Friday, 3 March 2017

இந்த மாதம் ஒரு மழை பெய்யும் : அது வரலாற்றில் இடம் பெறும், தாங்க மாட்டீங்க?



தமிழகத்தில் இம்மாதம் பெய்யவிருக்கும் மழையானது வரலாற்றில் இடம்பிடிக்கும் என்றும், அதன் மூலம் பூண்டி, புழல் ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக உயரும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் ஏமாற்றி விட்டது. பல பகுதிகளில் வறட்சி தாண்டவமாடுகிறது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் பல விவசாயிகள் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.
பிப்ரவரி மாதத்திலேயே வெயில் கொளுத்தி வரும் நிலையில் மார்ச் மாதத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஆறுதல் செய்தி கூறியுள்ளது. சுட்டெரிக்கும சூரியனால் நீர் நிலைகளில் தண்ணீர் குறைந்து வருகிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பல ஏரிகளில் நீர்மட்டம் அபாய கட்டத்தில் உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்கள் குடிநீர் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளன.
இந்த நிலையில் தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க மழை மார்ச் மாதத்தில் பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரவீன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரவீன் தனது பதிவில் 1938ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை மார்ச் மாதம் பெய்த மழை அளவுகளை பதிவிட்டு, 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் மிக அதிக அளவில் வரலாற்று சிறப்பு மிக்க மழை அளவு பதிவாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் மார்ச் மாதம் சராசரியாக 20 மில்லி மீட்டர் மழை தான் பதிவாகும். 2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் போல எப்போதாவதுதான் இது அதிகமாகும்.
அப்போது 167 மில்லி மீட்டர் மழை பதிவானது. இது கடந்த 150 ஆண்டுகளில் மிக அதிகம். அதோடு மார்ச் மாதம் வெள்ளம் ஏற்பட்டது.
அதேபோல மீண்டும் ஒரு முறை ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது. ஏன் என்றால் அது வாழ்நாளில் ஒரு முறை நிகழும் அதிசயம் என்று குறிப்பிட்டுள்ளார் பிரவீன்.
தமிழகத்தில் கடந்த 1938 ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2008 – 166.9
1984 – 82.0
1879 – 76.8
1954 – 67.0
1893 – 62.0
1925 – 61.5
1944 – 57.5
2006 – 54.5
1936 – 52.9
1938 – 50.5
தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் பெய்யவிருக்கும் மழையானது வரலாற்றில் இடம்பிடிக்கும் என்றும், அதன் மூலம் பூண்டி, புழல் ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு மார்ச் மாதம் மழை பெய்யும் என்று பதிவிட்டிருந்தேன். அந்த நாள் தற்போது வெகு விரைவில் வரவிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னையை எடுத்துக் கொண்டால், ஆண்டில் மிகக் குறைவான மழைப் பொழிவு இருக்கும் மாதம் பிப்ரவரி கூட இல்லை. மார்ச் மாதம் தான் என்று சொல்லலாம்.
சென்னையில் மார்ச் மாதங்களில் வெறும் 5 மில்லி மீட்டர் மழைதான் பெய்யும். இது சாலையைக் கூட முழுதாக நனைக்காது என்றும் பிரவீன் கூறியுள்ளார்.
சென்னையில் 1938ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை மார்ச் மாதங்களில் அதிக அளவில் பதிவான மழை அளவு குறிப்பிடப்பட்டுள்ளது. மழை அளவு மில்லி மீட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.
2008 – 137.9
1933 – 86.9
1853 – 85.6
1925 – 72.6
1852 – 66.5
1919 – 49.8
1870 – 43.7
1893 – 42.2
1879 – 38.1
1938 – 36.8
சென்னையில் கடந்த 2008ஆம் ஆண்டு 137.9 மி.மீ அளவிற்கு மழை பெய்துள்ளதாக பதிவாகியுள்ளது. இந்த ஆண்டுசென்னைக்கு மிக அதிக மழை கூட எதிர்பார்க்கவில்லை.
10 முதல் 20 மி.மீ. மழை பெய்தால் கூட மகிழ்ச்சிதான். மார்ச் 3ம் தேதி தமிழகத்தில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பதிவிட்டுள்ளார்.
தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது மன்னார் வளைகுடா பகுதியை நோக்கி நகர்கிறது.
இதனால், தென் தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, டெல்டா பகுதி மாவட்டங்கள், திண்டுக்கல், திருச்சி, மதுரை, மத்திய மற்றும் தெற்கு கரையோரப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வட தமிழகத்தைப் பொறுத்தவரை வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் மழை வாய்ப்பு உள்ளதாகவும் வெதர்மேன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

No comments: