Tuesday 24 January 2017

வருவாய் அருள்வாய் அபிராமி!


ஞ்சையை தலைநகராகக் கொண்டு முதலாம் சரபோஜி மன்னர் ஆண்டு வந்த காலம். அவருடைய ஆட்சிக் காலத்தில் திருக்கடையூரில் வாழ்ந்து வந்தவர் அபிராமி பட்டர். அவருடைய இயற்பெயர் சுப்ரமண்ய பட்டர் என்பதாகும். அவர் நேரம்காலம் பார்க்காமல் எப்போதும் அம்பிகையின் தியானத்திலேயே திளைத்திருப்பவர். பெண்கள் அனைவரையும் அன்னை அபிராமியாகவே பாவித்து, மதிப்பவர். அவரைப் பிடிக்காத சிலர், எப்படியாவது அவரை கோயிலில் இருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்று நினைத்தனர்.
ஒரு தை அமாவாசை அன்று கோயிலுக்கு வந்தார் மன்னர் சரபோஜி. அவரிடம், சுப்ரமண்ய பட்டர் பித்துப்பிடித்தவர் என்றும், அவரை கோயிலுக்குள் வரவிடாமல் தடுக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். அவர்கள் சொல்வது சரியா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள, நினைத்த மன்னர், சுப்ரமண்ய பட்டரிடம், ‘இன்று என்ன திதி?’ என்று கேட்டார்.
அப்போது அபிராமியின் சந்நிதியில், திதிநித்யா தேவி உபாசனையில் ஆழ்ந்து ஈடுபட்டிருந்த சுப்ரமண்ய பட்டருக்கு அம்பிகையின் திருமுகம் முழுநிலவாகக் காட்சி தந்துகொண்டிருக்கவே, அதிலேயே லயித்துப்போனவராக, ‘இன்று பெளர்ணமி திதி’ என்று சொல்லிவிட்டார். ஆக, அவர் பித்துப் பிடித்தவர்தான் என்ற முடிவுக்கு வந்த மன்னர், தியானம் முடிந்து சுயநினைவுக்கு மீண்ட பட்டரிடம், அவர் சொன்னது போல் அன்றைக்கு முழுநிலவு வராவிட்டால், அவருக்கு மரணத் தண்டனை வழங்கப்படும் என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.
அதைக் கேட்டு வருந்திய பட்டர், தம்மை அப்படி சொல்லச் செய்தது அபிராமிதானே, அவளே அதற்கு ஒரு முடிவைத் தரட்டும் என்று நினைத்தவராக, ஓர் இடத்தில் அக்னி வளர்த்து, அபிராமி அந்தாதி பாடல்களைப் பாடத் தொடங்கினார். 79-வது பாடலான, ‘விழிக்கே அருளுண்டு..’ என்ற பாடலைப் பாடி முடிக்கவும், அபிராமி அன்னை தன் தாடங்கத்தை எடுத்து வானில் வீச, அது முழு நிலவாய்ப் பிரகாசித்தது. அமாவாசை அன்று முழு நிலவு வெளிப்பட்ட அதிசயத்தைக் கண்ட மன்னர் சரபோஜி, சுப்ரமண்ய பட்டரிடம் வந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டதுடன், அவருக்கு ’அபிராமிபட்டர்’ என்ற பெயரையும் சூட்டி, நிறைய வெகுமதிகளும் வழங்கினார்.
அன்றைக்கு அபிராமி பட்டருக்காக அமாவாசையையே பௌர்ணமியாக மாற்றிக்காட்டிய அம்பிகை, இன்றைக்கும் தன்னை வழிபடும் அன்பர்களது வாழ்வில் இருள்நீக்கி ஒளியேற்றி, அவர்கள் வேண்டியதை எல்லாம்
அருள்புரியவே செய்கிறாள். இதோ… அம்மையின் அருளுக்கு அத்தாட்சியாய், அபிராமி அந்தாதியைப் பாராயணம் செய்ததால் தமது வாழ்வில் ஏற்பட்ட உன்னத அற்புதத்தை விவரிக்கிறார் தருமபுர ஆதீனம் முனைவர் ஸ்ரீமத் மௌன குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள்.
வையம் துரகம் மதகரி மாமகுடம்…
‘‘சுமார் 35 வருஷத்துக்கு முன்பிருந்தே நாம் அபிராமி அந்தாதி பாராயணம் செய்து வருகிறோம். எப்போது வேண்டுமானாலும் பாராயணம் செய்துகொண்டிருந்தோம். நாம் எப்போது வேண்டுமானாலும் பாராயணம் செய்வதைக் கேட்ட தமிழறிஞரான பெரியவர் அ.ச.ஞானசம்பந்தம் ஐயா அவர்கள், ‘‘நீ நினைத்தபோதெல்லாம் அபிராமி அந்தாதி பாராயணம் செய்யக் கூடாது. ஒன்று பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலையிலோ அல்லது அர்த்தஜாமத்திலோதான் பாராயணம் செய்யவேண்டும்’’ என்று கூறினார்.
அவர் கூறியதில் இருந்து நாமும் அதிகாலை மற்றும் அர்த்த ஜாமத்தில் அபிராமி அந்தாதி பாராயணம் செய்து வந்தோம்.
ஸ்ரீமத் மௌன குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள்
தன் அடியவரின் வாக்கை மெய்ப்பிப்பதற்காக, அமாவாசை திதியையே பௌர்ணமி திதியாக மாற்றிக்காட்டிய அம்பிகை அல்லவா அபிராமியம்மை! அப்படியிருக்க, அவளைப் போற்றும் அபிராமி அந்தாதியின் மகத்துவத்தைச் சொல்லவும் வேண்டுமா?! அதன் ஒவ்வொரு பாடலுமே ஒரு சிறப்பான பலனைத் தரக்கூடியது. அதில் ஒரு பாடல்…
வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் – பிறைமுடித்த
ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கே அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே
தினமும் அபிராமி அன்னையை பிரார்த்தித்து, இந்தப் பாடலை பாராயணம் செய்து வந்தால், ஓர் அரசருக்கு நிகரான அத்தனை செல்வங்களையும் அம்பிகை அருள்வாள் என்கிறார் அபிராமிபட்டர்.பல வருடங்களுக்கு முன்பு நாம் திருநெல்வேலிப் பகுதியில் அமைந்திருக்கும் திருக்கோயில்களுக்கான கட்டளை விசாரனை பொறுப்பில் இருந்தபோது, ஒருநாள் நள்ளிரவில்,
தாமம் கடம்பு, படை பஞ்ச பாணம், தனுக் கரும்பு,
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது,
    எமக்கு என்று வைத்த
சேமம் திருவடி, செங்கைகள் நான்கு,
    ஒளி செம்மை, அம்மை
நாமம் திரிபுரை, ஒன்றோடு இரண்டு நயனங்களே.
என்ற பாடலை பாராயணம் செய்து கொண்டு இருந்தேன். அம்பிகையின் திருவடி ஸ்பரிசம் நம் தலையில் பதியக்கூடிய பேற்றினைத் தரும் சக்தி கொண்டது இந்தப் பாடல்.
அதாவது கடம்ப மாலை அணிந்தவளும், பஞ்சபாணங்களையே படைக்கலன்களாகக் கொண்டவளும், கரும்பு வில்லை ஏந்தியவளும், அருள் பொழியும் கண்களை உடையவளும், செந்நிறமான நான்கு திருக்கரங்களை உடையவளும், வயிரவர்களால் நள்ளிரவில் வணங்கப்படுபவளுமாகிய அம்பிகையே! திரிபுரை என்ற பெயரைக் கொண்டவளே! நீ எனக்கு வைத்திருக்கும் மேலான செல்வம் நின்னுடைய திருவடித் தாமரைகளே ஆகும் என்பதுதான் இந்தப் பாடலின் பொருள்.
நான் இந்தப் பாடலை பாராயணம் செய்துகொண்டு இருக்கும் போது, திருநெல்வேலியில் இருந்த அம்பாள் உபாசகர் பந்துலு எனக்கு போன் செய்தார். ‘என்ன இந்த நேரத்தில் போன் செய்கிறீர்களே?’ என்று கேட்டதற்கு, ‘என்னவோ தெரியலை, உங்களுக்குப் போன் செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதனால்தான் போன் செய்தேன்’ என்றார். அம்பாளின் திருவடி ஸ்பரிசத்தை வேண்டிய எனக்கு, அம்பாள் உபாசகர் ஒருவரிடம் இருந்து போன் வந்தது அம்பாளின் அற்புதம்தான்’’ என்றவர் தொடர்ந்து,
‘‘அபிராமி அந்தாதி பாராயணம் செய்த புண்ணியப் பலனாக பாராயணம் செய்த ஒரே வருடத்தில் நான் சிவதீட்சை வாங்கிக் கொண்டு துறவறத்துக்கு வந்துவிட்டேன். சந்நியாச தீட்சை வாங்கும் ஒருவரின் முன் ஏழு தலைமுறையினரும் பின் ஏழு தலைமுறையினரும் புண்ணியம் பெற்றவர்களாக, பிறவாப் பேரின்ப நிலையை அடைவார்கள் என்பது சாஸ்திரம். அபிராமி அந்தாதி பாராயணம் செய்த எமக்கு இதைவிட வேறு பெரிய பேறு என்ன இருக்கிறது? எல்லாம் அபிராமி அம்பிகையின் அற்புதம்தான்’’ என்று பக்திபூர்வமாகக் கூறினார்.
நாமும் தை அமாவாசைத் திருநாளில் அபிராமி அந்தாதியால் அம்மையைத் துதித்து அருள்மழை பெறுவோம்

No comments: