில் ஏற்படும் பல வியாதிகளைக் குணப்படுத்தும். புதினாக்கீரையைக் கொண்டு ஓர் அருமையான பற்பொடி தயார் செய்யலாம்.
இந்தப் பற்பொடியை உபயோகித்து வந்தால் பல்லீரல் வேக்காடு, பல்லீரலில் ரத்தம் வருதல், பல் öசாத்தை, பல் அசைவு இவைகளைக் குணப்படுத்தும். வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க இந்தப் பற்பொடி நன்கு பயன்படும். இந்தப் பற்பொடியை ஒருவர் தினசரி உபயோகித்து வருவாரானால், பல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியும் வராது.
எவ்வளவு பற்பொடி தேவையோ அந்த அளவுக்கு புதினாக்கீரையைக் கொண்டு வந்து இலைகளை மட்டும் கிள்ளி எடுத்துச் சுத்தம் பார்த்து, அதை வெயிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும்.
சருகுபோல காய்ந்தபின் அதை எடுத்து, உத்தேசமாக அந்த இலை இருக்கும் அளவில், எட்டில் ஒரு பங்கு சோற்று உப்பை சேர்த்து உரலில் போட்டு நன்றாக இடிக்க வேண்டும். தூளான பின் எடுத்து, மாவு சலிக்கும் சல்லடையில் சலித்து எடுத்து, வாயகன்ற பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.
இதை தினசரி உபயோகித்து வந்தால் பற்கள் முத்தைப்போல பிரகாசிக்கும். பல் சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும்.

No comments: