Wednesday, 22 March 2017

இரட்டை இலை யாருக்கு? இன்று தெரிந்துவிடும்..!

Want create site? Find Free WordPress Themes and plugins.
இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக அதிமுகவின் சசிகலா அணி மற்றும் ஓபிஎஸ் அணியிடம் தேர்தல் ஆணையம் இன்று விசாரணை நடத்துகிறது. எனவே இரட்டை யாருக்கும் ஒதுக்கப்படுகிறதா அல்லது முடக்கப்படுகிறதா என்பது இன்று தெரிந்துவிடும்.
சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என அதிமுக உடைந்த பிறகு கட்சியையும் இரட்டை இலை சின்னத்தையும் கைப்பற்றுவதற்கு இரு அணிகளுக்கும் இடையே பனிப்போர் நடைபெற்று வருகிறது.
ஓபிஎஸ் அணி தேர்தல் ஆணையத்திடம் மனு:
கட்சியின் உறுப்பினர்கள் கூடி பொதுச்செயலாளரை நியமிக்க வேண்டும் என்ற அதிமுகவின் சட்ட விதிகளுக்குப் புறம்பாக கட்சியின் பொதுக்குழு கூடி சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்துள்ளது. எனவே சசிகலாவின் நியமனத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும். இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என ஓபிஎஸ் அணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக ஓபிஎஸ் தலைமையில் அவரது ஆதரவாளர்கள், கடந்த 15-ம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியைச் சந்தித்து பேசினர்.
ஓபிஎஸ் அணி சந்தித்த மறுநாளான 16-ம் தேதி சசிகலா அணியினர் நஜீம் ஜைதியைச் சந்தித்து அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவை முன்மொழிந்தவர்கள்தான் தற்போது எதிர்க்கிறார்கள் எனவும் எனவே ஓபிஎஸ் அணியினரின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் எனவும் சசிகலா அணியினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், ஓபிஎஸ் அணி தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என சசிகலா தரப்புக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
சசிகலா தரப்பு பதில்:
அதன்படி, சசிகலா தரப்பில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கட்சியின் அதிக எண்ணிக்கையிலான நிர்வாகிகளின் ஆதரவு தங்களுக்கு இருப்பதால் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.
தேர்தல் ஆணையம் இன்று விசாரணை:
இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவது தொடர்பாக சசிகலா மற்றும் ஓபிஎஸ் அணியினரிடம் தேர்தல் ஆணையம் இன்று நேரில் விசாரணை நடத்த உள்ளது. அதன்பிறகு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு நாளை கடைசி நாள் என்பதால் இரட்டை இலை யாருக்கு என்ற உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒதுக்கப்படுமா? முடக்கப்படுமா?
இரட்டை இலை சின்னம் இவர்களில்  யாருக்காவது  ஒதுக்கப்படுகிறதா அல்லது முடக்கப்படுகிறதா என்பது இன்று தெரிந்துவிடும்.
இரட்டை இலையைக் கைப்பற்றும் அணிக்கு பலம் கூடுவதோடு மற்றொரு அணிக்கு அது பின்னடைவாகவே இருக்கும் என்பதால் இரு தரப்பும் உச்சகட்ட கலக்கத்தில் உள்ளன.

No comments: