Wednesday, 8 March 2017

சுற்றுலா தலம் - உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரையை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் 




சென்னை, வறுத்தெடுக்கும் வெயில், வெறுத்து போக வைக்கும் போக்குவரத்து நெரிசல், எல்லா பொது இடங்களிலும் முண்டியடிக்கும் மக்கள் கூட்டம் என சென்னையை பிடிக்காதவர்களால் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இருந்தாலும் சென்னை நகரின் உயிர்நாடியாக இருக்கும் மெரீனா கடற்கரையை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. 

சென்னைவாசிகளின் வாழ்க்கையோடு பிரிக்க முடியாத ஓரிடம் என்றால் சந்தேகமே இல்லாமல் அது இந்த மெரீனா கடற்கரை தான். காதலியுடன் கொஞ்சம் தனிமையில் பேசவோ, குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசவோ இந்த கடற்கரையை விட சிறந்த இடம் இருக்கவே முடியாது. 

சென்னையின் உணர்வுகளோடு கலந்த இந்த கடற்கரை தான் உலகின் இரண்டாவது மிக நீண்ட கடற்கரையாகவும் இருக்கிறது. வாருங்கள், அப்படிப்பட்ட இந்த கடற்கரையை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்வோம். 

17ஆம் ஆண்டு நூற்றாண்டு வரை இப்போதிருக்கும் கடற்கரையானது சேர் சகதி நிறைந்த இடமாக இருந்திருக்கிறது. பின்னர் ஜார்ஜ் கோட்டைக்கு அருகில் துறைமுகம் கட்டப்படவே அதன் காரணமாக மணல் அரிப்பு ஏற்பட்டு இந்த கடற்கரை உருவாகியிருப்பதாக சொல்லப்படுகிறது. மெரினா கடற்கரையில் தான் இந்தியாவின் முதல் கடல் உயிரியல் பூங்கா அமைக்கப்பட்டிருக்கிறது. 

மேலும் இந்த கடற்கரை நெடுகிலும் திருவள்ளுவர், காந்தி, கம்பர், கண்ணகி, மகாத்மா காந்தி, பாரதிதாசன் போன்ற அறிஞர்களின் சிலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தினமும் அதிகாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த கடற்கரையில் நடைபயிற்சி, ஜாகிங் போன்றவற்றை மேற்கொள்கின்றனர். மேலும் இந்த கடற்கரை நெடிகிலும் 500க்கும் மேற்பட்ட சிறு கடைகள் இருக்கின்றன.  அந்த கடைகளில் கிடைக்கும் சுவையான மீன்களை சாப்பிட்டபடியே அருமையான ஒரு மாலைப் பொழுதை மெரீனா கடற்கரையில் செலவிடலாம். 

சென்னையின் பரபரப்பான வாழ்கையில் இருந்து தப்பித்து குழந்தைகளுடன் இனிமையாக இருக்கவும் இது சிறந்த ஒரு இடமாகும். குழந்தைகளுக்கென்றே இந்த கடற்கரை நெடுகிலும் ஏராளமான விளையாட்டுகள் இருக்கின்றன. இந்த கடற்கரையை ஒட்டியே தான் ஐஸ் ஹவுஸ் எனப்படும் விவேகானந்தர் இல்லம், ஜார்ஜ் கோட்டை, அறிஞர் அண்ணா சமாதி, எம்.ஜி.ஆர் சமாதி போன்றவை இருக்கின்றன. 

இந்த கடற்கரையில் அண்ணா நீச்சல் குளம் மற்றும் மெரினா நீச்சல் குளம் என இரண்டு நீச்சல் குளங்கள் இருக்கின்றன. கோடை காலத்தில் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் இந்த குளங்களுக்கு வருகின்றனர். அதிகாலை சூரிய உதயத்தையோ அல்லது மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனத்தையோ காண விரும்புகிறவர்களுக்கு இதைவிட சிறந்ததொரு இடம் இருக்க முடியாது. 

No comments: