1 ஏக்கர்… 60 நாட்கள்…ரூ.1 லட்சத்து 30 ஆயிரம்… சிறப்பான லாபம் கொடுக்கும் சின்னவெங்காயம்!
‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்று நம் முன்னோர்கள் காரணத்துடன்தான் சொல்லி வைத்திருக்கிறார்கள்… ஆவணி மாதத்தில் பெய்யும் மிதமான மழை இளம்பயிர்களுக்கு ஏற்றதாகவும், புரட்டாசியில் விட்டு விட்டு அடிக்கும் வெயில், மழை ஆகியவை வளர் பயிர்களுக்கு உகந்ததாகவும் இருக்கிறது. மானாவாரி விவசாயத்தில் ஆடிப்பட்டம்தான் மிக முக்கியமானது. அதனால்தான் விதைப்புக்கு பலரும் ஆடிப்பட்டத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த வகையில், ‘சாம்பார் வெங்காயம்’ என்றழைக்கப்படும் சின்னவெங்காயத்தை ஆடிப்பட்டத்தில் நடவு செய்து, அதிக மகசூல் எடுத்து வருகிறார்கள், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பலரும்.
சின்னவெங்காயத்தை அனைத்துப் பகுதிகளிலும் பயிர் செய்யமுடியாது. ஈரம் கலந்த காற்றும், மிதமான தட்பவெட்ப நிலையும் உள்ள பகுதிகளில் மட்டுமே சிறப்பான மகசூல் பெறமுடியும். சின்னவெங்காயத்தின் விலை, சில பட்டங்களில் காலை வாரி விட்டாலும், தொடர்ந்து சாகுபடி செய்து வருபவர்களுக்கு அது ‘ஜாக்பாட்’ என்பது ஊரறிந்த உண்மை. அதனால், பலரும் விடாமல் சின்னவெங்காயத்தை சாகுபடி செய்து வருகிறார்கள். அவர்களில், பரம்பரையாக சின்னவெங்காயத்தை சாகுபடி செய்து வரும் முன்னோடி விவசாயி மாறனும் ஒருவர். இவர், திராட்சை சாகுபடியிலும் கலக்கி வருகிறார்.
கோயம்புத்தூர்-சிறுவாணி சாலையில் உள்ள குப்பனூரில் இருக்கிறது, மாறனின் தோட்டம். ‘ஜிலுஜிலு’வென பன்னீர் தெளிக்கும் தென்மேற்குப் பருவமழையின் தூறலில், ‘தளதள’வென வளர்பருவத்தில் இருக்கும் வெங்காய வயலுக்குள் வலம் வந்தபடியே பேசினார், மாறன்.
விதைச் செலவு இல்லை!
“இது, சின்னவெங்காயத்துக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை சிறப்பா இருக்கிற பகுதி. அதிக வெப்பமும், அதிக குளிரும் இல்லாத மிதமான சூழலைக் கொடுக்கிற நில அமைப்பு வெங்காயத்துக்கு ஏத்த மாதிரி அமைஞ்சிருக்கு. இப்ப வெங்காயத்திலும் வீரிய ரகங்கள் பல வந்தாச்சு. அதுக்கெல்லாம் பட்டம் கிடையாது. நாங்க நடவு செய்றது நாட்டு ரக வெங்காயம். இது, ஆடிப்பட்ட விதைப்புல சிறப்பான மகசூலைக் கொடுக்கக் கூடியது. குறுகிய நாள்ல அதிக லாபம் கொடுக்கக்கூடிய பணப்பயிர் சின்னவெங்காயம் மட்டும்தான்.
வெங்காய சாகுபடியில விதைக்காய்க்குத்தான் அதிகமா செலவாகும். ஏக்கருக்குக் குறைந்தது 15 ஆயிரம் ரூபாய்ல இருந்து 20 ஆயிரம் ரூபாய் வரைக்கும் செலவு பிடிக்கும். பெரும்பாலான விவசாயிங்க, முன்போகத்தில் விளைஞ்சதுல, தரமான காய்களை விதைக்காகத் தேர்வு செய்து எடுத்து வெச்சுக்குவாங்க. நாங்களும் அப்படித்தான் முன்போக காய்களை விதைக்காய்களா பயன்படுத்திக்கிட்டு வர்றோம். ஒரு ஏக்கருக்கு 700 கிலோ விதை வெங்காயம் தேவைப்படும். ஆயிரம் கிலோ பச்சை வெங்காயத்தை எடுத்து சேமிச்சாதான் 700 கிலோ விதை வெங்காயம் கிடைக்கும். நான் 10 ஏக்கர்ல விதைக்கிறதுக்கு 7 ஆயிரம் கிலோ விதை வெங்காயத்தையும் என் வயல்ல இருந்தே எடுத்துக்கிறேன். ஒரு கிலோ விதை வெங்காயம் 25 ரூபாய்னு கணக்கு வெச்சுக்கிட்டாலும், இது மூலமா வருஷத்துக்கு ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் எனக்கு மிச்சமாகுது” என்ற மாறன், தொடர்ந்தார்.
ஏக்கருக்கு 7 ஆயிரம் கிலோ மகசூல்!
“ஒரு ஏக்கர்ல சின்னவெங்காயம் சாகுபடி செய்ய அதிகபட்சம் 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் செலவாகும். வெங்காயத்தைப் பொறுத்தவரை விலை, ஆகாசத்துக்கும் போகும். அதளபாதாளத்துக்கும் போகும். போன பட்டத்துல கிலோ 70 ரூபாய் வரைக்கும் விற்பனையாச்சு. இந்த வருஷம் சராசரி விலையா கிலோவுக்கு 30 ரூபாய் கிடைச்சது. ஒரு ஏக்கர்ல குறைஞ்சபட்சம் 7 ஆயிரம் கிலோ மகசூல் கிடைக்கும். அதுல, விதை வெங்காயத்துக்கு ஆயிரம் கிலோ எடுத்து வெச்சது போக, 6 ஆயிரம் கிலோவுக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்னு வருமானம் கிடைச்சது. இதுல செலவுகளைக் கழிச்சா… ஏக்கருக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் லாபமா நிக்கும். 60 நாள்ல ஒரு லட்ச ரூபாய்க்கு மேல வருமானம் கொடுக்கிற சின்ன வெங்காயம் எங்களைப் பொறுத்தவரைக்கும் ஒரு அட்சயப்பாத்திரம்தான்” என்று சொல்லி சந்தோஷமாக விடைகொடுத்தார், மாறன்.
தொடர்புக்கு, மாறன், செல்போன்: 97866-44424
விதைத்தேர்வு!
நன்றாக விளைந்த திடமான காய்களைத்தான் அடுத்த போகத்துக்கான விதைக் காய்களாகத் தேர்வு செய்ய வேண்டும். அறுவடை செய்த வெங்காயம் விதை வெங்காயமாக மாற, மூன்று மாதங்கள் பிடிக்கும். தேர்வு செய்த வெங்காயத்தைச் சுத்தம் செய்து, காற்றோட்டமான பட்டறைகளில் போட்டு வைத்தால் முளைப்புத்தன்மை நன்றாக இருக்கும்.
சாகுபடி செய்யும் விதம்…
வெங்காய சாகுபடி முறை குறித்து மாறன் சொன்ன விஷயங்கள், பாடமாக இங்கே…
சித்திரை மாதத்தில் இரண்டு முறை கோடை உழவு செய்து நிலத்தைப் பண்படுத்த வேண்டும். இரண்டாவது உழவுக்கு முன்பாக ஏக்கருக்கு தலா 5 டன் ஆட்டு எரு மற்றும் தொழுவுரம் இட வேண்டும். குறுகிய காலப்பயிரான வெங்காயத்தின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு அடியுரம் முக்கியம். நன்கு உழவு செய்து மண்ணைப் பொல பொலப்பாக்கி ‘பார்’ அமைக்க வேண்டும். பாருக்குப்பார் 45 சென்டி மீட்டர் (ஒன்றரை அடி) இடைவெளி இருக்க வேண்டும். பார் வரப்புக்களின் மையப்பகுதியில் சொட்டுநீர்க் குழாய்களைப் பதித்துக் கொள்ள வேண்டும். மண்ணை ஈரமாக்கி, வெங்காயத்துக்கு வெங்காயம் 10 சென்டி மீட்டர் இடைவெளி இருக்கும்படி நடவு செய்ய வேண்டும். இப்படி நடவு செய்யும்போது, ஏக்கருக்கு 700 கிலோ விதை வெங்காயம் தேவைப்படும். நடவு முடிந்த மூன்றாவது நாளில், உயிர்த்தண்ணீர் விட வேண்டும். தொடர்ந்து, வாரம் மூன்று முறை பாசனம் செய்ய வேண்டும்.
களை எடு… உரம் கொடு!
சின்னவெங்காயத்தைப் பொறுத்தவரை களைக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். ஆட்டு எரு போன்ற இயற்கை உரங்களைப் பயன்படுத்தும்போது அதிக அளவில் களைகள் முளைப்பதைத் தவிர்க்க முடியாது. உடனுக்கு உடன் அவற்றைப் பிடுங்கி அப்புறப்படுத்திட வேண்டும். இல்லையென்றால், பயிர்களுக்குப் போய்ச் சேரவேண்டிய சத்துக்களை களைகளே கபளீகரம் செய்துவிடும். ஆகவே, நடவு செய்த 25 மற்றும் 40-ம் நாட்களில் களை எடுப்பது அவசியம். களை எடுத்த கையோடு… 50 கிலோ தழைச்சத்து கொண்ட உரத்தை மேலுரமாக இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.
35-ம் நாளில் வெங்காயத்தாள் பச்சைக் காட்டி செழித்து நிற்கும். இந்த சமயத்தில் வெங்காயஈ, வெட்டுப்புழு ஆகியவை தாக்கலாம். அதோடு, இலைப்புள்ளி நோயும் வர வாய்ப்பு உண்டு. வாரம் ஒரு முறை பயிர்கள் நனையும்படி மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிப்பதன் மூலம் பூச்சி, நோய்த் தாக்குதல்களைக் குறைக்கலாம்.
50 முதல் 60 நாட்களுக்குள் தாள்கள் மஞ்சள் நிறமாகி மடியும். இந்த சமயத்தில் மண்ணுக்குள் இருக்கும் வெங்காயத்தைப் பிடுங்கிப் பார்க்க வேண்டும். இளஞ்சிவப்பு நிறத்தில் காய்கள் பிரிந்து திடமாக இருந்தால், அறுவடை செய்யலாம். காய்ந்த தாளோடு சேர்த்துப் பிடுங்கி, காற்றோட்டமுள்ள மேட்டுப்பாங்கான இடத்தில் குவியல் போட்டு, அதை இரண்டு நாட்கள் கலைத்து விட்டால், வேர்களில் உள்ள ஈரப்பதம் காய்ந்து, ஒட்டியிருக்கும் மண் துகள்கள் உதிர்ந்து விடும். வெங்காயத்தில் உள்ள காய்ந்த தாள்களை அறுத்து விட்டு விற்பனை செய்யலாம்.
பட்டறைப் பாதுகாப்பு!
வெங்காயத்தை, பட்டறை அமைத்து சேமித்து வைப்பது எளிமையான முறை. ரயில் பெட்டிபோல மூங்கில் தட்டிகளை நீளவாக்கில் அமைத்துக்கொண்டு அதனுள் வெங்காயத்தைக் கொட்டி, சோளத்தட்டைகளைக்கொண்டு வீட்டுக்கூரை போல மேய்ச்சல் போடவேண்டும். அடிப்பகுதியில் கரையான் பூச்சிகள் புற்று வைக்காதபடி 4 அடி உயரத்தில் வரிசையாக கற்களை அடுக்கி அதன் மீது மூங்கில்பாய் விரித்து பெட் அமைத்துக் கொள்ளவேண்டும். இதைத்தான் ‘வெங்காயம் சேமிப்புப் பட்டறை’ என்பார்கள். இதில் வெங்காயத்தைச் சேமித்து 90 நாட்கள் கழித்து பட்டறையைப் பிரித்துப் பார்த்தால், வெங்காயத்தில் இருந்த ஈரப்பதம் சுத்தமாக வெளியேறி, காய்ந்த சருகுகளுடன் வெளிர் நிறத்தில் காணப்படும். அதை மறுபடியும் காற்றில் தூற்றி, சேதம் அடைந்த வெங்காயங்களை அப்புறப்படுத்தி, மூட்டை பிடித்து மூன்று மாதங்கள் வரை வைத்திருக்கலாம்.
சேதாரத்தைக் குறைக்கும் சொட்டுநீர்ப் பாசனம்!
“விதைய நட்டமா… தண்ணிய விட்டமா… என அசால்டாக இருந்தால், வெங்காய விவசாயத்தில் வெற்றி பெற முடியாது. அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளியைக் கவனிப்பதுப் போல கண்ணும் கருத்துமாக 60 நாட்களும் வயலைச் சுத்தி சுத்தி வந்து பராமரிக்கணும். வெங்காயம் ரொம்ப மென்மையான பயிர். பேன், அசுவிணி, சாறு உறிஞ்சும் பூச்சிகள் பயிருக்குள் புகுந்து மேய்ந்து விடும் வாய்ப்பு அதிகம். அதேபோல பாசன நீரும் அதிகம் தேவைப்படும். நிலம் காயாமல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் கொடுத்துக்கிட்டே இருக்கணும். சொட்டுநீர்ப் பாசனம் மிகவும் ஏற்றது. நேரடி வாய்க்கால் மூலமா ஒரு ஏக்கருக்கு பாயுற தண்ணீரை சொட்டு நீர் வழியா மூணு ஏக்கருக்குக் கொடுக்கலாம்” என்கிறார், மாறன்.
கிடை கொடுக்கும் கொடை!
“எங்க பகுதியில கிடை ஆடு மேய்க்கிறவங்க அதிகம் இருக்காங்க. வருஷத்துக்கு ஒரு முறை எங்க நிலம் முழுசும் மாத்தி மாத்தி கிடை போட்டுக்கிட்டே இருப்பாங்க. பல வருஷமா தொடர்ந்து ஆட்டு எரு எங்க நிலத்துல விழுறதால மண்வளம் பெருகிக்கிடக்கு. அதனால, ரசாயன உரம் பக்கம் போக வேண்டிய தேவையே இல்லாமப் போயிடுச்சு. பாசனம் மட்டும் சரியா கொடுத்துட்டு வந்தா போதும்… வெங்காயம், வெங்கலம் போல விளையும். பாத்தி அமைச்சு நடவு செய்வதை விட, பார் அமைச்சு வெங்காயத்தை நடவு செய்றதுதான் நல்லது. வரப்பு போல அமைஞ்சிருக்கும் நீண்ட பார்கள்ல பொதுபொதுனு மண் இருக்கிறதால வெங்காயத்தின் வேர்கள் சுலபமா இறங்கி நல்லா வளரும்” என்கிறார், மாறன்.
உடனே விற்க வேண்டும்!
வெங்காயத்தைச் சேமித்து வைப்பவர்கள், மழைக் காலங்களில் நீர் படாமல், வெங்காயக் குவியலை ‘தார்பாலின் ஷீட்’ கொண்டு மூடி வைக்க வேண்டும். அதேபோல் தொடர்ந்து மூடி வைக்கவும் கூடாது, காற்றோட்டம் இல்லாவிட்டால், அதிக வெம்மை காரணமாக வெங்காயம் அழுகி விடும். அதிகபட்சம் வெங்காயத்தை 70 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம். அறுவடை முடிந்த கையோடு விற்பனை செய்யும்போது கிடைக்கும் எடை, சேமித்து வைத்து விற்கும்போது கிடைக்காது. 30 சதவிகிதம் எடை இழப்பு ஏற்படும். கூடுதல் விலை கிடைத்தால் மட்டும்தான் இதை ஈடு கட்ட முடியும். அதனால், உடனே விற்று விடுவது நல்லது.”
நன்றி : பசுமை விகடன்
No comments:
Post a Comment