Monday 30 January 2017

பூக்கள் பூக்கும் தருணம்!-டீன் ஏஜ் ஹெல்த்

லரே…’ என மலர் டீச்சரை அழைப்பதைப் போலவே பெண்களை மலரோடு ஒப்பிடுகிறோம். மலருக்கு பூக்கும் பருவம் வருவதைப்போலவே பெண்ணுக்கும் பூப்பெய்தும் பருவம். இக்காலகட்டத்தில் உடல் மற்றும் மனரீதியான மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. இந்தச் சூழலில் பெண்குழந்தைகளுக்குத் தேவையான விழிப்பு உணர்வை எப்படி, யார் கற்றுத் தருவது? அது ஏன் அம்மாவாக இருக்கக் கூடாது! பெண் குழந்தைகள் பூப்பெய்துதல் பருவம் வருகையில் அவர்களை எப்படித் தயார் செய்ய வேண்டும்? டிப்ஸ் அளிக்கிறார் மனநல மருத்துவர் குறிஞ்சி.
*குழந்தைப் பருவத்தில் இருந்து, பதின்பருவத்தை அடைகிற நிலையே
பூப்பெய்துதல். இப்பொழுதில் உடல் அளவிலும் மனதளவிலும் மாற்றங்கள் அடைவதும் வளர்ச்சிக்கான அறிகுறியே என தெளிவுபடுத்த வேண்டும்.
*பொதுவாக, பருவம் எய்தும் காலகட்டம் 11 – 14 வயது. உடல்நிலையைப் பொறுத்து இது மாறக்கூடும். இன்னும் இளம் வயதிலேயேகூட பூப்பெய்துகின்றனர். எனவே, சற்று முன்னரே குழந்தைகளிடம் மாதவிடாய் பற்றி சொல்லித்தர வேண்டும்.

*
எட்டு அல்லது ஒன்பது வயது தொடங்கிய பெண்குழந்தைகளிடம், `உன் மார்பகப் பகுதிகள் வளர்ச்சியடையும். இந்த வளர்ச்சி இரண்டு – மூன்று ஆண்டுகள் வரை இருக்கலாம். சிலருக்கு ஒரு மார்பகம் அதிக வளர்ச்சியும், இன்னொரு மார்பகம் சற்று குறைவான வளர்ச்சியாகவும் இருக்கலாம். பயம் தேவை இல்லை. இது இயல்புதான்’ என்று உணர்த்த வேண்டும்.
* `அக்குள் பகுதி மற்றும் அந்தரங்கப் பகுதிகளிலும் ரோமம் வளரும். அப்படி வளரும்போது, பூப்பெய்துதலுக்குத் தயாராகிறாய்’ என்பதையும் கூற வேண்டும்.

*
மாதவிடாய் என்பது பிறப்புறுப் பிலிருந்து ரத்தம் கசிவது. இது இயற்கையான செயல். உடலில் ஏற்படும் மாற்றம். 3-5 நாட்கள் வரை நீடிக்கும். மலம், சிறுநீர் போல இந்த குருதிப்போக்கும் ஒருகழிவுதான் என்பதைப் புரியவைக்க வேண்டும். இது நோய் கிடையாது. வளர்ச்சியின் அடையாளமே என்பதையும் உணர்த்த வேண்டும்.
ஏன் இப்படி என்று கேட்டால், பெண்ணாக இருந்து தாய்மை அடைவதற்கான வளர்ச்சி என்று சொல்லித்தரலாம். பெண் குழந்தைகள் குறிப்பிட்ட வயதில் பூப்பெய்துவர். இதன் அடையாளமாக, பிறப்புறுப்பில் குருதிப்போக்கு ஏற்படும் எனச் சொல்லிக்கொடுத்தால், பூப்பெய்தும்போது தேவை இல்லாத பயமும் குழப்பமும் ஏற்படுவது தடுக்கப்படும்.
சானிட்டரி நாப்கினை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை முன்னரே கற்றுக்கொடுப்பதால், நீங்கள் இல்லாதபோது, பள்ளியில் முதன்முதலாக மாதவிடாய் வந்தால் உதவியாக இருக்கும். இதை ஒரு நோயாகக் கருதுவதும் தவிர்க்கப்படும்.
*பள்ளி அல்லது ட்யூஷன் நேரங்களில் முதன்முறையாக உதிரப்போக்கு இருந்தால், ஆசிரியரிடம் தனக்கு நேர்ந்ததைக் கூறி சானிட்டரி நாப்கின் கேட்கலாம்… தவறு ஒன்றுமில்லை என்றும் சொல்லுங்கள்.

பூப்பெய்தும் பருவத்தில் முகத்தில் பருக்கள் வரலாம். சிலருக்குக் குரலும் மாறலாம். இது, ஹார்மோன் மாற்றங்களால் என்பதைப் புரியவைப்பது அவசியம். இந்த மாற்றங்கள் இயற்கையானவையே என்பதையும் கூறுங்கள்.
*ஹார்மோன் மாற்றங்களால் மனமாற்றங்கள் ஏற்படும். சில குழப்பங்கள் இருக்கும். சில குழந்தைகள் தனிமையைத் தேடுவர். அதனால் குழந்தையிடம் தாய், நண்பர் போல மாறிவிட வேண்டும். இதனால், பல பிரச்னைகளையும் குழப்பங்களையும் தவிர்க்கலாம்.
* எல்லா விஷயங்களையும் பற்றி தயக்கம்இல்லாமல் பேசுவதற்கும், அவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கும் சுலபமான வழி அவர்களிடம் ஃப்ரெண்ட்லியாக இருப்பதே.
பதின் பருவத்தில்தான் தங்களுக்கென ஓர் தனி அடையாளமோ அங்கீகாரமே வர வேண்டுமென நினைப்பார்கள். தன்னுடைய கருத்தை குடும்பத்தினர் ஒப்புக்கொள்ள வேண்டுமென்று வாதிடுவார்கள். அதை தர்க்கம் செய்வதாகவோ, தங்களை எதிர்த்துப் பேசுவதாகவோ தவறாக புரிந்துகொள்ளாமல், ‘சமூக பார்வையில் எது நல்லது? எது தீமை?’ என்பதை எடுத்துச் சொல்லி, பாதை தவறாமல் தடுத்திட வேண்டும்.

பதின்பருவத்தில் எதிர்பாலின் மேல் ஒருவித ஈர்ப்பு ஏற்படத் தொடங்கும். அவற்றைக் கட்டுப்படுத்துவதால் ஏற்படும் மனரீதியான விளைவுகளை ஸ்மார்ட்டாக கையாள கற்றுக்கொடுங்கள். சிலர் குடி, போதை போன்ற தவறான பழக்கவழக்கங்களை விளைவு அறியாமல் கற்று தங்களை இழப்பதுமுண்டு.இந்தப் பட்டாம்பூச்சி பருவத்தில் பெற்றோரின் கண்காணிப்போடு, அன்பும் அரவணைப்பும் மிக அவசியம்.
*பூப்பெய்துவதற்கு ஓர் ஆண்டு முன்னர்தான் வளர்ச்சி அதிகமாக (Peak Height Velocity) இருக்கும் என்பதால், ஊட்டச்சத்து மிக்க உணவுகளைத் தருவது அவசியம். கால்சியம், இரும்புச்சத்து, புரதசத்து ஆகியவை முக்கியம். கேழ்வரகு, பேரீச்சம்பழம், சிறுதானியங்கள், கீரைகள், காய்கறிகள், பழங்கள், பருப்பு, பயறு வகைகள், நட்ஸ், முட்டை, இறைச்சி, மீன் ஆகியவற்றைக் கொடுக்கலாம். 

தசை வளர்ச்சி, எலும்பு வளர்ச்சி ஆகியவை சீராக இருக்க, தினம் 30-45 நிமிடங்களுக்காவது ஏதேனும் உடலுழைப்பு வேண்டும். நடனம், சைக்கிளிங் போன்றவற்றை அவர்கள் விருப்பப்படித் தேர்ந்தெடுக்கலாம்.  இது அவர்கள் உயரமாவதற்கும் உதவி புரியும்.
* பூப்பெய்துதல் பருவத்தில் சிலர் அதிக தைரியம் உடையவர்களாகவும், சிலர் அதிக அச்சம் உடையவர்களாகவும் குண மாற்றம் அடைவார்கள். அதுவும் இயல்பானதே என்பதைப் புரிய வைக்க வேண்டும்.

No comments: