Thursday 26 January 2017

ரத்த சரித்திரம்

தொற்று முதல் புற்று வரை
ரோக்கியம் மற்றும் வாழும் காலத்தை அதிகரிப்பதற்காக டயட், ஆர்கானிக் தேடல், யோகா என்று யார் என்ன சொன்னாலும் அதன் பின்னால் ஓடுபவர்கள் பலர். ஆனால், “உங்கள் ஆரோக்கியத்துக்கு நீங்களாக என்ன செய்திருக்கிறீர்கள்?” என்றால் பதில், “ஒன்றும் இல்லை” என்பதுதான். சரி, ஆரோக்கியத்தை உறுதிசெய்ய எதையாவது செய்தீர்களா? என்றால் அதற்கும் சரியான பதில் இல்லை. ஆண்டுக்கு
ஒருமுறை எளிய ரத்தப்  பரிசோதனை செய்தால்கூட பல நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியும் என்கின்றன நவீன நோய் கண்டறிதல் முறைகள். ஆனால், அதற்குக்கூட நேரம் செலவழிக்க மனம் இன்றி இருப்பவர்கள்தான் 99 சதவிகித மக்கள்.
டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய் முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் நம் ரத்தத்தைப் பரிசோதிப்பதன் மூலமே தெரிந்துகொள்ள முடியும். நூற்றுக்கணக்கான நோய்களை ரத்தப் பரிசோதனை மூலம் தெரிந்துகொள்ளலாம். முக்கிய ரத்தப் பரிசோதனைகள் என்னென்ன, அது எப்படி மக்களின் உயிரைக் காப்பாற்றுகிறது என்பதைப் பற்றி பார்க்கலாம்.

கம்ப்ளீட் பிளட் கவுண்ட்
நம் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், தட்டணுக்கள் உள்ளிட்டவற்றின் அளவைத் தெரிந்துகொள்ள கம்ப்ளீட் பிளட் கவுண்ட் உதவும். அதேபோல், ரத்தக் குழாய், சிறுநீரகம், கல்லீரல், ரத்த அணுக்களின் நிலைகளையையும் இதில் தெரிந்துகொள்ளலாம்.
கம்ப்ளீட் பிளட் கவுண்ட்டில், வெள்ளை, சிவப்பு, தட்டணுக்களின் எண்ணிக்கை, வகைகள், சதவிகிதம், அடர்த்தி, தரம் உள்ளிட்டவற்றைத் தெரிந்துகொள்ளலாம். ஏதேனும் நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கிறதா? ரத்தசோகை உள்ளதா? சிவப்பணுக்களில் இயல்புக்கு மீறிய தன்மை உள்ளதா என்பதையும் தெரிந்துகொள்ள உதவும்.
ஹீமோகுளோபின் என்பது ரத்த சிவப்பணுவில் உள்ள புரதம். இதுதான், ஆக்சிஜனைக் கிரகித்து உடல் முழுவதும் கொண்டுசெல்ல துணைபுரிகிறது. ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் அனீமியா இருக்கலாம். ஹீமோகுளோபின் பரிசோதனையில், எவ்வளவு ஹீமோகுளோபின் உள்ளது, எவ்வளவு ஆக்சிஜனை அது உடல் முழுவதும் கொண்டு செல்கிறது என்று பரிசோதிக்கப்படும்.
பொதுவாக, ஒரு லிட்டர் ரத்தத்தில் 120 முதல் 180 கிராம் ஹீமோகுளோபின் இருக்க வேண்டும். இது வயது, பாலினத்தைப் பொறுத்து மாறுபடும். இயல்பைவிட அதிக அளவில் ஹீமோகுளோபின் இருந்தால், அவர்களுக்கு நீரிழப்பு, நுரையீரல் நோய், அதிக அளவில் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி போன்ற பிரச்னைகள் இருக்கலாம்.
இயல்பைவிடக் குறைவாக இருந்தால், இரும்புச்சத்து குறைபாடு, கல்லீரல் சுருக்கம், சிறுநீரக பாதிப்பு, எலும்பு மஜ்ஜை செயல்திறன் குறைபாடு, எலும்பு மஜ்ஜைப் புற்றுநோய், சில வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புக்கள் பற்றாக்குறை இருக்கலாம்.
பொதுவாக, கர்ப்பகாலத்தில் ஹீமோ குளோபின் அளவு குறைவாகவே இருக்கும். புகைப் பிடிப்பவர்களுக்கும் அதிக உயரமான இடங்களில் வசிப்பவர்களுக்கும் ஹீமோகுளோபின் அளவு சற்று அதிகமாக இருக்கும்.
நம் உடலின் முக்கிய எரிபொருள் குளுக்கோஸ். செரிமானத்தின்போது, கார்போஹைட்ரேட் குளுக்கோஸாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது. ராண்டம் சாம்பிளிங், குளுக்கோஸ் டாலரன்ஸ் என்று இதில் பலவகைப் பரிசோதனைகள் உள்ளன. பொதுவாக, குளுக்கோஸ் பரிசோதனை சர்க்கரை நோய் உள்ளதா என்பதைக் கண்டறியவும், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கிறதா என்பதை உறுதிசெய்யவும் மேற்கொள்ளப்படும். கர்ப்பகாலத்தில் சில கர்ப்பிணிகளுக்கு சர்க்கரை நோய் ஏற்படும். இதைக் கண்டறியவும் பரிசோதிக்கப்படும். பொதுவாக, கருத்தரித்த 24 முதல் 28 வாரங்களில் இந்தப் பரிசோதனை பரிந்துரைக்கப்படும்.
ரத்தத்தில் சர்க்கரை அளவு
சாப்பிடுவதற்கு முன்பு ரத்தத்தில் சர்க்கரை அளவு, 126 -க்கு மேலும், சாப்பிட்டு இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு 200-க்கு மேலும் இருந்தால், அவர்களுக்கு சர்க்கரை நோய் என்று அர்த்தம்.
இதுதவிர, சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதற்கு, கணையப் புற்றுநோய், குஷ்ஷிங்ஸ் சிண்ட்ரோம் (Cushing’s syndrome), ஹைப்பர் தைராய்டிசம், கணைய அழற்சி போன்றவையும் காரணமாக இருக்கலாம். சில வகையான மாத்திரைகள் எடுப்பதும் கூட சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
மது அருந்துவது, போதுமான ஊட்டச்சத்து உணவு உட்கொள்ளாதது, இன்சுலின் ஊசி டோஸ் அதிகம் எடுத்துக்கொள்வது, ஹைபோதைராய்டிசம், கல்லீரல் நோய்கள், சில வகையான மருந்துகள் எடுத்துக்கொள்வது பொன்றவை  சர்க்கரை அளவை மிகவும் குறைத்துவிடும்.
ஹெச்.பி.ஏ1சி பரிசோதனை
மூன்று மாத சர்க்கரை அளவைக் கண்டறிய உதவுவது ஹெச்.பி.ஏ1சி. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, குறிப்பாக ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்காதவர்களுக்கு இது இயல்பு நிலையைக் காட்டிலும் அதிகமாக இருக்கும். சர்க்கரை நோயாளிகள், எந்த அளவுக்கு சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய இந்தப் பரிசோதனை உதவும். பரிசோதனை முடிவு 6-க்கு கீழ் இருந்தால் மிகச்சிறப்பான கட்டுப்பாடு என்று அர்த்தம். 7 முதல் 8 வரை இருந்தால் ஓரளவுக்குக் கட்டுக்குள் இருக்கிறது என்றும், 9-க்கு மேல் இருந்தால், சர்க்கரை கட்டுக்குள் இல்லாமல் இருக்கிறது என்றும் அர்த்தம்.
கொழுப்புப் பரிசோதனை (Lipid Profile)
ரத்தத்தில் கொழுப்பு அளவைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் ரத்தப் பரிசோதனை இது. இந்தப் பரிசோதனைசெய்ய, குறைந்தது 9 – 12 மணி நேரங்களுக்குச் சாப்பிடாமல் இருக்க வேண்டும். பரிசோதனையில், எல்.டி.எல் என்ற கெட்ட கொழுப்பு 70 – 130 மி.கி/டெ.லி என்ற அளவில் இருப்பது நல்லது. கெட்ட கொழுப்பு எவ்வளவு குறைவாக இருக்கிறதோ அவ்வளவு நல்லது.
கல்லீரல் செயல்திறன் பரிசோதனை (Liver Function Test)
கல்லீரலின் செயல்திறனைக் கண்டறியவும் ஹெபடைட்டிஸ் வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறியவும் இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். சில மாத்திரை மருந்துகள் எடுக்கும்போது, அது எந்த அளவுக்குக் கல்லீரலைப் பாதித்திருக்கிறது என்பதை அறியவும், கல்லீரல் நோய்க்கு அளிக்கும் சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை அறியவும், கல்லீரல் சுருக்க நோய் ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறியவும் இந்தப் பரிசோதனை உதவுகிறது.
இதில் ரத்தத்தில் உள்ள, சில என்சைம்கள் மற்றும் புரதங்கள் பரிசோதிக்கப்படும். இந்த என்சைம், புரதத்தின் அளவு அதிகமாகவோ குறைவாகவோ இருப்பதை வைத்து பிரச்னைகளைக் கண்டயறிலாம். இதில், ஏ.எல்.டி, ஏ.எஸ்.டி, ஏ.எல்.பி, அல்புமின், பிலுருபின் உள்ளிட்டவை பரிசோதிக்கப்படும்.
ஹெபடைட்டிஸ் வைரஸ் பரிசோதனை
இதில், ஹெபடைட்டிஸ் ஏ ஆன்டிஜன், ஹெபடைட்டிஸ் ஏ-வுக்கு எதிரான ஆன்டிபாடி, ஹெபடைட்டிஸ் பி ஆன்டிஜன் எனப் பல பரிசோதனைகள் உள்ளன. இவை, ஹெபடைட்டிஸ் கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறியவும், சிகிச்சை எந்த அளவுக்குப் பலன் அளித்திருக்கிறது என்று கண்டறியவும் உதவுகிறது.
சிறுநீரகச் செயல்திறன் பரிசோதனை
உடலில் உள்ள நச்சுக்களை சிறுநீர் வழியாக வெளியேற்றும் பணியை சிறுநீரகங்கள் செய்கின்றன. இதில், பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய சீரம் கிரியாட்டினின், குளோமருலர் ஃபில்ட்ரேஷன் ரேட் (Glomerular filtration rate), பிளட் யூரியா நைட்ரஜன் (BUN) ஆகியப் பரிசோதனைகள் உதவுகின்றன.
தசைகள் உருவாக்கும் ஒருவகையான கழிவு கிரியாட்டினின். வயது அதிகரிக்க அதிகரிக்க கிரியாட்டினின் அளவு அதிகரிக்கிறது. பெண்களுக்கு 1.2-க்கு மேல், ஆண்களுக்கு 1.4-க்கு மேல் என்ற அளவில் கிரியாட்டினின் இருந்தால், சிறுநீரகங்கள் சரியாகச் செயல்படவில்லை என்று அர்த்தம். கிரியாட்டினின் அளவு அதிகரிக்க, அதிகரிக்க சிறுநீரகங்கள் செயல்இழப்பு எவ்வளவு என அறியலாம்.
குளோமருலர் ஃபில்ட்ரேஷன் ரேட் என்பது, சிறுநீரகக் கழிவுகளை மற்றும் அதிகப்படியான நீரை எப்படி வெளியேற்றுகிறது என்பதைக் கண்டறிய உதவும் பரிசோதனை. ஜி.எஃப்.ஆர் விகிதம் என்பது 90 அல்லது அதற்கு மேல் இருந்தால் இயல்புநிலை. 15-க்கு கீழ் சென்றால் சிறுநீரகம் செயல் இழந்துவிட்டது, டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை தேவை என்று அர்த்தம்.
பிளட் யூரியா நைட்ரஜன் பரிசோதனை
நாம் சாப்பிடும் புரதச்சத்து உடைக்கப்படும்போது யூரியா, நைட்ரஜன் உருவாகிறது. யூரியா 7ம் நைட்ரஜன் 20ம் இருந்தால் இயல்புநிலை. இது குறைந்தால் யூரியா மற்றும் நைட்ரஜன் அளவு அதிகரிக்கும்.
அலர்ஜி பரிசோதனை
ரத்தத்தில் ஐஜிஇ அளவைப் பரிசோதிக்க ஐ.ஜி.இ பரிசோதனை செய்யப்படுகிறது.இதன் மொத்த அளவு எவ்வளவு (Total IgE), தனித்தனி ஒவ்வாமைப் பொருளுக்கு இதன் அளவு (Specific IgE) என்ன என்று இரண்டுவிதமாகப் பரிசோதித்து, எந்தப் பொருளுக்கு ஒவ்வாமை உள்ளது என்று கணிக்கப்படுகிறது.
ரத்தம் கல்ச்சர்  (தொற்றுநோய்கள்)
ரத்தத்தில் பாக்டீரியா அல்லது ஃபங்கல்  போன்ற நுண்கிருமித் தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறிய பிளட் கல்ச்சர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். பரிசோதனை முடிவு ‘பாசிட்டிவ்’ என்று வந்தால், அவர்களுக்கு பாக்டீரியா அல்லது ஈஸ்ட் தொற்று இருக்கிறது என்று அர்த்தம். என்ன மாதிரியான பாக்டீரியா கிருமி என்பதைப் பொறுத்து மருந்துகளை டாக்டர் பரிந்துரைப்பர்.
லெப்டோஸ்பைரோசிஸ், டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா, ஸ்வைன் ஃபுளு போன்ற காய்ச்சல்களைக் கண்டறிய பிரத்யேக ரத்தப் பரிசோதனைகள் உள்ளன.
ஹெபடைட்டிஸ் வைரஸ் ஏ, பி, சி கிருமிகளைக் கண்டறிய தனித்தனியே பிரத்யேகப் பரிசோதனைகள் உள்ளன.
ரத்தசோகைப் பரிசோதனை
எவ்வளவு ரத்த சிவப்பணுக்கள் இருக்கின்றன, ரத்தத்தில் எவ்வளவு ஃபோலேட், வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் சி இருக்கிறது என்று கண்டறிவதன் மூலம் அனீமியாவைக் கண்டறியலாம்.
பரிசோதனையில், வைட்டமின் குறைபாடு காரணமாக அனீமியா ஏற்பட்டிருக்கிறது எனக் கண்டறிந்தால், கூடுதலாக ஆன்டிபயாட்டிக், மெத்தில்மலோனிக் அமில சோதனை (Methylmalonic acid test) உள்ளிட்ட சில பரிசோதனைகள் செய்யப்படும்.
ஊட்டச்சத்துக்கள் பரிசோதனை
வைட்டமின்கள் ஏ, பி காம்ப்ளெக்ஸ், சி, டி, கே ஆகிய  வைட்டமின்கள் பற்றாக்குறை இருக்கிறதா என்பதைக் கண்டறியவும் பரிசோதனைகள் உள்ளன. கால்சியம், பொட்டா சியம், இரும்புச்சத்து உள்ளிட்ட தாதுஉப்புக்களின் அளவைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாம். ஃபெரிட்டின் என்ற பரிசோதனை, இரும்புச்சத்து எவ்வளவு சேமித்து வைக்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய உதவும்.
ஹார்மோன் பரிசோதனை
வளர்ச்சியைக் கண்டறிய குரோத் ஹார்மோன், தைராய்டு சுரப்புத் தூண்டுதல் சரியாக உள்ளதா எனக் கண்டறிய டி.எஸ்.ஹெச், தைராய்டு சுரப்புகளின் அளவைக் கண்டறிய டி3, டி4, இனப்பெருக்க உறுப்புக்களின் வளர்ச்சி, இயக்ககத்தைத் தூண்டும் ஹார்மோன் சுரப்பு சரியாக இருக்கிறதா எனக் கண்டறிய எஃப்.எஸ்.ஹெச் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அட்ரினல், இன்சுலின் என அனைத்து ஹார்மோன்களின் அளவையும் பரிசோதனை மூலம் கண்டறியலாம்.
இனப்பெருக்க மண்டலத்தைப் பொறுத்தவரை, ஆண்களுக்கு பி.எஸ்.ஏ, டெஸ்டோஸ்டீரான் பரிசோதனைகள், பெண்களுக்கு, புரோஜெஸ்ட்டிரான் ஹார்மோன் பரிசோதனை கள் மேற்கொள்ளப்படும்.
புற்றுநோய் பரிசோதனைகள்
கேன்சர் ஆன்டிஜன் (சிஏ) – 125: சினைப்பை புற்றுநோய் இருக்கிறதா என்பதைக் கண்டறிய உதவும் பரிசோதனை இது.

கேன்சர் ஆன்டிஜன் (சிஏ) 15-3: இது இயல்பான மற்றும் புற்றுநோய் செல்கள் உருவாக்கும் ஒரு வகையான புரதம். மார்பகப் புற்றுநோயைக் கண்காணிக்க இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
கேன்சர் ஆன்டிஜன் 27.29 (சி.ஏ 27.29): மார்பகப் புற்றுநோயைக் கண்டறியவும், சிகிச்சையை கண்காணிக்கவும் உதவுகிறது.
கார்போஹைட்ரேட் ஆன்டிஜன் (சிஏ) 19-9: இந்தப் பரிசோதனை மூலம் கணையப் புற்றுநோயைக் கண்டறியலாம். இதுதவிர, பெருங்குடல், நுரையீரல், பித்தப்பை புற்றுநோய்கள், பித்தப்பை கல், கணைய அழற்சி, கல்லீரல் நோய்களைக் கண்டறியவும், சிகிச்சையைக் கண்காணிக்கவும் பயன்படுகிறது.
பி.எஸ்.ஏ: பிராஸ்டேட் வீக்கம் மற்றும் புற்றுநோயைக் கண்டறிய இது உதவுகிறது.

No comments: