Sunday 29 January 2017

பெப்சி, கோக்கிற்கு மட்டுமல்ல பவண்டோவிற்கும் மாற்று இதுதான்..!

பெப்சி

மிழகத்தில் வரும் மார்ச் 1-ம் தேதி முதல் பெப்சி, கோக் போன்ற வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பதில்லை என வணிகர் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கு மாற்றாக காளிமார்க் நிறுவனத்தின் பவண்டோ, டொரினோ போன்ற உள்ளூர் தயாரிப்புகளை வாங்கி பயனடையுங்கள் என செய்திகளும் வாட்ஸ் ஆப்பில் வலம் வந்து கொண்டுள்ளது. நாம் ஒரு உண்மை நிலையை புரிந்துகொள்ள வேண்டும். நாளாக நாளாக தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் மட்டம் கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது. இதனால் விவசாயத்துக்கு தண்ணீரின்றி வறட்சியால் நிலங்கள் தரிசாக கிடக்கின்றன. நமது தண்ணீரை எடுத்து நம்மிடமே அதிக விலைக்கு விற்கும் அந்நிய நாட்டு குளிர்பானத்துக்காக இனி பணம் செலவு செய்ய கூடாது என நினைக்கும் உங்கள் எண்ணத்திற்கு ஒரு சபாஷ். ஆனால், மற்ற குளிர்பான நிறுவனங்களும் தானே நமது நிலத்தடி நீர்வளத்தை உறிஞ்சுகின்றன, அதைப் பற்றி ஏன்? நாம் கவலைப்படுவதில்லை. இதற்கு மாற்றாக இளநீரைப் பருகலாம் என ஆலோசனை சொன்னால், குளிர்பானம் போல எங்கும் கொண்டு செல்ல முடியாது எனவும் மறுப்பும்  சொல்லலாம். கேரளாவில் குளிர்பானங்களுக்கு மாற்றாக 'நீரா' எனப்படும் 'தென்னங்கள்' பதப்படுத்தி விற்பனை செய்யபடுகிறது. 
தமிழ்நாட்டில் கள் இறக்க தடை உள்ள சூழ்நிலையில், நமது அண்டை மாநிலமான கேரளாவில் பனையிலும், தென்னையிலும் கள் இறக்குவதற்குத் தடையில்லை. பனங்கள், தென்னங்கள் மற்றும் பனையில் இருந்து கிடைக்கும் பதநீரும் கேரளாவில் ரொம்பவே பிரபலம். இந்நிலையில், கேரள மாநிலத்தில்... புதிய தொழில்நுட்பம் மூலம் தென்னங்கள் சேகரிக்கப்பட்டு, ‘நீரா’ என்ற பெயரில் போதை இல்லாத பானமாக விற்பனை செய்யப்படுகிறது. மிகுந்த சுவையுடைய அந்த பானம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. 
ஜானு
இதுகுறித்துப் பேசிய பாலக்காடு பகுதியைச் சேர்ந்த ஜானு, ‘‘கேரளாவில் இதை ‘சர்க்கரைக் கள்’ என்கிறார்கள். இதைக் குடித்தால் போதை வராது. இது, உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும். பேருந்து நிலையம், ரயில் நிலையம், தபால் நிலையம் என மக்கள் கூடும் இடங்களில், ஸ்டால் அமைத்து இதை விற்பனை செய்து வருகிறோம். பொதுமக்கள் மட்டுமல்ல கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவியர்கள் இதை விரும்பிக் குடிக்கிறார்கள்” என்றவர் நமக்கு ஒரு நீராவைக் குடிக்க கொடுத்தார். வித்தியாசமான சுவையில் மிகவும் அருமையாக இருந்தது, அந்த பானம். 
இதை மக்களிடம் கொண்டுசேர்க்கும் பணியில் இருப்பவர்களில் ஒருவரான வினோத்குமார், “இது தென்னையில் இருந்து இறக்கப்படும் பானம். பாளையில் இருந்து வடியும் பாலை அப்படியே பானைக்குள் பிடித்து வைத்திருந்தால், அது கள். கள்ளைப் பருகினால், போதை கிடைக்கும். ஆனால், பாளையில் இருந்து வடியும் பாலை ஐஸ்கட்டிகள் நிரப்பப்பட்ட கலனில் பிடித்து அதை 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பதப்படுத்தி வைத்திருப்பதற்குப் பெயர் தான் நீரா. இது போதை தராது. குளிர் பதனப்பெட்டியில் மூன்று மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். ஆனால், இதன் வெப்பநிலை அதிகரித்து விட்டால், அது போதை தரும் கள்ளாக மாறி விடும். இதை குளிர் பதன வசதி செய்யப்பட்ட வாகனங்களில்தான் கொண்டு செல்ல முடியும். தற்போது, 100 மில்லி 12 ரூபாய் என்கிற விலையில் விற்பனை செய்கிறோம். தற்போது 50 ஆயிரம் தென்னை மரங்களில் இருந்து நீரா இறக்கி வருகிறோம்.

விவசாயிகளைப் பங்குதாரர்களாக கொண்டு, ‘பாலக்காடு தேங்காய் உற்பத்தியாளர்கள் கம்பெனி லிமிடெட்’ என மத்திய தென்னை வளர்ச்சி வாரியத்தின் அங்கீகாரத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கம்பெனி மூலம்தான், நீரா பானம் இறக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. விரைவில், முதலமடை  கிராமத்தில் 5 கோடி ரூபாய் செலவில் நீரா குளிரூட்டும் மையம் கட்டப்படவுள்ளது. தற்போது, கேரளாவில் உள்ள ‘குடும்பஸ்ரீ’ மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் விற்பனை செய்து வருகிறோம். கேரள மாநில கலாசார உடையில் அவர்கள் விற்பனை செய்வதால், எளிதில் மக்களிடையே பிரபலமாகி விட்டது. விரைவில் தமிழ் நாட்டின் முக்கிய நகரங்களிலும் நீரா பானத்தை விற்பனை செய்ய இருக்கிறோம். இது, பன்னாட்டு குளிர்பானங்களுக்கு மாற்றாக அமையும்” என்றார்.
கொச்சியில் இயங்கி வரும் மத்திய தென்னை வளர்ச்சி வாரியம், விவசாயிகளுக்கு நீரா இறக்க பயிற்சி அளிப்பதுடன் அனைத்து ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது. தமிழ்நாட்டிலும் நீரா இறக்க அனுமதி வழங்கப்பட்டால், தென்னை விவசாயிகளுக்கு மிகுந்த பயனாக இருக்கும்.
கேரளா நீரா
ஒரு மரம், ஒரு மாதம், ரூ 1,500 வருமானம்!
மத்திய தென்னை வளர்ச்சி வாரியத்தின் தமிழ்நாடு மண்டல இயக்குநர் கே.பாலசுதாகரி, ‘நீரா’ குறித்து பகிர்ந்துகொண்ட தகவல்கள் இங்கே...
“கேரள மாநிலத்தில் நீரா இறக்கி விற்க அனுமதி இருப்பதால், அங்குள்ள தென்னை விவசாயிகள் சராசரி வருமானத்தை விட மூன்று மடங்கு வருமானம் பார்த்து வருகிறார்கள். தமிழ்நாட்டிலும் அனுமதி கொடுத்தால், கண்டிப்பாக தென்னை விவசாயம் செழிக்கும். 
தென்னை உற்பத்தியாளர் சங்கம், தென்னை உற்பத்தியாளர் இணையம், தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் ஆகிய கூட்டமைப்புகளைத் தொடங்கி... மத்திய தென்னை வளர்ச்சி வாரியத்தில் முறைப்படி பதிவுசெய்யும் தென்னை விவசாயிகளுக்கு மட்டும்தான் நீரா இறக்கவும், பதப்படுத்தவும், விற்பனை செய்யவும் மானியங்கள் வழங்கப்படுகின்றன. தென்னை உற்பத்தியாளர் சங்கம் அமைக்க 40 முதல் 100 விவசாயிகள் உறுப்பினராக இருத்தல் அவசியம். அதோடு ஒவ்வொரு உறுப்பினருக்கும், காய்க்கும் தென்னை மரங்கள் 10 இருக்க வேண்டும்.
10 தென்னை உற்பத்தியாளர் சங்கம் அல்லது 500 தென்னை விவசாயிகள் ஒன்று சேர்ந்து தென்னை உற்பத்தியாளர் இணையம் துவக்க முடியும். இப்படித் துவக்கும் இணையத்தின் வசம், காய்க்கும் தென்னை மரங்கள் ஒரு லட்சம் இருக்க வேண்டும்.10 இணையங்கள் ஒன்றிணைந்து தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் துவங்க முடியும். தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்தில், காய்க்கும் தென்னைகள் 10 லட்சம் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். நீரா இறக்கவும், பதப்படுத்தவும், புட்டியில் அடைக்கவும், விற்பனை செய்வதற்கு செய்யப்படும் தொழில் முதலீட்டில் 25 சதவிகிதம் அல்லது 50 லட்சம் ரூபாய் வரை தென்னை வளர்ச்சி வாரியத்தின் மூலம் மானியம் கிடைக்கும்.
கேரள மாநிலத்தில் உள்ள தென்னை மரங்களை விட தமிழ்நாட்டில் உள்ள தென்னை மரங்களுக்கு காய்ப்புத்திறன் அதிகம். கேரள தென்னையில் இருந்து ஒரு நாளுக்கு சராசரியாக 3 லிட்டர் அளவுதான் நீரா கிடைக்கும். ஆனால், தமிழ்நாட்டுத் தென்னைகளில் இருந்து 5 லிட்டர் வரை நீரா இறக்க முடியும்.   நீரா பானமும் பதநீரும் ஒன்றுதான் என்பதுபோல சிலர் நினைக்கிறார்கள். ஆனால், இரண்டும் வேறு வேறு. நீரா இறக்கிய பிறகு பதப்படுத்தி வைத்தால் கெட்டுப்போகாது. நீரா பானத்துக்கு விற்பனையிலும் பிரச்னை இல்லை. பன்னாட்டு நிறுவன பானங்களுக்கு நிகராக சுதேசி பானமாக நீரா, கேரளாவில் சக்கை போடு போடுகிறது. இதற்கு ஏற்றுமதி வாய்ப்பும் உண்டு. 
நீரா குறித்த தொடர் பயிற்சிகளை தென்னை வளர்ச்சி வாரியம் அளித்து வருகிறது. ஒரு தென்னை மரத்தின் ஆண்டு வருமானம் அதிகபட்சம் 1,500 ரூபாய்தான். ஆனால், நீரா இறக்கி விற்பனை செய்யும் போது ஒரு மாதத்திலேயே 1,500 ரூபாய் வருமானம் பார்க்க முடியும்” என்றார்.
பெப்சி, கோக்-கை தவிர்த்து 'நீரா' பானத்தை குடிப்பதன் மூலம் விவசாயத்தையும் பாதுகாக்கலாம். நிலத்தடி நீர்வளத்தையும் பாதுகாக்கலாம்.

                                                             நன்றி
                                                          விகடன்

No comments: