Tuesday 24 January 2017

எண்களும் உங்கள் எதிர்காலமும்!

ஜோதிடகலாரத்னா குமரன் தேவசேனா

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம் போன்று மனிதனின் எதிர்காலத்தை நிர்ணயிக்க எண்கணிதமும் பெரிதும் உதவுகிறது. ஒவ்வொருவரும் தனது ஆதிக்க எண்ணை தெரிந்துகொண்டால், அதன் மூலம் நமது பொதுவான குணநலன்களையும், அதன் அடிப்படையிலான எதிர்கால பலன்களையும் அறிய முடியும்.
ஆதிக்க எண்ணை தெரிந்துகொள்வது எப்படி?: ராசி மற்றும்
நட்சத்திரத்தின் அடிப்படையில் ஆதிக்க எண்ணை கண்டுபிடிக்கலாம்.  உதாரணமாக, ஒருவர் பரணி நட்சத்திரத்தில் மேஷ ராசியில் பிறந்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ராசியில் மேஷம் 1-வது ராசியாகும். நட்சத்திரத்தில் பரணி 2-வது நட்சத்திரம் ஆகும். ராசியின் எண்ணாகிய 1-ஐயும் நட்சத்திரத்தின் எண்ணாகிய 2-ஐயும் பெருக்கி வரும் எண் 2. எனவே, அவர் 2-ம் எண்ணின் ஆதிக்கத்தில் இருப்பவர் என்று தெரிந்துகொள்ளலாம். ராசி மற்றும் நட்சத்திரம் தெரியாதவர்கள், பிறந்த தேதியின் அடிப்படையில் ஆதிக்க எண்ணை தெரிந்துகொள்ளலாம்.

ஒருவர் எந்த தேதியில் பிறந்தாரோ அந்த தேதி எண்ணே அவருக்கு உரிய ஆதிக்க எண்ணாகும். பிறந்தது 3-ம் தேதியெனில் ஆதிக்க எண் 3. பிறந்த தேதி 12 எனிலும் (1+2) ஆதிக்க எண் 3-ஆக அமையும். இனி, உங்கள் ஆதிக்க எண்ணுக்கு உரிய குணங்களையும், பலன்களையும் அறிவோமா?
எண்களும் பலன்களும்…

1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், பெயர் எண் 1-ஆக அமையப்பெற்றவர்களும் இந்த எண்ணைச் சேர்ந்தவர்களே.

சூரியனால் குறிக்கப்படும் எண் 1 ஆகும். உலக வாழ்க்கைக்கு சூரிய சக்தி எப்படி அவசியமோ அப்படியே எண் 1-ஐ சேர்ந்தவர்களும், அவர்கள் எந்த ஊருக்குச் சென்றாலும், எந்த நாட்டுக்குச் சென்றாலும் முக்கியமான இடத்தைப் பெற்றுத் திகழ்கின்றனர். வேலை செய்யும் அலுவலகத்தில் இவர்களே முதன்மையான இடத்தைப் பெற்றிருப்பதையும், அனைவராலும் மதிக்கத்தக்கவர்களாக இருப்பதையும் அனுபவத்தில் பார்க்கலாம்.
1-ம் தேதி பிறந்தவர்கள்:
மற்றவர்களுடைய அபிப்ராயங் களைப் பொறுமையுடன் செவிமடுக்க மாட்டார்கள். எதையும் மறுத்தே பேசுவார்கள். மனதில் உள்ளதை உள்ளபடி பேசுவர். இவர்கள், பிறரை அனுசரித்துச் செல்வது கடினம். தன் விருப்பப்படித்தான் எதுவும் நடக்கவேண்டும் என்று விரும்புவார்கள். அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கை இவர்களிடம் காணப்படும். வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்ற ஆர்வம் இவர்களுக்கு அதிகம் இருக்கும்.

10-ம் தேதி பிறந்தவர்கள்:
சாதுவாகக் காணப்படுவர். ரகசியங்களைப் பாதுகாப்பர்.     சமூகத்தில் பிரபலமான நிலையை அடைவர். மற்றவர்களிடம் அன்பும் பாசமும் கொண்டிருப்பர். இவர்களுடன் பழகுவது மிகவும் இனிய அனுபவமாக இருக்கும் என்பதால், அனைவரும் இவரிடம் நட்பு பாராட்டுவர்.
19-ம் தேதி பிறந்தவர்கள்:
சிந்தனை ஆற்றல் உள்ளவர்கள். பார்ப்பதற்கு சாதுவாக இருந்தாலும், காரியத்தில் இறங்கிவிட்டால், எப்படியும் சாதித்துக் காட்டுவார்கள். எந்தக் காரணத்துக்காகவும் தன்னுடைய அபிப்ராயத்தை மாற்றிக்கொள்ள மட்டார்கள். இலக்கியத்தில் புலமை உண்டு.

28-ம் தேதி பிறப்பவர்கள்:
பார்வைக்கு அழகாகவும் கவர்ச்சியாகவும் காணப்படுவர். மற்றவர்களுடன் மென்மையாக, சிரித்த முகத்துடன் பேசுவர். இந்த எண்ணில் பிறந்தவர்களிடம் பெண்களின் மென்மையைக் காணமுடியும்.

அதிர்ஷ்டம் தரும் தேதிகள்: ஒவ்வொரு மாதத்திலும் வரும் 1, 10, 19, 28 ஆகிய தேதிகள் இவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டகரமான நாள்களாகும். இந்தத் தேதிகளில் சந்தோஷம் தரும் சம்பவங்கள் நடைபெறும். கூடுமானவரை முக்கியமான காரியங்களை 1, 10, 19 ஆகிய தேதிகளில் செய்யத் தொடங்கினால் நல்ல பலன்கள் ஏற்படும்.
28-ம் தேதி தொடங்கும் காரியங்கள் நீடித்து பலன் தரும் என்று சொல்வதற்கில்லை. எனவே, அந்த தேதியில் புதிய முயற்சிகள் எதையும் தொடங்கவேண்டாம்.
தவிர்க்கவேண்டிய தேதிகள்: ஒவ்வொரு மாதமும் 8, 17, 26 ஆகிய தேதிகள் இவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லாத நாள்களாகும். இந்தத் தேதிகளில் எந்த புதிய முயற்சியையும் தொடங்காமல் இருப்பது நல்லது. வழக்கமான காரியங்களில் மட்டும் ஈடுபடலாம்.
அதிர்ஷ்ட நிறங்கள்: எண் 1-ன் ஆதிக்கத்தில் பிறந்த அன்பர்களுக்கு, மஞ்சள் நிறமே மிகவும் அதிர்ஷ்டம் தரும் நிறமாகும். பொன்னிறம் இவர்களுக்கு மகத்தான வெற்றியைத் தரும். வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்து அடர்த்தியான மஞ்சள் நிறம் வரை மஞ்சளின் அனைத்து நிறங்களும் பொருத்தமானதே. கறுப்பு மற்றும் பழுப்பு நிறங்களைத் தவிர்க்கவும். இவை, இவர்களுக்கு ஆகாத நிறங்களாகும்.
அதிர்ஷ்ட ரத்தினம்: மாணிக்கம்

வழிபடவேண்டிய தெய்வம்: சூரியன், சிவபெருமான்
வழிபடவேண்டிய தலங்கள்: 
சூரியனார் கோயில், சென்னை- பொன்னேரி அருகிலுள்ள ஞாயிறு திருத்தலம்.

(தொடரும்......)

No comments: