Saturday, 11 March 2017

மனதை கவரும்- ஹிக்கடுவை பீச்...

கடற்கரையில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அலைகள் அல்லாமல் தெளிவான தண்ணீரில் விளையாட யாருக்குத்தான் ஆசை இருக்காது? அதுவும் குடும்பத்தோடு ஒரு நாள் முழுவதையும் கடலில் அழகாகய் களிப்பதோடு இலங்கைக்கே உரித்தான ஆமை இனங்களை விளையாடி செல்பி கூட எடுக்கலாம் என்றால் யார் தான் விரும்பமாட்டார்கள். காலி நகரில் இருந்து 19.4 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது ஹிக்கடுவை கடற்கரை. இந்த இடம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் அமோக வரவேற்பைப்பெற்ற இடமாகும்.



கடற்கரை என்றால் வழமை போன்றது தானே என எண்ணி விட முடியாது. இலங்கையைச் சுற்றி அமைந்துள்ள கண்டமேடையின் வேறுபட்ட தன்மையினால் அதன் கடலோர அம்சங்களும் வேறுபடுகின்றன. ஏனைய பிரதேசங்களைப் போலன்றி தென்பகுதிக் கடற்பரப்பை வீதியால் பயணிக்கும் பொழுதே இந்த வித்தியாச அழகை இரசிக்க முடியும். தென்னந்தோப்புகளின் ஊடாக சில்லென வீசும் காற்றில் மெல்ல அசைந்து வரும் அலைகள் நீல வண்ணக் கடலின் குளிர்ச்சியான அழகையும் கண்களால் கவரும் வண்ணம் இருப்பதுடன். பார்ப்பவர்களைச் சொர்க்க பூமி இதோ என்று சொல்லும் அளவுக்கு அழகிய கடற்கரை இது. 

ஆழம் குறைவாக இருப்பதால் ஆபத்தில்லாத தெளிந்த நீரில் விளையாடி மகிழ முடியும். மேலும், இப்பிரதேசம் பவளப்பாறைகளுக்குப் பிரசித்தமாவதற்கும் இந்தக் கண்டமேடை அமைப்பே காரணமாகின்றது. கடற்கரையை வெண்மணல் போர்த்தி நிற்கக் கரையிலிருந்து சிறு தொலைவில் சிறிய பாறைக்குன்றுகள் இயற்கையின் சிறப்பை எடுத்துக்காட்டுகின்றன. ஹிக்கடுவை கடற்கரையை பார்வையிடுவதோடு இதனை அண்டி உள்ள விகாரைக்கும் சென்றுவர முடியும். 



சீனிகம தெவொல் மகா விகாரை300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இவ் ஆலயம் கடலின் மத்தியில் அமைந்துள்ளது. இங்கு செல்ல வல்லங்களின் உதவியை நாட வேண்டியிருக்கும். அது சுற்றுலாத் துறையினருக்கு புது அனுபவத்தை கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. 

எனினும் பக்தர்களின் வசதிக்காக அழகிய பொன் மஞ்சள் வர்ணத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய ஆலயம் பிரதான வீதியோரமாக அமைந்துள்ளது. தெவொல் கடவுள் வந்திறங்கிய அந்தப் பாறைக்குன்று ஆதி காலத்தில் துறைமுகமாக இருந்திருக்கலாம் என நம்புகின்றனர். 

ஹிக்கடுவைக் கடற்பகுதி நீர்ச்சறுக்கல் விளையாட்டு (Water skiing), ஆழ்கடல் வாழ் உயிரினங்களை இரசிப்பதற்காக முக்குளித்தல் (scuba diving), நீர் மேல் மிதத்தல் (snorkeling) போன்றவற்றுக்குப் புகழ்பெற்றது.நீச்சல் தெரியாதே எப்படி இங்கு சென்று விளையாடுவது என்று எல்லாம் யோசிக்கத்தேவையில்லை கடலலையில் விளையாட கற்றுக் கொடுக்கும் சிறு பயிற்சிக் கூடங்கள் கரையோரத்தில் உள்ளன.



நீர்விளையாட்டு உபகரணங்களையும் வாடகைக் கொடுப்பனவில் இங்கு பெற்றுக் கொள்ளலாம். பவளப்பாறைகள் செறிந்திருக்கும் கடலின் சற்றே ஆழமான பகுதியில் வித விதமான அழகிய அலங்கார மீன்கள் ஏராளமாக காணப்படுகின்றன. இதற்கென்று பிரத்தியேகமான படகுச் சேவைகள் வழங்குகின்றனர். 

படகின் கீழ்ப்பகுதிகளில் கண்ணாடி பொருத்தப்பட்ட படகுகள் மூலம் சவாரி செய்வதால் வண்ண வண்ண மீன்களுடன் உறவாட முடியும். அது மட்டுமின்றி ஆழ்கடல் பொக்கிஷங்களை ரசிக்க முடியும். 

அது மட்டுமின்றி கரையோரங்களில் உலாவித்திரியும் ஆமைகளைத் தொட்டு பார்க்க முடிவதோடு அவற்றுக்கு உணவு வழங்கி ஒரு செல்பி கூட எடுத்துக்கொள்ளலாம். 

No comments: