சென்னையில் பிரமாண்டம்: 4525 மாணவிகள் ஒரே இடத்தில் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் சாதனை
சென்னை:
ஆடவல்லான் இசையகம், லக்ஷமன் ஸ்ருதி மற்றும் வேல்ஸ் பல்கலைக்கழம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், சுமார் 5000 மாணவிகள் ஒரே நேரத்தில் பரத நாட்டியம் ஆடி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
சென்னை பல்லாவரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சரியாக 4,525 மாணவிகள் ஒரே நேரத்தில் பரத நாட்டியம் ஆடி அங்கு கூடியிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். 30 திருக்குறள்களை மையமாக வைத்து இசையமைக்கப்பட்ட 21 நிமிடங்கள் ஓடக் கூடிய பாடலுக்கு மாணவிகள் ஒரே நேரத்தில் நடனமாடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
பிரபல பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் அதிகம் பேர் ஒரே நேரத்தில் பரதநாட்டியம் ஆடியதற்கான கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. 600 பரதநாட்டிய ஆசிரியர்களின் பயிற்சிக்கு பின் மாணவிகள் கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
முன்னதாக 2100 பேர் நிகழ்த்திய சாதனையை இம்முறை 4,525 பேர் முறியடித்துள்ளனர். இது மிகப்பெரிய பரதநாட்டிய நிகழ்ச்சியாக அமைந்ததோடு பரதநாட்டியத்தில் கின்னஸ் சாதனையும் படைத்துள்ளனர் என கின்னஸ் நிறுவன அதிகாரி சொப்னிங் டகரிக்கர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே திண்டுக்கல்லில் 2,300 கலைஞர்கள் நிகழ்த்திய லிம்கா சாதனையும் மகாராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்த்தப்பட்ட மற்றொரு சாதனையும் முறியடித்து கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment