Friday 27 January 2017

தமிழகம்

கடன் வட்டி கணக்கிடும் சூட்சுமம்!

டன் அளிக்கும் வங்கி அல்லது நிதி நிறுவனம் எப்படி வட்டியைக் கணக்கிடுகிறது என்பதைக் கவனிப்பது முக்கியம். அதாவது, மொத்தக் கடன் தொகைக்கும் ஆரம்பத்திலேயே வட்டியைக் கணக்கிடும் முறையில் வட்டி கணக்கிடப்பட்டால் உங்களுக்கு அதிக நஷ்டம் ஏற்படும். இந்த முறையை ஆங்கிலத்தில் ஃப்ளாட் ரேட் (Flat Rate) என்பார்கள்.
வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் குறிப்பிட்ட ஆண்டுக்கு வட்டியைக் கணக்கிடுகிறார்களா அல்லது கடன் தொகைக்கு ஆண்டுக்கு ஒருமுறை, அரையாண்டுக்கு ஒருமுறை, காலாண்டுக்கு ஒரு முறை, மாதத்துக்கு ஒருமுறை என எந்த முறையில் கணக்கிடுகிறார்கள் என்று பாருங்கள்.
உதாரணமாக, ஒருவர் 10 லட்சம் ரூபாய் கடன் (14% வட்டி) வாங்கி, அதனை 5 ஆண்டுகளில் திரும்பக் கட்டுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இதில் ஃப்ளாட் ரேட்டில், (10,00,000 x 0.14 x 5) + 10,00,000) / 60= 28,333. மாதத் தவணை 28,333 ரூபாய் கட்ட வேண்டியிருக்கும்.
இதுவே மாதம் ஒரு முறை என்கிற ரீதியில் வட்டியைக் கணக்கிட்டால் மாதத் தவணை ரூ.23,270 கட்ட வேண்டும். ஃப்ளாட் ரேட்டுக்கும் மாதம் ஒரு முறை வட்டியைக் கணக்கிடும் முறைக்கும் வட்டி வித்தியாசம் ரூ.5,063. எனவே, இதைத் தேர்வு செய்யக் கூடாது. மாதம் ஒரு முறை வட்டி கணக்கிடுவதே லாபகரமாக இருக்கும். இதைவிட லாபகரமாக தினசரி வட்டிக் குறையும் முறை இருக்கும்.
எனவே, எந்தக் கடனாக இருந்தாலும் அதற்கான வட்டியை எந்த முறையில் கணக்கிடுகிறார்கள், மாதத் தவணை எவ்வளவு என்பதை அறிந்து வாங்கினால், வட்டியைக் கணிசமாக மிச்சப்படுத்த முடியும். வாகனக் கடன், நுகர்வோர் பொருட்களை கணக்கிடும்போது ஃப்ளாட் ரேட் முறையைப் பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அதுபோன்ற சமயங்களில் உஷாராக இருப்பது நல்லது.

No comments: