Tuesday 24 January 2017

6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எல்லோரையும் வசப்படுத்தி ஆளும் திறமை கொண்டவர்கள். எப்படி மற்றவர்களை வசப்படுத்தி தான் சுகமாக வாழ்வது என்னும் கலையைப் பிறவியிலேயே கற்றவர்கள். சுக்கிரனது ஆதிக்கத்தில் பிறக்கும் இவர்கள் அதிகாரம் வகித்தல், அடக்கி ஆளுதல் ஆகிய திறமைகளைப் பெற்றிருப்பார்கள். மற்றவர்கள் மதிக்கும்படியான வாழ்க்கை இவர்களுக்கு அமையும். பிறரை மகிழ்விக்கும் நடிப்பு, நடனம் போன்ற கலைகளில் ஈடுபட்டு பணம் சம்பாதிப்பார்கள். இவர்களில் சிலர் ஆன்மிகத் துறையிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவர். இவர்கள் எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அந்தத் துறையில் புகழ் பெற்று விளங்குவார்கள்.
6-ம் தேதி பிறந்தவர்கள்:
 இவர்கள், மிக்க கண்ணியமும் ஊக்கமும் உடையவர்களாக இருப்பர். அடக்கமான சுபாவத்துடன் காணப்படும் இவர்களிடம் ஆழ்ந்த கருத்துகளும் இருக்கும். கலைகளில் சுலபமாக தேர்ச்சி ஏற்படும். பொருள் சேர்ப்பதில் மிகவும் ஆர்வமிருக்கும். இந்தத் தேதியில் பிறக்கும் ஆண்களிடம் பெண்ணின் மென்மை இழையோடிக் காணப்படும். ஆன்மிகம் சார்ந்த பத்திரிகைகளில் இவர்கள் பெயரும் புகழும் பெறுவார்கள்.
15-ம் தேதியில் பிறந்தவர்கள்: மிக வசீகரமான தோற்றம் கொண்டவர்கள். எல்லோரையும் வெகு எளிதில் வசப்படுத்தக் கூடியவர்கள். ஆதாயம் வந்துகொண்டே இருக்கும். பிரமிக்கத்தக்க பேச்சாற்றலும் கலைகளில் தேர்ச்சியும் உண்டு. இவர்கள் சாதாரணமாகப் பேசுவதே ஒரு பிரசங்கி பேசுவதுபோல் இருக்கும். எப்போதும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் காணப்படுவார்கள். இவர்கள் தங்களுடைய பேச்சினால் மற்றவர்களை எளிதில் கவர்ந்துவிடுவார்கள். நடிப்பு, நடனம் போன்ற கலைகளில் புகழும் பொருளும் ஈட்டுவார்கள். ஒருசிலர், ஆன்மிகச் சொற்பொழிவுகள் செய்வதிலும் புகழ்பெற்றுத் திகழ்வார்கள்.  
24-ம் தேதியில் பிறந்தவர்கள்: அடக்கமாகக் காணப்படுவர். மற்றவர்களிடம் நயமாகப் பேசி  காரியங்களை சாதித்துக்கொள்வதில் சமர்த்தர்கள். சமயோசிதமாகப் பேசுவதில் இவர்களை யாராலும் மிஞ்சமுடியாது. இந்தத் தேதியில் பிறந்தவர்களுக்குத் துணிச்சல் அதிகம் இருக்கும். இவர்களுடைய மண வாழ்க்கை அதிர்ஷ்டகரமானதாக இருக்கும். அரசாங்கத்திலும் தனியார் நிறுவனங்களிலும் பெரிய பெரிய பதவிகள் இவர்களைத் தேடிவரும். இவர்கள் எந்த இடத்தில் பணி செய்தாலும், தனக்கு மேல் உள்ளவர்களாலும் பெரிதும் விரும்பிப் பாராட்டப்படுவார்கள். பொதுவாக இவர்கள் வாழ்க்கையில் பெரிய அளவில் கஷ்டங்கள் எதுவும் ஏற்படாது என்பதால், இவர்களுடைய வாழ்க்கை சுகமும் சந்தோஷமும் நிறைந்ததாகவே இருக்கும்.
அதிர்ஷ்டம் தரும் தேதிகள்: முக்கியமான காரியங்களை 6,15,24 தேதிகளில் துவக்கலாம். இந்த தினங்கள் இவர்களுக்கு அதிர்ஷ்டத்தையும் விருத்தியையும் உண்டாக்கும்.
தவிர்க்க வேண்டிய தேதிகள்: 6 என்பது சுக்கிரனின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட எண் என்பதால், குருவின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட எண்ணைக் கொண்ட 3,12,21,30 ஆகிய தேதிகள் துரதிர்ஷ்டமானவை. இந்த தேதிகளில் முக்கியமான காரியங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறங்கள்: இந்த எண் காரர்களுக்குக் கரும்பச்சை, கருநீலம், நீலம், பச்சை மற்றும் சிவப்பு கலந்த வண்ணங்கள் அதிர்ஷ்டமானவை. வெள்ளை, மஞ்சள், வெளிர் சிவப்பு நிறங்களைத் தவிர்க்கவேண்டும்.
அதிர்ஷ்ட ரத்தினம்: மரகதம்
வழிபடவேண்டிய தெய்வம்: 
மகாலட்சுமி
வழிபடவேண்டிய   திருத்தலம்: 
திருவரங்கம்

(தொடரும்......)


No comments: