Monday 30 January 2017

திருமணத்துக்குப் பிறகு பெண்கள் இனிஷியல் மாற்ற வேண்டுமா?

பெண்கள் பெரும்பாலும், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் பெயர் பதிவுசெய்யும்போது, கணவர் பெயர் சேர்த்தோ, அவரது பெயரின் முதல் எழுத்தை இனிஷியலாகவோ கொடுக்கப் பழகியிருக்கிறார்கள். அதே நினைவில், தேர்வு அல்லது வேலைக்கு விண்ணப்பம் எழுதும்போதும், தங்களின் இனிஷியலாக கணவர் பெயரின் முதல் எழுத்தை எழுதிவிடுகிறார்கள். அவர்களின் கல்வி, பிறப்புச் சான்றிதழ்களிலோ அப்பா பெயரின் முதல் எழுத்தே இன்ஷியலாக இருக்கும்போது, அலுவல் ரீதியான குழப்பங்கள் ஏற்படுகின்றன. சமீபத்தில், வங்கித் தேர்வு எழுத வந்த பெண்களுக்கும் இதே சிக்கல் நேர, திருமணச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் எனக் கேட்கப்பட்டிருக்கிறது. இதனாலேயே சிலர் தேர்வு எழுத முடியாமல்கூட போய்விட்டது.

இனிஷியல் மாற்றம்… பெண்களுக்கு மட்டும் ஏன்?
ஆண்களுக்குத் திருமணத்துக்கு முன்போ பின்போ ஒருபோதும் இனிஷியல் பிரச்னைகள் வருவதில்லை. பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த மாற்றம்? வழக்கறிஞர் அருள்மொழியிடம் கேட்டோம்.
“பொது சிவில் சட்டம் பற்றி இப்போது அதிகம் விவாதிக்கப்படுகிறது. உண்மையில் பொது சிவில் சட்டம் என்பதை ஆண், பெண் இருவருக்கும் பொதுவானதாக மாற்றுவதே சரியாக இருக்கும். பெண்களுக்கு இனிஷியல் பிரச்னை எப்போது வந்தது? அவர்கள் படிக்கவும் வேலைக்கும் செல்லும்போதுதான். ஒரு பெண் திருமணத்துக்கு முன் தந்தைக்கும், திருமணத்துக்குப் பின் கணவனுக்கும், கணவன் இறந்துவிட்டால் மகனுக்கும் கட்டுப்பட்டிருக்க வேண்டும் எனும் சிலரால் வகுக்கப்பட்ட வரையறைகளே, பெண்கள் தங்கள் சுயத்தை இழந்து நிற்கக் காரணம்.
மதங்கள் பெண்கள் பெயர்களை இழக்கச் செய்கின்றனவா?
இந்துக்களில் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு முன்பு வரை கணவர் பெயரைக் கூட பெண்கள் சொல்ல மாட்டார்கள். திருமணப் பத்திரிகைகளில் மணமக்களின் தந்தை பெயர் மட்டுமே இருக்கும். கிறிஸ்தவ மதத்தில் திருமணத்துக்குப் பின், அந்தப் பெண்ணின் பெயரே மறைந்துவிடுகிறது. எலிஸபெத் எனும் பெண் டேனியலைத் திருமணம் செய்தபின், மிஸஸ் டேனியல் என்றே அழைக்கப்படுகிறார். இஸ்லாம் முறையில் முன்பெல்லாம் திருமணப் பத்திரிகையில் பெண்ணின் பெயருக்குப் பதில் ‘அழகிய மணமகளை’ என்றுதான் இருக்கும். இந்த ஆண்மைய சமூகப் பழக்கங்களின் தொடர்ச்சியாகவே கண வரின் பெயர் இனி ஷியலாக பெண்களுக்கு வந்து சேர்ந்திருக்கிறது. 

அரசியலமைப்புச் சட்டப்படி…
ஒரு பெண், ஆணைப் போலவே திருமணத்துக்கு முன்னும் பின்னும் தன் தந்தையின் இனிஷியலோடு, ஒரே இனிஷியலோடு இருக்க முடியும்.
ஒரு பெண் தன் தந்தையின் பெயரைத்தான் இனிஷிய லாக வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தன் தந்தையின் பெயரோடு, தாய் பெயரையும் இணைத்து இனிஷியலாக வைத்திருக் கலாம். அல்லது, தந்தை பெயர் இல்லாமல் தாய் பெயரை மட்டும்கூட இனிஷியலாக வைத்திருக்கலாம். 

இன்ஷியலைத் தேர்வு செய்யும் உரிமையை அரசிய
லமைப்புச் சட்டம் பெண் களுக்கு வழங்கியுள்ளது” என்று தெளிவுபடுத்தினார் அருள்மொழி. 


அது சுயமரியாதை சார்ந்தது!
ஒரு பெண் இனிஷியல் மாறுவது என்பது கல்வி மற்றும் வேலை சார்ந்தது மட்டுமல்ல, அவரது சுய மரியாதை சார்ந்ததும்கூட. திருமணத்துக்குப் பிறகு தன் நேசத்துக்கு உரிய தந்தையை தன் பெயரிலிருந்து பிரிவது நிஜமாகவே வலி தரும் விஷயம்தான். பெண்ணியச் செயற்பாட்டாளர்  ஓவியா வின் பார்வை இது…
“நேசித்து திருமணம் செய்திருந்தாலும்கூட, தன் இனிஷியலை மாற்றிக் கொள்ளும்போது மனம் குறுகுறுக்கவே செய்யும். அது உளவியலாக அந்தப் பெண்ணை நிச்சயம் பாதிக்கும்.
திருமணம் ஆனபிறகு, பெண்கள் பலரும் தாங்களா கவே கணவரின் பெயரைச் சேர்த்துக்கொள்கிறார்கள். இது அவசியமற்றது என்பதே என் கருத்து. சில வீடுகளில் ஆண்கள் வற்புறுத்தி அவர் பெயரை இணைக்கச் சொல் வதையும் பார்க்க முடிகிறது.
இந்தியாவில் அப்பாவின் பெயரை இனிஷியலாக்கிக் கொள்வதே வழக்கமாக உள் ளது. அம்மாவின் பெயரைச் சேர்ப்பதே இல்லை. கேரளா வின் சில பகுதிகளில் விதி விலக்காக அம்மாவின் பெயரை இணைக்கிறார்கள். ஒரு பெண்ணின் தந்தை சரி யில்லாதவராக, குடும்பத்தை விட்டு ஓடியிருந்தாலும்கூட அவரின் பெயரை அந்தப் பெண் இறுதிவரை சுமக்கவே வேண்டியிருக்கிறது. இதில் அம்மாவின் பெயரையும் இனிஷியலாகக் கொள்ளும் பழக்கத்தை பலரும் முன் வைப்பதேயில்லை.
என் மகனின் பெயர் ஜீவசகாப்தன். அவருக்கு என் பெயர் மற்றும் கணவரின் பெயரின் முதலெழுத்தையும் சேர்த்து ஓ.வி.ஜீவசகாப்தன் என்று பள்ளியில் சேர்த்தோம். பள்ளி யில் ஏதேனும் ஒரு பெயரை மட்டும் வைக்க வேண்டும் எனச் சொன்னபோது, ‘அப்படி யென்றால் அவன் அம்மாவின் பெயரே இருக்கட் டும்’ என்றார் என் கணவர். பிறகு இருவரின் பெயருடன் பதிவு செய்தார்கள். இப்போது என் பேத்தியின் பெயரும் எஸ்.ஜெ.இதய சிற்பி என அம்மா-அப்பா இருவர் பெயரின் முதலெழுத்தோடு தான் பதிந்திருக்கிறோம்.” 
ஆண்களுக்கு மட்டுமல்ல… பெண்களுக்கும் தனித்த அடை யாளம் இருக்கிறது. அதை இழக்காமல் வாழ்வோம்!

No comments: