Monday, 23 January 2017

தொடரும் விவசாயிகள் மரணம்; விவசாயம் பொய்த்ததால் விவசாயி மாரடைப்பால் மரணம்!


நாகை: காவிரி டெல்டா மாவட்டத்தில் காவிரியில் இருந்து நீர் கிடைக்காமலும், இயற்கையாக பெய்யும் வடகிழக்குப் பருவமழை பெய்யவில்லை என்பதாலும் விவசாயிகள் தொடர்ந்து மரணம் அடைந்து வருகின்றனர். விவசாயம் பொய்த்துப் போனால் விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகிவிட்டது. பயிர்கள் காய்ந்த அதிர்ச்சியில் மாரடைப்பிலும் பல விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நாகை மாவட்டம் மேலகாவலக்குடி எனும் கிராமத்தில் உள்ள விவசாயி ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். விவசாயி தம்புசாமி, இன்று காலை தான் பயிரிட்ட நிலத்திற்கு வழக்கம் போல் சென்றுள்ளார். அங்கு பயிர்கள் நீரின்றி வாடிக்கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சுருண்டு விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.
விவசாயம் பொய்த்துப் போனதால் நாகை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 11 பேர் நாகை மாவட்டத்தில் இறந்துள்ளனர். தற்கொலை செய்து கொண்டது, அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்பட்டது என மொத்தம் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர்.

No comments: