Wednesday 25 April 2018

``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்!’’ - பாலகுமாரன் #LetsRelieveStress

ழுத்துச் சித்தர் பாலகுமாரனைப் பற்றி எந்த அறிமுகமும் தேவையில்லை. எழுபதுகளில் எழுத்துலகில் கால்தடம் பதித்து, பாலகுமாரன் தீட்டிய நாவல்கள் தமிழ்ச் சமூகத்தில் பெரும் மாற்றங்களை, நிகழ்த்தியவை. `மெர்க்குரிப் பூக்கள்', `இரும்புக் குதிரைகள்', `பயணிகள் கவனிக்கவும்' என நீள்கிற பட்டியலில் `உடையார்' வரை அவர் தீட்டிய நாவல்கள் காலங்களைக் கடந்து கதைகள் பல பேசும் உயிர்ச் சித்திரங்கள். அவரிடம் ``மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி?’’ என்கிற கேள்வியை முன்வைத்தோம்.  
``எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டதே இல்லை. மன அவசங்கள் எனக்கு வந்ததே இல்லை. `ஆஹா, இனி முடிந்து போய்விட்டது. முன்னேறவே முடியாது' என்று நான் நினைத்ததில்லை. இத்தனைக்கும் நான் ஒண்ணும் நல்லவன் இல்லை. இடது, வலதாகவெல்லாம் இருந்திருக்கிறேன். 
பாலகுமாரன்
`எது செய்யினும், இந்த இடம் தாண்டிப்போகும். வேறு ஒரு காலகட்டம் நமக்கு உண்டு.  நாம் நிச்சயம் ஜெயிப்போம்’ என்கிற நம்பிக்கை. வேறு ஒரு மொழியில் சொல்லப்போனால், ஒரு மமதை எனக்குள் இருந்தது. `நாம் ஜெயிக்காமல் போனால் வேறு யார் ஜெயிக்க முடியும்?’ ஏன்... இதற்கு என்ன அடிப்படை? நான் உழைப்பாளி. கடுமையான உழைப்பாளி. மான் கால் இடறி விழுகிற வரை புலி துரத்தும். அதேபோல ஒரு செயலைச் செய்து முடிக்கிற வரை ஓய மாட்டேன். `செய்ய வேண்டும்' என்று எண்ணுவதற்கு சிறிது காலம் எடுத்துக்கொள்வேன். இறங்கிவிட்டால், செய்து முடிப்பதுதான் எனது லட்சியமாக இருக்கும். ஆக செயல் செய்வதில் ஆர்வமும் அதை நோக்கிய மும்முரமும் திறனும் இருப்பின், இந்த மன அவசம் வராது. `இனிமே நமக்கு விடியாது’னு நினைச்சவனுக்குத்தான் இது.
பாலகுமாரன்
`எவன்லாம் திட்டினானோ அவன்லாம் மண்டி போடுவான். இனி வாழ்க்கையில், யாரெல்லாம் பெரிய கொம்புனு தன்னை நினைச்சானோ அவன் இனி வாய் பொத்தி நிற்பான்' என்று எப்போது இழிவுபடுத்தப்பட்டேனோ அப்போதே நினைத்தேன். 
மிகவும் ஏழ்மையான... புத்தியில் தெளிவில்லாதபோதும் ஒரு 'வெற்றி நம்பிக்கை' இருந்தது. அண்டர்லைன்... வெற்றி நம்பிக்கை. அதற்கு எந்தவிதமான ஆதாரமுமில்லை. என்னால உழைக்க முடியும். அவ்வளவுதான் இருந்தது. உழைச்சுக்கூட பார்த்தது இல்லை. இதற்கு இன்னும் அடிப்படையாக ஒரு விஷயம். 
ஒரு பதினாறு, பதினேழு வயசு இருக்கும். ராயப்பேட்டை கௌடியா மடத்தில் ஒரு கிருஷ்ணன் கோயில் இருந்தது. அந்தக் கிருஷ்ணன் கோயில்ல ஒரு பிரம்மச்சாரி இருந்தார். அவர்கிட்ட போய், `நான் ஜெயிக்கணும். அதுக்கு நான் என்ன செய்யணும்?’ அப்படினு கேட்டேன். `எனக்கென்ன தெரியும்? எனக்கொண்ணும் தெரியாது. நானே இங்கேதான் கத்துக்க வந்திருக்கேன். நீ வேணா போய் கிருஷ்ணரைக் கேளு’ன்னார். 
பாலகுமாரன்
கிருஷ்ணர்கிட்ட போய் கேட்டா, அவர் ஒண்ணும் பேசுற மாதிரி தெரியலை. திரும்பவும் அந்தப் பிரம்மச்சாரிக்கிட்டேயே வந்தேன். என்ன... அவருக்கொரு 25 வயசிருக்கும். எனக்கு 18 வயசு. அந்தப் புள்ளையாண்டன், `எனக்குத் தெரிஞ்சதைச் சொல்லித் தர்றேன். `கிருஷ்ணா கிருஷ்ணா'னு இடையறாது 100 தடவை கோயிலைச் சுற்று... ஏதோ ஒண்ணு தெரிஞ்சு போயிடும்’னு சொன்னார். அந்தக் கோயிலைச் சுற்ற ஆரம்பிச்சேன். நூறு தடவை சுற்றி இருக்க மாட்டேன். 68 தடவையோ 69 தடவையோதான் சுற்றி இருப்பேன். அவ்வளவுதான்.
அயர்ச்சியோடு, என்னமோ மனசுக்குள்ள ஒரு சந்தோஷம் பரவியது. மூச்சு பெருசா கனத்து வாங்கியது. இழுத்து இழுத்து மூச்சு வாங்கியது. தள்ளியிருந்த பிரம்மச்சாரி அருகில் வந்து, `இப்போ மூச்சை இழுத்து இழுத்து விடுகிறாயே, இதுதான் வித்தை’ன்னார். 
`சுற்றி வந்ததாலதானே மூச்சை இழுத்து மூச்சை விடுறே. இப்போ சுற்றி வராம நின்ற இடத்திலேயே அதே அளவு மூச்சை இழுத்து, மூச்சை விடு. கணக்கெல்லாம் ஒண்ணும் வேணாம். நுரையீரல் முழுவதும் நிரம்பும் வரை இழுத்து நிறைந்ததும், மொத்தமா விட்டுவிடு. அப்போ நுரையீரல் தவிக்கும். வேகமாக இழுக்கும்.’ 
பாலகுமாரன்
நான் அதைத்தான் பண்ணினேன். நுரையீரல் முழுவதையும் காலிசெய்ய, நுரையீரல் தவித்தது. காற்றை முழுவதும் இழுத்தது. எப்படி இழுக்கும்? வேகமாக இழுக்கும். கடைசி அறை வரை சென்று நங்னு போய் இடிக்கும். நுரையீரலைப் பெரிதுபடுத்தியது. ரத்த ஓட்டத்தை அதிகரித்தது. மூளையைச் சுறுசுறுப்பாக்கியது. 
நண்பர்களே! அப்போது நான் ஓர் அலுவலகத்தில் வேலை பார்த்துவந்தேன். வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும், இரவு 12 மணி வரை படிப்பேன். பிறகு தூங்குவேன். காலை 5 மணி வரை தூக்கம். அதன் பிறகு யோகா, மூச்சுப்பயிற்சி செய்து முடித்ததும், மீண்டும் விட்ட இடத்திலிருந்து படிப்பேன். காலை ஏழு மணிக்கு குளிச்சிட்டு, ஏழரை மணிக்கெல்லாம் புறப்பட்டு அலுவலகம் போய்விடுவேன்.  படிப்பு, எழுத்து, யோகாசனம் இவை மூன்றும் கிரமமாக இருந்தன.
பாலகுமாரன்
வயிறு நிரம்பச் சாப்பிடறதே இல்லை. விரும்பி ஆசைப்பட்டு, `ரொம்ப ருசி, ரொம்ப ருசி'னு சாப்பிடறதே இல்லை. அது என்னவோ ஆரம்பத்திலிருந்தே அதை எதனாலோ நான் தடுத்து வைத்திருந்தேன். சாப்பாடுன்னா கடகடனு மூணு நிமிஷத்துல சாப்பிட்டு  கை அலம்பிடணும். அதை நக்கி நக்கித் திங்கிறதுன்னா எனக்கே என்னைப் பார்த்தா அருவருப்பு வரும். ருசியைப் பத்தி யாருகிட்டயும் பேசுறதுகூட அருவருப்புனு தோணும். `இன்னிக்கு நீ ரொம்ப நல்லா பண்ணி இருக்கே. வத்தக்குழம்பு...' அப்படினெல்லாம் சொல்ல மாட்டேன்.


இலையில விழுந்தது. நன்னா இருக்கோ நன்னா இல்லியோ சாப்பிட்டு முடிச்சிடுவேன். அது பத்தி அபிப்பிராயமே சொல்லக் கூடாது. பசிக்குச் சோறு, அவ்வளவுதான். அதை வாய் நிறையவெச்சிக்கிட்டு பேசுறதுங்கிறது உலக மகா ஆபாசம். உணவு பத்தின சாக்கியம் இல்லாதபோது உழைப்பு பற்றிய எண்ணம் அதிகரிக்கும். 
சாப்பிட்டதும் சின்ன இளைப்பாறுதல். தூக்கம் கிடையாது. ஒரு பதினைஞ்சு நிமிஷத்துல ரெடியாகிடுவேன். ரொம்ப நல்லா இருக்கும். சில சமயம் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாள் விடுமுறையாக இருக்கும். இரவு ரெண்டு மணி வரை எழுதலாம், படிக்கலாம்னு இருப்பேன். ஏதோ ஒரு லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருப்பதால் மன அழுத்தம், மன அவசம் ஏற்படுவதில்லை. 
எனக்கொரு வித்தை தெரியும். அந்த வித்தை காசு கொடுக்குமா, கொடுக்காதா? அது எனக்குத் தெரியாது. ஆனா, `ஐ வில் பி தி பெஸ்ட்மேன்'. இந்த வித்தை எனக்குக் கைவந்தது. அதுக்கு என்ன பண்ணணும்? திரும்பத் திரும்ப எழுதணும். `மெர்க்குரிப் பூக்கள்' நாவலை, கிட்டத்தட்ட 400 பக்கங்கள் உள்ள நாவலை... மூன்று முறை திருப்பித் திருப்பி எழுதினேன். அப்போ ஒரு பர்ஃபெக்‌ஷன் கிடைச்சுது. அப்போதுதான் நாவல் எழுதுவதன் அடிப்படை எனக்குப் புரிந்தது. இதுதான் வித்தை கத்துக்கிற நேரம். வித்தை கத்துக்க நினைப்பவன் சோம்பலுக்கு இடம் கொடுக்கவே கூடாது. 
பாலகுமாரன்
யார் சோம்பித் திரிகிறான் என்றால், எவன் அதிகம் உண்கிறானோ அவன் சோம்பித் திரிவான். எவன் ருசித்து உண்கிறானோ, அவன் சோம்பித் திரிவான். நல்லா வயிறு பிடிக்கச் சாப்பிட்டு வந்துவிட்டால், உட்காரத் தோன்றும். சாயத் தோன்றும். தூங்கத் தோன்றும். ராத்திரி தூங்கவேண்டிய நேரத்துலகூட நான் தூங்கறதில்லை. `ஹேய், பாலகுமார்' அப்படின்னா டக்குனு எழுந்திரிச்சிடுவேன்.
உடம்பு அப்படியே துடிப்புலேயே இருக்கும். அதுக்குக் காரணம் மூச்சுப்பயிற்சி. குறைவாக உண்ணுதல். குறைவாகப் பேசுதல். `எனக்கு 28 வயசு, சிநேகிதக்காரங்க கூட ஒண்ணா சினிமாவுக்குப் போவோம்.' சரி. என்ன இருக்கு இதுல? 
`அந்தப் படம் மூணு தடவை பார்த்துட்டேன்டா. பரவாயில்ல வா, நாலாவது தடவை பார்க்கலாம்'னு ஒருத்தன் சொன்னா... தரித்திரம்னா இது. ஒரு படத்தை சிநேகிதக்காரனுக்காக நாலாவது தடவை பார்க்கிறான்னா அவன் பரம தரித்திரன். அவன் நேரம்கொல்லி. 
பசித்திருத்தல், மௌனமாக இருத்தல், விழித்திருத்தல். நாலு மணி நேரம் தூக்கம் போதும் சார். ஒரு வாலிப வயசுல நாலு மணிநேரத் தூக்கம் போதும். மத்திம வயசுல ஆறு மணி நேரம். என்னை மாதிரி 75 வயசாயிடுச்சா? அப்போ எட்டு மணி நேரம் தூங்கலாம். அதுவே எங்கே தூங்குறேன்? அதுல ரெண்டு மணி நேரம் முழிச்சிக்கிட்டு உட்கார்ந்திருப்பேன்.
ஆக, என்னை நான் உற்றுப் பார்க்கிற நேரம் அதிகரிக்கிறது. `பாலகுமாரன் என்ன பண்ற நீ? ஏதோ சின்ன கோபம் இருக்கே... அது என்ன கோபம்?’ அந்தக் கோபத்தை நான் அப்படியே பிளந்து போட்டுவிடுவேன். 
யாரோடு பேசுவதற்கு ஒண்ணும் இல்லைனு தோணுதோ, அவன் கத்துக்கிறதுக்கும் ஒண்ணுமில்லைனு அர்த்தம். இது வந்துடுச்சுனா... இந்தத் தெளிவு இருபது வயதில் வந்துவிட்டால், யாரோடு பேச வேண்டும், எப்படிப் பேசவேண்டும், எப்போது பேச வேண்டும், எவ்வளவு நேரம் தூங்க வேண்டும், எவ்வளவு நேரம் விழித்திருக்க வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிடக் கூடாது, எப்போது மற்றவர்களோடு பேச வேண்டும்,  எப்போது தன்னோடு பேச வேண்டும் என்கிற தெளிவு நமக்கு இருக்க வேண்டும். 
`சார், இன்னிக்கு முழுக்க நீங்க சொன்ன மாதிரி இருந்தேன். ஆனா, நான் ஜெயிக்கலியே சார்'னு கேட்டால், இன்னிக்கு இல்லைனா பரவாயில்லை. நாளைக்கு நீ ஜெயிப்பே. ஒரு ரிசல்ட் வருவதற்கு நாலு வருஷம் அஞ்சு வருஷம் ஆகும். ஜெயிக்கணும்ங்கிற முயற்சி அந்த மனக்கிலேசத்தைத் தீர்க்கும். 
பாலகுமாரன்
`வேலை இருக்கே’னு நொந்துக்கிறதுக்கெல்லாம் நேரமே கிடையாது. `ஐ திங் ஐ யம் எ ஃபெயிலியர்' இப்படி அழுவுறதுக்கே நேரம் கிடையாது. ஒண்ணு எழுதணும்... இல்லை படிக்கணும். இல்லை வேற ஏதாவது செய்யணும். நீங்க சேல்ஸ் ரெப்ரசென்டேட்டிவா? விற்ற கடைக்கே மறுபடியும் போங்க. `சும்மா வந்தேன் அண்ணாச்சி... நல்லா இருக்கீங்களா?' அப்படினு கடைக்காரங்ககிட்ட பேசுங்க. எந்த நேரமும் சேல்ஸ் ரெப்ரசென்டேட்டிவாகவே இருங்க. 
ஆசிரியரா... எந்த நேரமும்  ஆசிரியராக இருங்கள். மனதுக்குள் பாடம் நடத்திக்கொண்டே இருங்கள். நீங்கள் டான்ஸ் மாஸ்டரா? உள்ளே ஜதி போட்டுக்கொண்டே இருக்கணும். இதுதான் தன்னுடைய செயலோடு ஒன்றிப் பிணைந்திருத்தல். அவனுக்கு மன அழுத்தம் மன அவசம் வராது. எவனுக்குச் செய்வதற்கு ஒன்றுமில்லையோ, எவன் சோம்பலின் உச்சகட்டமோ அவனுக்கு எல்லாவித மன அழுத்தமும் வரும். எனவே, நீங்கள் உங்களை ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்'' எனக்கூறி விடை கொடுத்தார்.

No comments: