Wednesday 25 January 2017

ஃபீல் ஃபிரெஷ் கிளென்ஸிங் வழிகள்!

சுவர் இருந்தால்தான் சித்திரம்’ என்பார்கள். ஆரோக்கியத்தின் அவசியத்தை உணர்த்தும் பழமொழி இது. நம் உடலும் மனமும் நமக்காக ஓயாது வேலை செய்கின்றன. தொடர்ந்து வேலை செய்யும்போது இயல்பாகவே களைப்பு உருவாகிறது. ஒவ்வோர் உறுப்பையும் களைப்பை நீக்கி, பழுதுபார்த்து ஃபிெரஷ்ஷாக வைத்துக்கொள்ள வேண்டியது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அஸ்திவாரம். ஒவ்வோர் உறுப்பையும் சுத்தம் செய்யும் உணவுகள்
என்னென்ன? அதற்கான டெக்னிக்குகள் என்னென்ன என்று பார்ப்போம். பொதுவாக, உடலில் ஆக்சிஜன் அளவு குறையும்போது, செல் இழப்பு ஏற்படுகிறது. மீண்டும் மீண்டும் சூடுசெய்து சாப்பிடும் உணவுகளின் மூலமாக உணவில் உள்ள ஆக்சிஜன் அளவு குறையும். அவியல் உணவுகள், நீர்ச்சத்து உள்ள பொருட்கள் போன்ற எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை எடுத்துக்கொண்டால் உடலை ஃபிெரஷ்ஷாக வைத்துக்கொள்ள முடியும்.
மூளை
நம்முடைய ஒவ்வொரு இயக்கத்துக்கும் காரணகர்த்தா மூளைதான். நினைவாற்றல், அன்றாட இயக்கம் முதல் மகிழ்ச்சி, சோகம், சோர்வு, துயரம் என அனைத்துக்கும் காரணம் மூளைதான்.
உணவு: வெண்டைக்காய், முளைக்கட்டிய பயறு, முட்டை, அசைவ உணவுகள், சோயா பீன்ஸ், பருப்பு வகைகள், யோகர்ட், சீஸ் போன்ற புரோட்டின் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மூளையின் செயல்பாடு, சீரான இயக்கம், வளர்ச்சிக்கு இவை உதவுகின்றன. வாரத்துக்கு ஒரு முறை வல்லாரைக் கீரை எடுத்துக்கொள்ள வேண்டும். பாசிப்பயறுடன் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து தினமும் சாப்பிட்டுவர மூளை சுறுசுறுப்பாகும். மூளைச் செல்கள் புத்துயிர் பெறும். 
பயிற்சிகள்: உடற்பயிற்சி செய்யும்போது, உடல் முழுவதும் ஆக்சிஜன் ரத்த ஓட்டம் சீராகிறது. இது மூளைக்கு போதுமான அளவு உணவு மற்றும் ஆக்சிஜனைத் தருகிறது.
சுடோகு, செஸ், கியூப் போன்ற மூளைக்கான பயிற்சிகள் மூலமாக மூளையை ஃபிெரஷ்ஷாக வைத்துக்கொள்ளலாம்.படிப்பதும், கற்றுக்கொள்வதும் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். மூளையை புத்துணர்வாக வைக்க ஒரு நாளைக்கு 7-8 மணி நேரம் தூக்கம் அவசியம்.
கண்கள்
கண் என்பது ஒரு இயற்கை காமிரா. பார்த்தல் என்பது மூளையில்தான் நடக்கிறது. கண்ணுக்கும் மூளைக்கும் இணைப்பு பாலமாக, ஆப்டிக்கல் நரம்புகள் இருக்கின்றன.
உணவு: பப்பாளி, முருங்கைக்காய், முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை போன்றவற்றை  எடுத்துக்கொள்ள வேண்டும். பசலைக்கீரை, கொத்தமல்லி, மீன், முட்டை, பால், மோர், கேரட், ஆப்பிள் போன்ற வைட்டமின் ஏ அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவை, கிட்டப்பார்வை, தூரப் பார்வை போன்றவற்றை சரிசெய்து, கண்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.
வெள்ளரித் துண்டை கண்களில் வைப்பது, வாரம் ஒரு முறை எண்ணெய்க் குளியல் செய்வது போன்றவை கண்களை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும்.
பயிற்சிகள்: கண்களுக்கான ஸ்பெஷல் யோகா, கண்ணால் 8 போடும் பயிற்சிகள் இருக்கின்றன. இவற்றைச் செய்து வந்தால், பார்வைக் குறைபாடுகளைத் தவிர்க்கலாம், கண்களும் புத்துணர் வோடு இருக்கும்.
செரிமான மண்டலம்
நாம் உட்கொள்ளும் உணவை செரிமானம் செய்து, ஊட்டச்சத்துக்களைப் பிரித்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்வது செரிமான மண்டலம்.
உணவு: வாழைப்பழம், பப்பாளி, மோர், ஆப்பிள், பட்டை, இஞ்சி போன்ற உணவுப் பொருட்கள் செரிமான மண்டலத்துக்கு ஏற்றவை. மஞ்சள், சீரகம், சோம்பு, ஏலக்காய், புதினா போன்றவற்றில் உள்ள ‘குர்குமின்’ வயிற்றில் உள்ள நச்சுப்பொருட்களை முறித்து வெளியேற்ற உதவுகிறது. கஷாயம், மூலிகை டீ போன்றவற்றை அவ்வப்போது எடுத்துக்கொள்வது வயிற்றைச் சுத்தமாக்கும்.
எளிய கார்போஹைட்ரேட் உணவைத் தவிர்த்து கூட்டு கார்போஹைட்ரேட் எடுப்பது, கொழுப்பைக் குறைப்பது, நார்ச்சத்து நிறைந்த உணவை எடுப்பது, போதுமான அளவு தண்ணீர் அருந்துவது செரிமான மண்டலத்தை சீராக வைத்திருக்க உதவும்.
பயிற்சிகள்: தினசரி உடற்பயிற்சி, குறிப்பாக வயிறு, இடுப்புப் பகுதியை உறுதிப்படுத்தும் ஃபுளோர் பயிற்சிகளை செய்வது, குடலின் இயக்கத்தை சீராக வைக்க உதவும்.
இதயம்
உடல் முழுவதும் ஆக்சிஜன் நிறைந்த ரத்தத்தைக் கொண்டு செல்லவும், உடல் முழுவதும் இருந்து வரும் கார்பன் டை ஆக்ஸைடு நிறைந்த ரத்தத்தை நுரையீரலுக்கு அனுப்பவும் இதயம் ஓயாமல் துடித்துக்கொண்டிருக்கிறது. தடையின்றி இந்தப் பணி நடைபெற இதயத் தசைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
உணவு: தக்காளி, மாதுளை, கொய்யா, தர்பூசணி, திராட்சை, நல்லெண்ணெய் போன்றவை இதயத்தை இதமாக்கும் உணவுகள்.
வெண்தாமரை அல்லது செம்பருத்திப் பூ இதழை நீரில் கொதிக்கவைத்துச் சாப்பிட்டுவர, கெட்ட கொழுப்புக் குறையும். தமனிகளில் அடைப்புகள் தவிர்க்கப்பட்டு, புற்றுநோய் செல்களிடம் இருந்தும் நம்மைக் காக்கிறது.
பயிற்சி: நடைப்பயிற்சி, ஜாக்கிங், நீச்சல், ஏரோபிக் என ஏதாவது ஒரு பயிற்சி செய்வது இதயத்தை பலமடையச் செய்யும்.
சிறுநீரகம்
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதுடன், உடலின் நீர் சமநிலையை பாதுகாக்க, வைட்டமின் டி உற்பத்தி செய்ய, ரத்த அணுக்கள் உற்பத்தியைத் தூண்ட சிறுநீரகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
உணவு: நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். வாழைத்தண்டு சாறு சிறுநீரகத்துக்கு நல்லது. வாழைத்தண்டை பொரியலாகவும் சாப்பிடலாம். சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கேரட், தயிர், முள்ளங்கி போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிக அளவு தண்ணீர் குடித்துவந்தால், சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் தொற்றைத் தடுக்கலாம்.
பயிற்சி: ஏரோபிக் மற்றும் இடுப்பு, வயிற்றுப் பகுதியை வலுப்படுத்தும் பயிற்சிகள் செய்தால் போதும்.
நுரையீரல்
ரத்தத்தில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடை பிரித்து வெளியேற்றி, காற்றில் உள்ள ஆக்சிஜனை ரத்தத்தில் சேர்த்து அனுப்பும் பணியை நுரையீரல் செய்கிறது.
உணவு: வைட்டமின் சி நிறைந்த கிவி, பப்பாளி, ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். முருங்கைக்காய், கீரை, கொள்ளு போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பயிற்சி: பிரணாயாமம் போன்ற மூச்சுப்பயிற்சிகளைச் செய்யும்போது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. தினசரி உடற்பயிற்சி செய்வதும் நல்லது.
காது, மூக்கு
உணவு: வைட்டமின் டி அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். காளான், அன்னாசி, கேழ்வரகு, வாழை, முழு தானியங்கள், வெண்பூசணி போன்ற உணவுகள் காதுகளைப் புத்துயிர் பெறவைக்கும்.
பயிற்சி: சிறுசிறு ஒலிகளையும் கவனிக்கும் பழக்கத்தைப் பின்பற்றினால் காதுகளைக் கூர்மையாக வைத்துக் கொள்ளலாம். மனதை இதமாக்கும் மெல்லிய இசையைக் கேட்டு ரசிக்கப் பழகுங்கள்.
யோகா, மூச்சுப்பயிற்சிகள் மூலம் மூக்கடைப்பு, சுவாசப் பிரச்னைகளில் இருந்து நிவாரணம் பெறலாம். தியானம் செய்வதன் மூலம், மனம் அமைதி அடையும்.
கணையம்
மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். தினசரி நேரத்துக்கு உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கணையத்தைக் காக்க, மோருடன் ஒரு டீஸ்பூன் மஞ்சள் சேர்த்து குடித்துவர வேண்டும். நெல்லிக்காய்ச் சாறு மற்றும் பழச்சாறுகளை தினசரி எடுத்துக்கொள்ள வேண்டும்.
கை, கால் தசைகள்
மாதுளம் பழச்சாற்றுடன், தேன் கலந்து குடித்துவர, ரத்தசோகை நீங்கும். மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். பச்சைக் காய்கறிகளை உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். இவை, உடல் வலுப்பெற உதவும். தினசரி உடல் உழைப்பு உள்ள விளையாட்டு, பணிகளில் ஈடுபட வேண்டும்.
மனம்
யோகா, தியானம் போன்றவற்றால் மனதை அமைதி பெறச் செய்யலாம். மெல்லிய இசை கேட்பது, நல்ல புத்தகங்கள் வாசிப்பதும் மனதுக்கு ரிலாக்சேஷன்தான். உங்கள் மனம் சோர்வாக இருக்கும்போது பிடித்தமான உணவுகளை அளவுடன் சாப்பிடுங்கள். பிடித்ததை செய்யுங்கள்.

No comments: