Wednesday 25 January 2017

அரிசி சாகுபடிக்கு இந்தியர்கள்தான் முன்னோர்கள் : ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..!



தொல்லியல் ஆராய்ச்சிகளின்படி கி.மு.2000 ஆண்டில் சீனாவில் அரிசி சாகுபடி செய்யப்பட்டதாக தற்போது வரை நம்பப்படுகிறது. ஆனால் இந்த கூற்றை பொய்யாக்கும் வகையில் இந்தியாதான் அரிசி சாகுபடிக்கு முன்னோடி என்பதை பிரிட்டன் மற்றும் இந்தியர்கள் அடங்கிய ஆராய்ச்சிக்குழுவினர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன்படி சீனாவில் அரிசி சாகுபடி துவங்குவதற்கு சில நூற்றாண்டுகள் முன்பே, இந்தியாவில் அரசி சாகுபடி நடைபெற்று வந்ததாக தெரிய வந்துள்ளது.
சிந்து சமவெளியில் வசித்த மக்கள் காலத்திற்கேற்ப பல வகையான அரிசி வகைகளை பயிரிடுவதில் கைதேர்ந்தவர்களாக இருந்ததாகவும், அதன் மூலம் உலோக காலத்திலேயே ஆரோக்கியமான, சரிவிகித உணவை உண்டு வந்துள்ளதாகவும் இந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
தற்போதைய பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் வடமேற்கு பகுதிகளை உள்ளடக்கியுள்ள சிந்து சமவெளியில் உலோகக் காலத்திலேயே அரிசி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் கோடைகாலத்தில் அரிசி, சிறுதானியங்கள், பீன்ஸ் மற்றும் குளிர் காலத்தில் கோதுமை, பார்லி, பருப்பு வகைகள் என சிந்து சமவெளி மக்கள் காலநிலைக்கு ஏற்றவாறு பல்வேறு வகை பயிர்களை சாகுபடி செய்துள்ளதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும் தாங்கள் சாகுபடி செய்த பயிர்கள் அக்காலத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த மிகப்பெரிய நகரங்களின் சந்தைகளில் அவர்கள் விற்பனை செய்துள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சீனாவில் அரிசி உற்பத்தி செய்யப்பட்டதாக கூறப்படும் காலத்தை விட, 430 ஆண்டுகள் முன்னதாகவே தென் ஆசியாவில் அரிசி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஆதாரமாக இருந்தது சிந்து சமவெளியில் நடைபெற்ற அரிசி சாகுபடிதான்.
மத்திய கங்கை பகுதியில் அமைந்துள்ள ’லாகூர்டேவா’ பகுதியில் அரசிப்பயன்பாடு குறித்து பண்டைய காலத்திலேயே மக்கள் அறிந்திருந்தனர் என்பது குறித்த ஆதாரங்களும் ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைத்துள்ளன. ஆனால் சீனாவில் அரிசி உற்பத்தி தொடங்கியதற்கு பின்னர்தான் அரிசி சாகுபடி தெற்கு ஆசியாவிற்கு வந்தது என இதுவரை நம்பப்பட்டு வந்தது.
பண்டைய காட்டுபயிராக அறியப்படும் ’ஒரைசா நிவாரா’-வை ஆராய்ந்த போது, சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஈரப்பதமான நில அரசியை விட, சிந்து சமவெளியில் வறண்ட நிலத்தில் பயிரிடப்பட்ட அரிசி சில நூற்றாண்டுகள் முந்தையது என தெரியவந்துள்ளது.
ரேடியோ கார்பன் முறையில் ஆராய்ந்த போது, சிறுதானியங்கள் மற்றும் குளிர்கால பருப்பு வகைகள் கி.மு2890-2630 ஆண்டுகளுக்குள்ளும், அரிசி கி.மு 2430-2630-ம் ஆண்டுகளுக்குள் சிந்து சமவெளியில் பயிரிடப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments: