Tuesday 24 January 2017

ஆதவா போற்றி… ஆதித்யா போற்றி!

சூரியனை ஆன்மாவாகவும் சந்திரனை தலையிலும் வைத்து இருப்பார் ஈசன் (ஆதித்யாத்மா, சந்திரசேகர:). ஸ்ரீமன் நாராயணன், அவற்றை தன்னுடைய இரு கண்களாக வைத்து, செயல்பாடுகளுக்கு சாட்சியாக இருப்பார் (சந்த்ரசூர்யௌச நேத்ரே).
சூரியனும் சந்திரனும் அடுத்தடுத்த ராசியில் தென்படுவர். கடகத்தில் சந்திரனும், சிம்மத்தில் சூரியனும் இருப்பார்கள். உச்சத்திலும் நீசத்திலும் அவ்விருவரும் அடுத்தடுத்த ராசியில் தென்படுவார்கள் (மேஷம், விருஷபம்- உச்சம், துலாம், விருச்சிகம்- நீசம்). கிழமைகளிலும் ஞாயிறு, திங்கள் அடுத்தடுத்து இருக்கும். தை மாதத்தில் சூரிய பூஜை. மாசிப் பௌர்ணமியில் சந்திர பூஜை. அங்கும் அவர்களது வரிசை தவறாது.  ஆக, சூரியனுக்கு உகந்தது இந்த தை மாதம்!
சூரியன், கிரக நாயகன், ஆத்ம காரகன், ஒளிப்பிழம்பு, உலகத்தின் ஒளிவிளக்கு. உலகின் இயக்கம் அவன் வசம். ‘முத்தொழிலிலும் சூரியன் தென்படுவதால், பரம்பொருளின் மறுவடிவமாகத் திகழ்கிறான்’ என்று புராணம் கூறும் (விரிஞ்சி நாராயண சங்கராத்மனே). கிரகங்களின் நாயகன் சூரியன். ஒளி வடிவானவன்; பார்வைக்கு இலக்காகும் பரம்பொருள், அவன் (சூர்ய:ப்ரத்யஷதேவதா). ‘உலகின் அணையா விளக்கு’ என்பார் வராகமிஹிரர் (த்ரைலோக்ய தீபோரலி:). சூரியனது கிரணங்களே, மற்ற கிரகங்களை இயக்க வைக்கிறது. காலை, மதியம் மற்றும் அந்தி சாயும் வேளைகளில் அவனை ஆராதிப்பது சிறப்பு என்கிறது வேதம்.
சூரிய வழிபாடு சுகாதாரத்தை நிலை நிறுத்தும் (ஆரோக்யம் பாஸ்கராதிச்சேத்). சூரியனின் கிரணம் படாத இடமே இல்லை. கிரணம் பட்டு, அதன் தாக்கத்தால் பொருளில் தென்படும் மாற்றங்களைக் கொண்டு உருவானதே காலம்; அதாவது வேளை என்கிறது வேதம் (தஸ்யா:பாகவிசேஷேண ஸ்மிருதம்காலவிசேஷணம்). இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்கால நிகழ்வுகளுக்கு அவனே சாட்சி! ‘முக்காலத்திலும் நிகழ்கிற பலன்களை வெளியிடும் தகுதியை எனக்கு அளித்து அருளுங்கள்’ என வராகமிஹிரர் சூரிய பகவானை வேண்டுகிறார் (வாசம்ந: ஸததாதுறைககிரண: த்ரைலோக்யதீபோரலி:).
அவனுடைய வெப்பம், குளிர்ச்சியை சந்தித்த சந்திர கிரணத்துடன் இணைந்து ஆறு பருவக் காலங்களை உருவாக்குகிறது. தட்பவெட்பங்கள்தான் உலகச் சூழல் என்கிறது சாஸ்திரம் (அக்னீஷோமாத்மகம்ஜகத்). இடைவெளியை (ஆகாசத்தை) நிரப்பும் இந்த இரு பொருள்களின் மூலாதாரம் அவன் என்கிறது வேதம் (விச்வான்யயோ…). மோட்சத்தின் நுழைவாயில் சூரியன் என்கிறார் வராகமிஹிரர் (வர்த்மாபுனர்ஜன்மனாம்). அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களைப் படிப்படியே அடையச் செய்பவன் சூரியன்!
ஒளிப்பிழம்புகள் ஜோதிடத்துக்கு ஆதாரம். சூரியன், ஒளிப்பிழம்பு.அவனிடம் இருந்து ஒளியைப் பெற்ற சந்திரனும் ஒளிப்பிழம்பு. நட்சத்திரங்களும் ஒளி வடிவானவை என்கிறது வேதம் (ஜ்யோதிரிதி நஷத்ரேஷீ). கண்ணுக்குப் புலப்படும் சாஸ்திரம் ஜோதிடம். அதற்கு, சூரியனும் சந்திரனும் சாட்சி என்கிறது ஜோதிடம் (பிரத்யஷம் ஜ்யௌதிஷம் சாஸ்திரம் சந்திரார்க் கௌயத்ர ஸாக்ஷிணௌ). கிரகங்களின் கூட்டத்துக்கு சூரிய- சந்திரர்கள் அரசர்கள் என்கிறது ஜோதிடம். தேவர்களின் கூட்டத்துக்கு மன்னர்கள் என்கிறது வேதம். சூரியனும் சந்திரனும் இன்றி, வேள்வி இல்லை என்றும் தெரிவிக்கிறது அது (யதக்னீ ஷோமாவந்தரா தேவதா இஜ்யேதே)
இப்படி வேதத்தின் மறுவடிவம்; வேள்விக்கு ஆதாரம்; ஜோதிடத்தின் அடிப்படை; விஞ்ஞானத்தின் எல்லை; மெய்ஞ்ஞானத்தின் நிறைவு; அன்றாடப் பணிகளின் வழிகாட்டி… என நம்முடன் இணைந்த கிரகம் சூரியன்.
சிம்மத்துக்கு அதிபதியாக சூரியனைச் சொன்னாலும், அத்தனை ராசிகளிலும் சூரியன் (ஆன்மா) நிறைந்திருக்கிறான். எண்ணக் குவியல்களின் தொகுப்பை மனம் என்கிறோம். மன சஞ்சல இயல்பு, சந்திரனுக்கும் உண்டு (சஞ்சலம்ஹிமன:பார்த்த). சந்திரனுக்குக் கடகம் என்று சொன்னாலும், எல்லா ராசிகளிலும் நிறைந்திருக்கிறான், அவன்! ‘ஹோரா’ என்கிற பெயரில், எல்லா ராசிகளிலும் இரண்டு பேரும் சம பங்கில் நிறைந்திருப்பதாகச் சொல்கிறது ஜோதிடம். இந்த இரண்டுபேரின் தொடர்புடன் ராசி நாதனான மற்ற கிரகங்கள் செயல்படுகின்றன.
சூரியன் ஆன்மகாரகன்; சந்திரன் மனோகாரகன். ஆன்மாவும் மனமும் இணைந்தால் மட்டுமே புலன்கள் செயல்படும். ஜீவாத்மா வெளியேறிய பிறகு, மனம் இருந்தும் உடல் இயங்குவதில்லை. ஒவ்வொரு ராசியும் ஆன்மாவுடன் இணைந்த மனம் படைத்த உடலாகவே செயல்படுகிறது.  ராசிச்சக்கரத்தில் சூரியனின் ஊடுருவல், அத்தனை கிரகங்களையும் செயல்பட வைத்து, நன்மை தீமைகளை, கர்மவினைக்குத் தக்கபடி, நடைமுறைப்படுத்த வைக்கிறது.
பிரளயம் முடிந்து, புதிய படைப்பு துவங்கும் போது, பிரளயத்துக்கு முன்பு இருந்த சூரியனையும் சந்திரனையும் அப்படியே தோற்றிவைக்கிறார் கடவுள் என்கிறது வேதம் (சூர்யா சந்திரம ஸெள தாதா யதாபூர்வம கல்பயத்). இனப்பெருக்கத்துக்குக் காரணமான ராசிபுருஷனின் 5-ஆம் வீடான சிம்மத்தை அவனது ஆட்சிக்கு உட்பட்டதாகச் சொல்கிறது ஜோதிடம்.
தன்னம்பிக்கை, துணிச்சல், வீரம், பெருந் தன்மை, அலட்சியம், பொறுமை, அபிமானம் ஆகியவை சிம்மத்துக்கு உண்டு; சூரியனுக்கும் உண்டு. பொருட்களின் தோற்றத்துக்கு அவனது வெப்பம் வேண்டும். எனவே, அவனை பித்ருகாரகன் என்றும் சொல்வர். அவனுடன் இணைந்த கிரகங்கள் அனைத்தும் வலுப்பெறும். ஆன்ம சம்பந்தம் இருப்பதால், திறமை வெளிப்படும். அவனது கிரணத்தில் மூழ்கி, உருத்தெரியாமல் மங்கி விடுவதும் உண்டு.
சூரியனுடன் இணைந்த புதன், சிந்தனை வளத்தைப் பெருக்குவான். அதனை நிபுண யோகம் எனப் பெருமைபடத் தெரிவிக்கிறது ஜோதிடம். ஆனால், அவனுடன் முற்றிலும் ஒன்றினால் (அஸ்தமனம்) விபரீத பலனைத் தந்து, துயரத்தைச் சந்திக்க நேரிடும்.
குருவுடன் சேரும்போது, ஆன்மிக நெறியைத் தந்தருள்வான். செவ்வாயுடன் இணையும்போது, உலகவியலில் திளைத்து, சிறப்பான செயலால் பேரும் புகழும் பெற்றுத் திகழலாம். சந்திரனுடன் இணைந்தால், மனத்தெளிவை ஏற்படுத்துவான். சுக்கிரனுடன் இணைந்தால், தாம்பத்தியத்தை இழக்க நேரிடும். சனியுடன் இணைந்தால், தரம் தாழ்ந்த செயலில் ஈடுபட்டு, செல்வ வளம் பெற்றாலும், செல்லாக்காசாக மாற நேரிடும். ராகுவுடன் சேர்ந்தால், வீண்பழி, அவப்பெயர்தான் மிஞ்சும்.
பலவீனமான மேகம், சில தருணங்களில் சூரியனின் ஒளி பரவாமல் தடுப்பது உண்டு. அதேபோல், ஒளிப்பிழம்பான சூரியனை, இருள் கிரகம் மறைப்பதும் உண்டு. கேதுவுடன் சேர்ந்தால், வசதி இருந்தும் அனுபவ அறிவு இல்லாது போகும்! வசதி உலகவியலில் அடங்கும்; சுகம், மனம் சார்ந்த விஷயம். ஒன்றை அழித்து மற்றொன்றை அளிக்க வைப்பான்.  உச்சம், ஸ்வஷேத்திரம் போன்ற நிலைகளில் சூரியன் இருந்தால்,  செல்வாக்கு மிகுந்தவனாக மாற்றிவிடுவான். அவனது தனித்தன்மையை அழியாமல் காப்பாற்றுவான்.
நீசம், சத்ருஷேத்திரம் ஆகிய நிலைகளில் இருந்தால், விழுந்து விழுந்து வேலை செய்தாலும், தகுதி இருந்தும் சிறக்க முடியாது போகும்! சமூகத்தில் அங்கீகாரம் இருக்காது. பலம் பொருந்திய குரு, புதன் ஆகியோருடன் இணைந்தால், சிந்தனை வளம் பெருகும்; தன்னம்பிக்கை பிறக்கும்; மக்கள் சேவையுடன் திகழலாம்; புகழுடன் வாழலாம்! ஆன்மகாரகனின் தொடர்பு, பலன்களைச் சுவைக்கத் துணை புரியும். சூரியனும் சந்திரனும் பலம் பெற்றிருந்தால், மற்ற கிரகங்களின் தாக்கத்தை, அதனால் விளையும் சங்கடங்களை எளிதாகக் கடந்துவிடலாம். ஆன்ம பலத்தில் மனம் வலுப்பெற்றால், எல்லா இன்னல்களில் இருந்தும் விடுபடுவது எளிது.
மகான்கள் மனோபலம் மற்றும் ஆன்ம பலத்தால் காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். அந்த மனோபலத்தை சூரியனிடமிருந்து பெற வேண்டும். சந்திரன், சூரியனிடமிருந்து பலம் பெறுகிறான். தேசத்தோடு இணைந்து பிறந்தவனின் வேளை (லக்னம்) சூரியனை வைத்து நிர்ணயிக்கப்படுகிறது. வாரம், திதி நட்சத்திரம், கரணம், யோகம் ஆகிய ஐந்து கால அளவுகளுக்கு சூரியனின் பங்கும் உண்டு.
ஆன்ம சம்பந்தம் இல்லாத உடலுறுப்புகள், இயங்காது. நேரடியாகவோ பரம்பரையாகவோ ஆன்மகாரகனின் சம்பந்தமின்றி, கிரகங்கள் இயங்காது. சூரியன் தன்னிச்சையாக எதுவும் செய்வதில்லை. கர்மவினைக்குத் தக்கபடி மாற்றத்தை ஏற்படுத்துவான். பலவாறான கர்மவினைகள்; எனவே, மாறுபட்ட கிரகங் களின் துணை அவனுக்குத் தேவை. பூமியில் விளையும் பயிர்கள் பலவிதம்; அதற்கு விதையின் தரம் காரணம். கண்ணுக்கு இலக்காகாத கர்மவினையின் தரத்தை வெளிக்கொண்டு வருபவன், சூரியன்!
ஞாயிற்றுக்கிழமை, சூரிய வழிபாட்டுக்கு உகந்த நாள். விண்வெளியில் சூரியனின் ஓடு பாதை, நடுநாயகமாக விளங்குகிறது. சந்திரன், புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய், குரு, சனி… இப்படி முன்னும் பின்னுமாக இருக்கிற எல்லா கிரகங்களையும், தனது கிரணத்தால் செயல்பட வைத்து உலக இயக்கத்தைச் செம்மைப்படுத்துகிறான், சூரியன்.
‘ஸூம் ஸூர்யாயநம:’ என்று சொல்லி 16 உபசாரங்களை நடை முறைப்படுத்த வேண்டும். சூரியன் உதிப்பதற்கு முன்பே அவனை வணங்குவது சிறப்பு. சூரிய நமஸ்காரம் 12 முறை செய்ய வேண்டும்.
மித்ர – ரவி – ஸூர்ய – பானு – கக – பூஷ – ஹிரண்யகர்ப – மரீசி – ஆதித்ய – ஸவித்ரு – அர்க்க – பாஸ்கரேப்யோ நம: என்று சொல்லி வணங்கலாம். மித்ராயநம: ரவயநம: ஸூர்யாயநம: பானவேநம: ககாயநம: பூஷ்ணெநம: ஹிரண்யகர்பாயநம: மரீசயேநம: ஆதித்யாயநம: ஸவித்ரேநம: அர்க்காயநம: பாஸ்கராயநம: என்று சொல்லிப் புஷ்பத்தைக் கைகளால் அள்ளி, அவனது திருவுருவத் துக்கு அளிக்க வேண்டும். மேலும், ‘பானோ பாஸ்கர மார்த்தாண்ட சண்ரச்மேதிவாகர…’ என்ற செய்யுளைச் சொல்லி வழிபட்டால், நினைத்தது நிறைவேறும்.

No comments: