குறைவான முதலீட்டில் அதிக லாபம் தரும் முயல் வளர்ப்பு
முயல்கள் அதிகளவில் இனவிருத்தி செய்யும் தன்மையுடையது. பலதரப்பட்ட தீவனங்களை அதிகளவில் உணவாக எடுத்துக் கொள்வதால், சிறிய தொகையை முதலீடு செய்து முயல்களை வளர்க்கலாம். ஆரம்ப முதலீடு மிகவும் குறைவு. மிக விரைவில் லாபம் கிடைக்கப்பெறும். அதாவது முயல் வளர்ப்பு ஆரம்பித்த 6 மாத காலத்திலிருந்தே பெறலாம். வருமானம் குறுகிய காலத்திலேயே கிடைக்கப் பெறுவதால், கடனை திருப்பி செலுத்துவதும் எளிதாக உள்ளது. உரோமம் மற்றும் எருவிலிருந்தும் வருமானம் கிடைக்கப் பெறுகிறது.
முயல்களுக்கு தீவனமாக எளிதில் கிடைக்கும் இலை, தழைகளையும், வீட்டில் வீணாகின்ற காய்கறிகளையும், குறைந்த அளவு தானியங்களையும் கொடுக்கலாம். இறைச்சி முயல்களின் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கும். இறைச்சி முயல்கள் மூன்று மாத வயதில் 2 கிலோ உடல் எடையை அடைகின்றன. முயல் இறைச்சியில் மற்ற இறைச்சிகளை விட அதிக அளவு புரதச்சத்தும் (21%) குறைந்த அளவு கொழுப்புச்சத்தும் (8%) உள்ளது. அதனால் முயல் இறைச்சி குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.
இனங்கள்: சோவியத்சின்செல்லா, சாம்பல் நிற ஜெயிண்ட், நியூசிலாந்து வெள்ளை, வெள்ளை நிற ஜெயிண்ட், அங்கோரா மற்றும் கலப்பு இனங்கள்.
விற்பனை வாய்ப்புகள்: முயல்களை இறைச்சிக்குப் பயன்படுத்தலாம். உயிர் எடையில் குறைந்த பட்சம் 60 - 70% இறைச்சி கிடைக்கும். முயல் இறைச்சியை உயிருடன் கிலோ ரூ.250 வரை விற்பனை செய்யலாம். இதனை சுத்தம் செய்வதும் மிக எளிது. உபரியான முயல்களை இனவிருத்திக்காக விற்பனை செய்யலாம்.
முயல் தோலை பதப்படுத்தி, கைவினைப் பொருட்கள் செய்யலாம். இதில் தொப்பி, மேலாடைகள், பர்ஸ், சாவிக் கொத்து, கவர் முக்கியமானவை. முயல் எரு சிறந்த எருவாக கருதப்படுகிறது. இதிலிருந்து மண்புழு உரம் தயாரிக்கலாம். சொந்த நிலம், தண்ணீர் வசதி, பசுந்தீவன வசதியுடைய விவசாயிகள், முயல் வளர்ப்பை ஆரம்பித்தால் நிச்சயம் கூடுதல் வருவாய் கிடைக்கும்.
முயல் இறைச்சியானது இதர இறைச்சி வகைகளுடன் ஒப்பிடும் பொழுது மிகவும் குறைவான கொலஸ்டிரால் கொண்டது. அதாவது 100 கிராம் முயல் இறைச்சியில் 50 மில்லி கிராமே கொலஸ்டிரால் உள்ளது. அதே போல் முயல் இறைச்சியில் உப்புச்சத்தும் மிகவும் குறைவாகவே உள்ளது. அதாவது 100 கிராம் முயல் இறைச்சியில் 40 மில்லி கிராமே சோடியம் எனப்படும் உப்புச்சத்தும் உள்ளது. மேலும் முயல் இறைச்சியில் எளிதில் செரிக்கவல்ல புரதச்சத்துகளையும் கொண்டுள்ளது.
நமது அன்றாட உடல் தேவைக்கான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்களும் தேவையான அளவு முயல் இறைச்சியில் உள்ளன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் முயல் இறைச்சியினை எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால் முயல் இறைச்சி நல்ல தரமான, எளிதில் செரிக்கவல்ல புரதச் சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளது. குளிர்காலம் மற்றும் கோடை காலம் என எல்லா பருவ காலங்களிலும் முயல் இறைச்சியை உண்ணலாம்.
- பேராசிரியர்
பண்ணை முருகானந்தம்,
மதுரை. 94435 57579
No comments:
Post a Comment