Saturday, 1 April 2017

சாண எரிவாயு பேருந்து அறிமுகம்; ஒரு ரூபாயில் 17 கி.மீ பயணிக்கலாம்!


மாட்டு சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் எரிவாயு மூலம் இயங்கும் பேருந்து இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பஸ்சில் ஒரு ரூபாய்க்கு 17 கி.மீ வரை பயணிக்க முடியும்.

சாண எரிவாயுவில் இயங்கும் பேருந்து

கொல்கத்தாவில் போனிக்ஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம், மாட்டு சாணத்தில் கிடைக்கும் எரிவாயுவை பயன்படுத்தி இயக்கப்படும் பேருந்தை கண்டுபிடித்துள்ளது. அசோக் லேலண்ட் நிறுவனம் பேருந்தை தயாரித்துள்ளது. இந்த வகையிலான பேருந்து ஒன்றின் உற்பத்திச் செலவு ரூ.13 லட்சம். 54 இருக்கைகள் கொண்டது. பேருந்தின் எரிபொருள் டேங்க் கொள்ளவு 80 கிலோ. கடந்த 8 ஆண்டுகளா மேற்கொண்ட ஆராய்ச்சியின் பயனாக மாட்டு சாண எரிபொருள் பேருந்து ஓடத் தொடங்கியுள்ளது. 
மாட்டு சாணத்தில் ஓடும் பஸ் கொல்கத்தாவில் நேற்று முதல் சேவையைத் தொடங்கியது. முதல் கட்டமாக 5 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கொல்கத்தா நகரில் 4 இடங்களுக்கு சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்தில் ஒரு ரூபாய் கொடுத்தால் 17.5 கி.மீ  பயணிக்கலாம். கொல்கத்தாவில் தற்போது பேருந்துகளில் குறைந்த கட்டண டிக்கெட்டாக 6 ரூபாய் பெறப்படுகிறது. பயணிகள் 12 ரூபாய் கொடுத்தால்தான் 17.5 கி.மீ வரை பயணிக்க முடியும். அதுவே, டெல்லியில் 4 கி.மீ செல்ல ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.  
மாட்டு சாணத்தில் இருந்து கிடைக்கும் எரிவாயுவில் மீத்தேன் அடங்கியுள்ளது. நச்சுத் தன்மையை வெளிப்படுத்தாத இந்தஎரிவாயுவை சமையலுக்கும் பயன்படுத்தலாம். ஒரு கிலோ மாட்டு சாண எரிவாயு தயாரிக்க 20 ரூபாய் செலவாகிறது. ஒரு கிலோ எரிவாயுவில்  6 கி.மீ வரை பேருந்தை இயக்க முடியும். ஜெர்மனியில் தொழில் நுட்பத்தில் ஒரு கிலோ எரிவாயுவுக்கு 20 கி.மீ வரை பேருந்தை இயக்க ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆராய்ச்சி வெற்றி பெற்றால், 80 கிலோ டேங்க் ஒரு முறை நிரப்பப்பட்டால், பேருந்தை 1,600 கி.மீ வரை இயக்க முடியும். 


தற்போது போனிக்ஸ் நிறுவனம் மேற்கு வங்கத்தில் 100 எரிவாயு நிரப்பும் மையங்களை அமைக்க அனுமதி கோரியுள்ளது. இதற்காக, போனிக்ஸ ஆராய்ச்சி மையம் மேற்கு வங்கத்தில் பிர்பாம் மாவட்டத்தில் உள்ள  தர்ப்ராஜ்பூரில் மிகப் பெரிய மாட்டு சாண எரிவாயு உற்பத்தி மையத்தை அமைத்துள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் கிலோ எரிவாயு உற்பத்தி செய்யப்படுகிறது.
போனிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் தாஸ் கூறுகையில், ''டிசம்பர் மாதத்திற்குள் இது போல் மேலும் 15 பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளோம். குறைந்தக் கட்டணத்தில் நீண்ட தொலைவு பயணிக்கலாம். இதனால் ஏழைகள் நிச்சயம் பலன் அடைவார்கள்.விளம்பர வருவாய் வழியாக பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கு சம்பளம் கொடுக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த பேருந்தில் விளம்பரம் செய்ய ஆண்டுக்கு 2 லட்ச ரூபாய்'' என்றார். 
தற்போது, இந்தியாவில் பி.எஸ் 4 (BS-IV) வாகனங்களை மட்டுமே விற்பனை செய்யவும், தயாரிக்கவும் முடியும். பி.எஸ் 4 விதிமுறைகள் மூலம் நிச்சயம் காற்று மாசின் அளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது போல மாட்டு சாண எரிவாயுவில் ஓடும் பேருந்துகள் காற்றில் எந்த மாசையும் ஏற்படுத்தாது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்ததாக வகையில் eco friendly முறையில் பேருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளன. 

No comments: